DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, November 03, 2022

"நானே வழி"

 ஆதவன் 🖋️ 646 ⛪ நவம்பர் 04,  2022 வெள்ளிக்கிழமை

"அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 )

இன்றைய சுவிஷேச கூட்டங்களில் பல்வேறுவகை ஊழியர்களை நாம் பார்க்கலாம். நடனமாடிகள், பாடகர்கள், ஆறுதல்படுத்துபவர்கள், ஆசீர்வாதங்களையே போதிப்பவர்கள், நாட்டு நடப்புகளை பேசுபவர்கள், நீதிபோதனைகள் செய்பவர்கள், வெட்டிக்கதை பேசுபவர்கள்  என இந்தப் பட்டியல் நீளும். 

ஆனால் ஒரு உண்மை  போதகன் மக்களை மனம்திரும்புதலுக்கேற்ற வழியில் நடத்துபவனே. ஆனால் அப்படிப் பேசினால் கூட்டம் சேராது, காணிக்கையும் வராது என்பதால் மக்களைக் கவரும் மேற்படி கூறப்பட்ட கவர்ச்சி போதகர்கள் கிறிஸ்தவத்தில் எழும்பியுள்ளனர். இவர்களது போதனைகளால் மக்களுக்கு எந்த ஆவிக்குரிய பயனும் ஏற்படுவதில்லை. 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் "அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து" என்று கூறுகின்றது. அப்போஸ்தலரான பவுல் அடிகள் ரோமையில் விசாரணைக் கைதியாக இருக்கும்போது தனது வாதங்களை எடுத்துக்கூறும்போதும் சுவிசேஷ அறிவிப்பாகவே அதனைச்செய்தார். பவுல் அடிகளின் பேச்சு நீதி, இச்சையடக்கம், நித்திய நியாயத் தீர்ப்பு இவைகளைப்பற்றியே இருந்தது.   

ஆனால், பேலிக்ஸ் இவைகளைக்கேட்டு பயமடைகின்றான். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். அதுபோல நீதி, நியாயம், இச்சையடக்கம் இவை எதுவும் அவனிடம் இல்லாததால் பேலிக்ஸ் பயமடைந்தான். அவனுக்கு அதற்குமேல் பவுலின் வாதங்களைக் கேட்க மனதில்லை. எனவே, இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்று கூறி பவுலை அனுப்பிவிடுகின்றான்.

அன்பானவர்களே, இதுதான் இன்றைக்கும் நடக்கின்றது. கன்வென்சன் கூட்டங்களில் சென்று ஆடிப்பாடி துள்ளிக் குதிக்கும் பலரிடம் உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை இல்லாததால் மெய்யான சுவிசேஷ அறிவிப்புகளை இவர்கள் கேட்க முன்வருவதில்லை. பாடல்களை ரசிக்கிறார்கள்; ஆடல்களை ரசிக்கின்றார்கள்; அவரைவிட இவர் நன்றாகக் பாடுகின்றார் என்கின்றார்கள்.  ஆனால், பேலீக்ஸைப்போல  மெய்யான சுவிசேஷ அறிவிப்புகளுக்குப் பயப்படுகின்றார்கள்; வெறுக்கிறார்கள்.

சபை ஆராதனை பல விசுவாசிகளுக்கு ஞாயிறு பொழுதுபோக்குபோல் மாறிவிட்டது. எனவே அவர்கள் கடினமான மெய்யான உபதேசங்களுக்குச் செவிகொடுப்பதில்லை. 

இதனையே அன்று அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீமோத்தேயுக்கு கூறினார். "ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்." ( 2 தீமோத்தேயு 4 : 3, 4 ) என்று. பவுல் கூறிய அந்தக் காலம்தான் இப்போது நடந்துகொண்டிருக்கின்றது.

அன்பானவர்களே, உண்மைக்கும் சத்தியத்துக்கும் செவிகொடுக்கும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவை அறிய முடியும். சத்தியம் கசப்பானதாக இருந்தாலும் சத்தியம் மட்டுமே நம்மை விடுவிக்க முடியும். "சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"  ( யோவான் 8 : 32 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

நமக்குத் தேவை ஆடலும், பாடலும், துள்ளலும், ஆசீர்வாத வார்த்தைகளுமல்ல. மெய் ஆசீர்வாதத்துக்கான வழிதான் நமக்குத் தேவை. அந்த வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை அர்ப்பணிப்பதால் மட்டுமே நமக்கு வெளிப்படும். ஆம், எனவேதான் "நானே வழி" என்று ஆணித்தரமாக நமக்கு அவர் கூறியுள்ளார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: