DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, November 22, 2022

தேவ வல்லமை

 ஆதவன் 🖋️ 666 ⛪ நவம்பர் 24,  2022 வியாழக்கிழமை

"மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்". ( லுூக்கா 18 : 27 )

நாம் மனித அறிவினால் எல்லாவற்றையும் சிந்திக்கின்றோம். ஏனெனில் நாம் வாழும் சூழ்நிலை நம்மை அப்படிதான் சிந்திக்கத் தூண்டும். எனவேதான் நம் பல வேளைகளில் பிரச்னைகளைப் பார்த்துப்  பயந்து திகைக்கின்றோம். இயேசு கிறிஸ்து கூறும் இன்றைய வார்த்தைகள் நமக்கு கர்த்தர்மேல் நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆம், தேவன் காலம், நேரம் இவைகளுக்கு அப்பாற்பட்டவர். அவரால் எல்லாம் கூடும்.

இயேசு செய்த அற்புதங்களில் மிகப்பெரிய அற்புதம், மரித்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட லாசரை நான்கு நாட்களுக்குப்பின்  உயிர்ப்பித்தது. ஒருவர் மரித்து இரண்டாம் நாளே அந்த உடலிலிருந்து துர் நாற்றம் வந்துவிடும். நான்காம் நாளில் சதைகள் அழுகிவிடும். ஆனால், அந்த அழுகிய உடலை தனது வார்த்தையால் எழும்பச் செய்தார் இயேசு கிறிஸ்து. ஆம், மனிதனால் கூடாதவைகள் தேவனால் கூடும்.   

நித்திய ஜீவனைக்குறித்தும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதைக் குறித்தும் பேசும்போது இயேசு கிறிஸ்து, "ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்." ( லுூக்கா 18 : 25 ) அதாவது செல்வந்தர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்பது இதன் பொருள். 

ஆனால், இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளைக் கேட்டு மக்கள் அவரிடம் , "ஆண்டவரே, அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்படக்கூடும்?"  என்றார்கள். அவர்களுக்கு மறுமொழியாகத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தைக் கூறினார். அதாவது மனிதர்களால் இது முடியாததுபோலத் தெரியலாம் ஆனால் மரித்த லாசரை உயிர்பித்ததுபோல தேவனால் இது முடியும்.  

ஆனால், இதற்கு ஒரு நிபந்தனையை இயேசு கூறுகின்றார்.  "எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்". ( லுூக்கா 18 : 17 ) அதாவது, ஒருவன் மனம் திரும்பி சிறு பிள்ளையைப் போன்ற மன நிலையினை அடைவானென்றால் அவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். 

தேவனை ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் பிச்சைக்காரர்களல்ல. ஆபிரகாம் மிகப்பெரிய செல்வந்தன். தாவீது மிகப்பெரிய ராஜா.  எசேக்கியா ஒரு ராஜா. இதுபோல புதிய ஏற்பாட்டிலும் இயேசுவின் மறைமுக சீடனாயிருந்த அரிமத்தியா ஊர் யோசேப்பு ஒரு செல்வந்தன்.  மேலும் இயேசு உலகினில் இருந்தபோது பல  செல்வந்த பெண்கள் அவரோடு இருந்து ஊழியத்துக்கு உதவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏரோது ராஜாவின் செயலாளரான கூசாவின் மனைவியும் அவர்களுள் ஒருத்தி.   "ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்." ( லுூக்கா 8 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

பரலோக ராஜ்யத்தில் நுழைய பணம் ஒரு அளவுகோலல்ல. ஏழையாக இருந்து அவருக்கு ஏற்பில்லாத செயல்களில் ஈடுபட்டு ஒருவர் நரகத்துக்கு நேராகச் செல்லலாம். அதுபோல செல்வமுள்ள ஒருவர் தேவ நோக்கமறிந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை  வாழ்ந்து பரலோக ராஜ்யத்தைச் சேரலாம்.  

மேலும் இன்றைய வசனம் உலகப் பிரச்சனைகளை எண்ணிக் கலங்கி நிற்பவர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வசனமாகும். நம்மை அழுத்தும் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லாததுபோலத் தெரியலாம் ஆனால் நாம் கலங்கிடத் தேவையில்லை. நமது விசுவாசத்தை உறுதிப்படுத்த இன்றைய வசனம்  உதவிடும். 

இஸ்ரவேல் மக்கள் பார்வோனுக்குத் தப்பிவிட வழியே இல்லாத சூழ்நிலையில்  செங்கடலைப் பிளந்து வழியுண்டாக்கி அவர்களை    தேவன் காப்பாற்றவில்லையா?  எனவே பிரச்சனைகள், துன்பங்கள் இவைகளை எண்ணிக் கலங்கவேண்டாம். பிரச்சனைகளுக்கு ஊடாக தேவன் இருக்கின்றார் என்பதை விசுவாசியுங்கள். தேவன் நமக்கு விடுதலை தருவார்.  ஆம், மனுஷரால் கூடாதவை தேவனால் கூடும்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: