தேவனுக்கேற்ற துக்கம்

 ஆதவன் 🖋️ 652 ⛪ நவம்பர் 10,  2022 வியாழக்கிழமை

"இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே." ( 2 கொரிந்தியர் 7 : 9 )

இன்றைய ஆசீர்வாத ஊழியர்கள் மக்கள்  எப்போதும் மாயையான மகிழ்ச்சியில் இருக்கவேண்டும் என்பதற்காக பொய்யான தீர்க்கத்தரிசன வாக்குறுதிகளையும், ஆசீர்வாதங்களையும் கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அப்போஸ்தலரான பவுல் அப்படிப்பட்டவரல்ல. தேவன் தனக்கு வெளிப்படுத்துவதையும், மக்கள் மனம் திருப்ப வேண்டியதன்  அவசியத்தையும் தயக்கமின்றி மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார். இது பலருக்கு துக்கமான காரியமாக இருந்தது. 

பொதுவாகவே மக்களுக்குத் தங்கள் தப்பிதங்களையும் பாவங்களையும் பிறர் எடுத்துக் கூறுவது பிடிக்காது. எப்போதும் மற்றவர்கள் தங்களை புகழவேண்டும் என்றே பலரும் விரும்புவார்கள்.  தங்களிடம் வரும் விசுவாசிகளது தவறுகளும் பாவங்களும் தெரிந்தாலும், பல போதகர்கள் அவர்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லி அவர்களது தவறைத் திருத்த முயல்வதில்லை. காரணம் அப்படிச் செய்தால் தங்களது சபைக்கு வருவதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள். அதனால் தங்களுக்கு வரும் காணிக்கைகளும் குறைந்துவிடும். ஆனால் பவுல் அடிகள் வேறு எந்த ஆதாயத்தையும் விரும்பாமல் மக்களது ஆத்துமாக்களின்மேல்  மெய்யான அன்பு கொண்டிருந்ததால் அவர்களைக் கண்டித்து தவறுகளையும் பாவங்களையும் உணர்த்தினார். 

இப்படி பவுல் கண்டித்து உயர்த்தியதால் துக்கமடைந்த பலர் பின்னர் மனம் திரும்பினார்கள். இது பவுலுக்கு மன மகிழ்சியைக் கொடுத்தது. எனவேதான், "இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்" என்று கூறுகின்றார். 

ஆம், "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." ( 2 கொரிந்தியர் 7 : 10 )

அதாவது நமது பாவம், மீறுதல்கள் இவைகளைக் குறித்து தேவனுக்கேற்ற துக்கம் கொண்டோமானால் மனம் திரும்புதல் ஏற்படும். எப்போதும் உலக காரியங்களைக் குறித்துத் துக்கப்பட்டுக் கொண்டிருந்தால் அது மரணத்தையே உண்டாக்கும். 

இயேசு கிறிஸ்து தனது மலைப் பிரசங்கத்தில் கூறியது ஆவிக்குரிய துக்கதைக்குறித்துதான். "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்றார் இயேசு கிறிஸ்து. பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கும். அது எப்படி துயரப்படுபவர்கள் பாக்கியவான்களாய் இருக்க முடியும்? என்று எண்ணுவார்கள். அது அப்போஸ்தலரான பவுல் கூறும் ஆவிக்குரிய துக்கம் தான். பவுல் கூறுவதுபோல அது இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது. நரகத்துக்கு நேராகச் செல்லும் மனிதர்கள் இந்த ஆவிக்குரிய துக்கம் அடைவதால் நரகத்துக்குத் தப்புவார்கள். எனவேதான் இயேசு கிறிஸ்து துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என்றுகூறினார். 

நமது பாவங்கள் மீறுதல்கள் இவைகளைக்குறித்து துக்கப்படுவோம். தேவனிடம் மன்னிப்பு வேண்டுவோம். அப்போது நமது துக்கம் சந்தோஷமாக மாறும். ஆம், மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காக அப்போது சந்தோஷப்படுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்