நித்திய விவாகம்

 ஆதவன் 🖋️ 655 ⛪ நவம்பர் 13,  2022 ஞாயிற்றுக்கிழமை

"நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." ( ஓசியா 2 : 19 )

தேவனுக்கும் மனிதனுக்குமான உறவு காதலன் காதலி உறவுபோலவும், கணவன் மனைவி உறவுபோலவும் உள்ளது. வேதாகமத்தில் பல வசனங்களை நாம் இதற்கு உதாரணம் கூறலாம். உன்னதப்பாட்டுப் புத்தகம் முழுவதும் இப்படியே எழுதப்பட்டுள்ளது.  

வெளிப்படுத்தின விசேஷத்தில் மணவாளன் மணவாட்டி என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சபையும் விசுவாசிகளுமே மணவாட்டிகள். கிறிஸ்துவே மணவாளன். 

இன்று கர்த்தர் நமக்கு ஒரு வாக்குறுதி தருகின்றார். என்னோடு "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்" என்கின்றார். நான் உன்னை எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுகொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று ஒருவர் மற்றவரிடம் கூறுவதுபோல உள்ளது இது. அதாவது நம்மை அவருக்கு உரியவர்களாக மாற்றுவேன் என்கின்றார். மீட்பு அனுபவம் ஒருவர் பெறுகிறார் என்றால், அவரை தேவன் தனது மணவாட்டியாகத் தெரிந்துள்ளார் என்று பொருள்.

கிறிஸ்து ஒருவரைத் தெரிந்துகொள்வது அவரது கிருபையினால்தான். இதனையே இன்றைய வசனத்தில், "நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்று கூறப்பட்டுள்ளது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும் கூறியுள்ளார். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு." ( எபேசியர் 2 : 8 ) ஆம், கிறிஸ்து நம்மைத் தெரிந்துகொண்டு அவரை நமக்கு வெளிப்படுத்துவது அவரது கிருபையினால்தான். 

இன்றைய வசனத்தில் நம்மை அவருக்கு மணவாட்டியாக அவர் தெரிந்துகொள்வேன் என்று கூறுகின்றார்.  "உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்." ( ஓசியா 2 : 20 )

அன்பானவர்களே, இந்த உலகத்திலுள்ள எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகப் பெரிய ஆசீர்வாதம் கிறிஸ்துவை அறிந்துகொள்வதுதான். நாம் ஒவ்வொருவரையுமே தனக்கு ஏற்புடையவர்களாக தெரிந்துகொள்ள கிறிஸ்து விரும்புகின்றார். ஆனால் அதற்கு நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டியது அவசியம். நாம் நமது உள்ளத்தினை எந்த ஒளிவுமறைவுமின்றி அவரிடம் திறந்து காட்டவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  நமது உள்ளக்  கதவினை அவர் தட்டிக்கொண்டே இருக்கின்றார். நமது உள்ளமாகிய கதவினைத் திறக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. 

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 )

இயேசு நமது இதயக் கதவை எப்படித் தட்டுவார் என்று நீங்கள் எண்ணலாம்.  இரட்சிப்புக்கேற்ற பிரசங்கங்கள், கட்டுரைகள் இவற்றை நாம் கேட்கும்போது, வாசிக்கும்போது அவர் நமது இருதயத்தைத் தட்டுகின்றார். அவற்றுக்குச் செவிகொடுக்கும்போது அவர் நம்மிடம் வருகின்றார். 

அன்பானவர்களே, "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

நம்மை ஏற்றுக்கொள்ள அவர் தயார்; அவரை ஏற்றுக்கொள்ள நாம் தயாரா? 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்