தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் ஜெபம்

 ஆதவன் 🖋️ 665 ⛪ நவம்பர் 23,  2022 புதன்கிழமை

"அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18 : 7 )

மறுவுலக வாழ்வையே முக்கியப்படுத்தி நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தவே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். ஆனால் பொதுவாக கிறிஸ்தவர்கள் அனைவருமே இயேசு கிறிஸ்து கூறிய வசனங்களுக்கும் உவமைகளுக்கும் உலகச் சம்பந்தமான பொருளையே எடுத்துக்கொள்கின்றனர்.

அப்படி மக்கள் தவறுதலாகப் பொருள்கொள்ளும் வசனங்களில் ஒன்றுதான் இன்றைய வசனம்.  சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து மக்களுக்கு விளக்குவதற்கு இயேசு கிறிஸ்து தேவனுக்குப் பயப்படாத, மனிதர்களை மதியாத நியாதிபதி ஒருவனைக் குறிப்பிட்டுப்  பேசுகின்றார். இந்த அநீதியான நியாதிபதியிடம் ஒரு விதவை தனக்கு நியாயம் வேண்டி தொடர்ந்து மன்றாடுகின்றாள். அவளது உபத்திரவம் பொறுக்கமுடியாமல் அந்த அநீதியான நியாதிபதி அவளுக்கு நீதி வழங்குகின்றான். 

அதாவது இந்த விதவையைப்போல தேவனை நோக்கி இரவும் பகலும் நாம் தொடர்ந்து மன்றாடினால் நமது ஜெபத்தை தேவன் கேட்பார். என்று கூறினார் இயேசு கிறிஸ்து. 

இந்த உவமையை எல்லோரும் தங்களுக்காக இயேசு கூறியதாக எண்ணி, தொடர்ந்து தங்களது உலகத் தேவைகளை தேவனிடம் கூறினால் அவை நிறைவேறும் என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், தெளிவாக வாசிக்கும்போது இயேசு கூறுவது புரியும். எல்லோரது ஜெபத்தையும் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடாமல், "தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில்" என்று கூறுகின்றார். 

அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது கற்பனைகளின்படி வாழும் மீட்பு அனுபவம் பெற்றவர்கள். அத்தகைய மனிதர்கள் வேண்டுதல் செய்யும்போது தேவன் அதனைக்கேட்டு பதில் தருவார் என்கின்றார். அவரிடம் உலகத் தேவைகளுக்காக விண்ணப்பம் செய்யவேண்டுமென்றோ அப்படி  விண்ணப்பம்பண்ணும் உலகத் தேவைகள் எல்லாவற்றையும் அவர் தருவார் என்பதற்கோ  இயேசு கிறிஸ்து இந்த உவமையைக் கூறவில்லை. 

ஆவிக்குரிய மனிதர்கள் எப்போதும் தங்களது உலகத் தேவைகளைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்தித்து அவற்றுக்கே முன்னுரிமைகொடுத்து வேண்டுதல் செய்வார்கள். 

அப்போஸ்தலரான யாக்கோபு எனவேதான், "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்." ( யாக்கோபு 4 : 3 ) என்று கூறுகின்றார். மட்டுமல்ல, "விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்." ( யாக்கோபு 4 : 4 ) என்று கோபத்தில் கூறுகின்றார். 

அன்பானவர்களே, வேதாகமம் ஆவிக்குரிய புத்தகம். அதனை சாதாரண உலகப் புத்தகம்போலப் படித்து நாம் தவறான அர்த்தங்களைக்கொண்டு வாழக்கூடாது. தேவன் நமது ஜெபத்தைக் கேட்கவேண்டுமானால் முதலில் நாம் மனம்திரும்பி ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ வேண்டும். அப்படி வாழும்போது நாம் ஆவிக்குரியவிதமான விண்ணப்பங்களைச் செய்வோம். அவர் அவைகளை நிறைவேற்றுவார்.  மட்டுமல்ல, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 )" என்று இயேசு கூறியவாறு உலக ஆசீர்வாதங்களையும்  அவர் நமக்குத் தந்து ஆசீர்வதிப்பார். . 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்