அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்

 ஆதவன் 🖋️ 648 ⛪ நவம்பர் 06,  2022 ஞாயிற்றுக்கிழமை

"அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்." ( தீத்து 1 : 11 )

இங்கு பவுல் அடிகள் கிறிஸ்துவின் கிருபையினால் வரும் மேலான ஆத்தும இரட்சிப்பு பற்றி போதியாமல் தகாதவைகளைப் போதிக்கும் போதகர்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்.  இன்று பெரும்பாலான போதகர்கள் தகாத போதனைகளையே போதிக்கின்றனர். காரணம் இழிவான ஆதாயத்துக்காக. 

கன்வென்சன் கூட்டங்களில் மட்டுமல்ல,  முகநூல், வாட்சாப் போன்ற சமூக ஊடகங்களிலும் இன்று இத்தகைய போதனைகளே பெருகியுள்ளன. இத்தகைய போதனைகள் யாரையும் இரட்சிப்புக்கு நேராக நடத்துவதில்லை; மாறாக இவை சாதாரண மத பிரசங்கங்களாகவே இருக்கின்றன. அதாவது எல்லா மதங்களிலும் அவர்களது மத போதனைகளைக் கூறுவதுபோல இவர்களும் போதிக்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் சுவிசேஷம் சாதாரண நீதிபோதனையல்ல; அது மீட்புக்கு நேராக மனிதர்களை நடத்துவது.

இத்தகைய பிரசங்கிகளின்  போதனைகள் பெரும்பாலும் நியாயப்பிரமாண கட்டளைகளை முக்கியப்படுத்தியவையாகவே  இருக்கும்.  இவர்களைக்குறித்தே இன்றைய வசனத்தைப் பவுல் அடிகள் கூறுகின்றார்.   இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனத்தில் இதனைத்தான் அவர்,  "அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்". ( தீத்து 1 : 10 ) என்று குறிப்பிடுகின்றார். 

இவர்கள்தான் இழிவான ஆதாயத்திற்காக தகாதவைகளை உபதேசித்து முழு குடும்பத்தையும் கவிழ்த்துப்போடுபவர்கள். மீட்பின் பாதையை மக்கள் அறியாதபடி தடைக்கற்களாய் இருக்கின்றவர்கள். இவர்களது போதனைகள் பெரும்பாலும் உலக ஆசீர்வாதங்களை முன்னிலைப்படுத்துபவையாகவும் காணிக்கையை மையப்படுத்தியவையாகவும் இருக்கும். 

அதாவது, காணிக்கைகள் அதிகம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தவறான உபதேசங்களை மக்களுக்குப் போதிப்பவர்கள். உதாரணமாக இன்று எழும்பியுள்ள  நூதன பிரபல பிரசங்கிகள்.  இவர்கள் ஆயிரம் ரூபாய் காணிக்கை அளித்தால் ஒரு லட்சமாக தேவன் அதனைத் திருப்பித் தருவார்;  இரண்டாயிரம் கொடுத்தால் இரண்டு லட்சமாக திருப்பித் தருவார் என்று, தேவனை ஏமாற்று பைனான்ஸ் கம்பெனிகளுக்கு ஒப்பிட்டு பிரசங்கிப்பவர்கள். இவர்கள் முழு குடும்பத்தையுமல்ல, முழு தேசத்தையும் கவிழ்த்துப்போடும் தீய சக்திகள். 

இன்றைய வசனத்தில் "அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்" என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல்.  எப்படி அடக்குவது? அது ஜெபத்தினாலும் சரியான வேத விளக்கங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாலுமே முடியும். அதற்கு முதலில் நமக்கு தவறான போதனைகளைச் செய்பவர்கள்மேல் ஆவிக்குரிய கோபம் வரவேண்டும். 

ஊழியம் என்பது தேவனுக்குரியது. தேவன் நமது தகப்பன். எனவே நமது தகப்பனுக்குரிய வேலையை அவமரியாதையோடு செய்பவர்கள்மேல் குமாரர்களாகிய, குமாரத்திகளாகிய  நாம் கோபம்கொள்வதில் தவறில்லை. (ஆனால் நாம் முதலில் தேவனது மகனாக மகளாக வாழவேண்டும்).

அன்பானவர்களே, முதலில் நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோம். பிற்பாடு தவறான போதனைகளை மக்களுக்கு அடையாளம்காட்டுவோம். ஜெபத்தில் தேவனோடு ஐக்கியப்பட்டிருப்போம். அப்போது குடும்பங்களைக்  கவிழ்த்துப்போடும்  தகாத உபதேசிகள் மறைந்துபோவார்கள்; ஆம் பவுல் கூறுவதுபோல அவர்களது வாய் அடக்கப்படும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்