சூழ்நிலைகளை மாற்றவல்ல தேவனையே நோக்கிப்பார்ப்போம்

 ஆதவன் 🖋️ 649 ⛪ நவம்பர் 07,  2022 திங்கள்கிழமை

"தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது." ( சங்கீதம் 63 : 1 )

இன்றைய தியானத்துக்குரிய இந்தச் சங்கீத வசனம் இது எழுதப்பட்டப் பின்னணியோடு பார்க்கும்போது நமக்கு மேலும் ஆழமான நம்பிக்கையைத்தரும் வசனமாகும். அதிகாலையில் தேவனைத் தேடுவது நம்மில் பலரும் செய்யும் காரியம்தான். ஆனால், தாவீது இந்த சங்கீதத்தை எழுதிய பின்னணியினை பார்க்கும்போதுதான் இதன் அருமை புரியும். 

இந்த சங்கீதத்தைத் தாவீது தனது முப்பது வயதுக்குள் எழுதியிருக்கவேண்டும். காரணம், தாவீது தனது முப்பதாவது வயதில் ராஜாவானார். இந்தச் சங்கீதம் அதற்குமுன்பாக அதாவது, அவர் சவுல் ராஜாவுக்குப் பயந்து தனது உயிரைக் காத்துக்கொள்ள வனாந்தரத்தில் இருந்தபோது எழுதியது. இந்தச் சங்கீதத்தின் துவக்கத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம், இது சுகமான அறையில் உட்கார்ந்து எழுதப்பட்ட வசனமல்ல. 

இன்று முப்பது வயதுக்குள் சினிமா நடிகர்கள்பின் ஓடும் இளைஞர்களை நாம் பார்க்கின்றோம். ஆனால் தாவீது இந்த இளம் வயதிலேயே தேவனைத் தேடினார். அதிகாலமே எழுந்து கர்த்தரை ஆராதித்தார். தன்னைச் சுற்றி இருக்கும் வறண்ட வனாந்தரத்தை அவர் பார்க்கின்றார். அதனை தேவனிடம், "அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது" என அறிக்கையிட்டு மன்றாடுகின்றார். பாலைவனம் எப்படி இருக்கும் என்று கற்பனைச் செய்து பாருங்கள். சுகமான காற்றோ, நீரோ, சுவையான உணவோ எதுவுமே இருந்திருக்காது. அத்தகைய சூழலிலிருந்து இதனைத் தாவீது பாடுகின்றார். 

"என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்." ( சங்கீதம் 63 : 6 ) என்று தாவீது கூறுவது அவர் இரவில் விழிக்கும்போதெல்லாம் தேவ சிந்தனையோடு இருந்ததைக் குறிக்கின்றது. 

அன்பானவர்களே, இன்று உண்மையான வனாந்தரத்தில் நாம் தவிக்காவிட்டாலும், வனாந்தரம் போன்ற வாழ்க்கைச் சூழ்நிலை ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படுவதுண்டு.  தாவீதுக்கு இருந்ததுபோல உயிர் பயம், ஒருவேளை நமக்கும்  ஏற்படலாம். கொடிய நோய்வாய்ப்படும்போது இந்த பயம் நம்மைத் தாக்குகின்றது. இருளான நமது வாழ்க்கை ஒளியடையுமா? எனும் எதிர்காலத்தைக் குறித்த பயம்...இவைகளே இன்று நம்மை பாலைவனச் சூழலுக்கு இட்டுச் செல்கின்றன. 

ஆனால் இத்தகைய சூழ்நிலையில் தாவீது பிரச்சனைகளை நோக்கிப்பார்க்கவில்லை. அவர், "என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது." என்று பாடுகின்றார். பிரச்சனைகள் இருக்கின்றன ஆனால் அவர் உள்ளம் பிரச்சனைகளைவிட தேவன்மேல் தாகமாய் இருந்தது. 

இத்தகைய உயர்ந்த ஆவிக்குரிய அனுபவம் தாவீதுக்கு முப்பது வயதுக்குள் வந்துவிட்டது. ஆம், அதனால்தான் அவரது சங்கீதங்கள் சுமார் நாலாயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்பும் உயிரோட்டமாக உள்ளன. 

வனாந்தரமான நமது வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பார்க்கவேண்டாம், சூழ்நிலைகளைப் பார்க்கவேண்டாம். நமது பிரச்சனைகளை அவரிடம் சொல்லிச் சொல்லி அழவேண்டாம்.  சூழ்நிலைகளை மாற்றவல்ல தேவனையே நோக்கிப்பார்ப்போம். தாவீதை அபிஷேகித்து ராஜாவாக்கியவர் நம்மையும் அதுபோல உயர்த்துவார். உலகத்து ராஜாவைப்போலல்ல, நமது பிரச்சனைகள், பாவங்கள்மேல் வெற்றிகொள்ளும் ஆவிக்குரிய ராஜாக்களாக மாற்றுவார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்