திரு விருந்து

 ஆதவன் 🖋️ 668 ⛪ நவம்பர் 26,  2022 சனிக்கிழமை

"எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்." ( 1 கொரிந்தியர் 11 : 28 )

கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் அவர் வருமளவும் உட்கொண்டு அவரது மரணத்தையும் உயிர்ப்பையும்  அறிக்கையிடுவது கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்து கொடுத்தக் கட்டளை. "என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்" (லூக்கா 22:19) என்று கூறினார்.  இப்படிச் செய்வது கிறிஸ்து நமக்காகத் தனது உடலையும் இரத்தத்தையும் பலியாகக் கொடுத்தார் என்பதை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுவதாகும். 

ஆனால், இது வெறும் சடங்குபோன்றதல்ல. கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் நாம் உட்கொள்வது மெய்யாகவே கிறிஸ்துவோடு நாம் பங்குள்ளவர்கள் என்று அறிக்கையிடுவதாகும்.  

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "எந்த மனுஷனும் தன்னைத்தான் சோதித்தறிந்து இந்த ஆப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்" என்று கூறுகின்றார். ஆம், கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்ள நமக்குத் தகுதி இருக்கின்றதா என்று சோதித்து அறிந்து உட்கொள்ளவேண்டும்.  

இப்படிக் கூறும் பவுல் அடிகள், தவறுதலாக அல்லது தகுத்தியில்லாமல் நாம் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வது நம் உடலையும் பாதிக்கும் என்கின்றார். அதாவது தகுதியில்லாமல் உட்கொள்வது நோய்  ஏற்படக்கூடவும் மரணம் ஏற்படவும் ஏதுவாகலாம் என்கின்றார். "இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்." ( 1 கொரிந்தியர் 11 : 30 )

அன்பானவர்களே, கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்ப்பையும் நாம் நற்கருணை உண்ணும்போது அறிக்கையிட்டாலும் தகுதியான உள்ளத்துடனும் பரிசுத்தத்துடனும் அதனை நாம் உண்ணுவது தேவையாயிருக்கின்றது.

நான் முன்பு ஆராதனைக்குச் செல்லும் சபைப் போதகர் அப்பமும் ரசமும் கொடுக்குமுன் அனைவருக்கும் தெளிவான விரிவான விளக்கம் கொடுப்பார். அவர் அப்படி விளக்கமளித்தபின்னர் பார்த்தால் பாதிக்குமேற்பட்டவர்கள் அடுத்த முறை எடுத்துக்கொள்ளலாம் என்று திரும்பிவிடுவார்கள். இதுபற்றி ஒருமுறை தனியே அந்த பாஸ்டரிடம் பேசியபோது கூறினார், "கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வது விளையாட்டல்ல, வருகின்றவர்கள் அனைவர்க்கும் போதிய விளக்கம் அளிக்காமல் நான் கொடுத்தேனானால் நானும் தேவனுக்குப் பதில்சொல்லியாகவேண்டும்." 

அன்பானவர்களே, இதுவரை தெரியாமல் நாம்  நம்மை ஆராயாமல் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொண்டிருந்தால் அவரிடம் மன்னிப்பு வேண்டுவோம். இனி நம்மை நாமே நிதானித்து அறிந்து, நமது மனச்சாட்சி நம்மைக் குற்றமில்லாமல் தீர்த்தால் மட்டுமே உட்கொள்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்