உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடி....


உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடி .......

                                                                      - சகோ. எம்.ஜியோ பிரகாஷ் 


ஒரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். அப்போது அவர் கூறினார், "ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாயிரு" (லூக்கா - 11:35) . 

"உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடி" என இயேசு கூறுவதால், ஏற்கெனவே அவர்களிடம் வெளிச்சம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. அந்த வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாயிருக்குமாறு இயேசு கூறுகிறார். அந்த வெளிச்சம் அவர்களுக்கு எப்படி வந்தது? அது இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியதால் வந்தது.  

வேதம் கூறுகிறது, "அவருக்குள் ஜீவன் இருந்தது அந்த ஜீவன் மனிதர்க்கு ஒளியாயிருந்தது" (யோவான் -1:4)

மேலும், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான் - 1:9) என்கிறது வேதம். அந்த வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாயிருக்குமாறு இயேசு கூறுகிறார். அதாவது மனுஷனைப் பிரகாசிக்கச் செய்யும் இயேசு  கிறிஸ்து எனும் ஒளி அவனை விட்டு எடுபட்டுப் போய்விடக்கூடாது.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே கிறிஸ்துவைப் பற்றி  ஏசாயா தீர்க்கதரிசி கூறினார் :- "இருளில் நடக்கிற மனிதர்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது" (ஏசாயா - 9;2) இதனை மத்தேயு நற்செய்தியும்  கிறிஸ்து பிறந்த சம்பவத்தைக்  கூறும்போது   நினைவு கூருகிறது (மத்தேயு 4:15)

1.யோவான் 1:5 கூறுகிறது, "தேவன் ஒளியாயிருக்கிறார்" 

ஒளி என்று கூறும்போது வெறும் வெளிச்சத்தை மட்டும் ஒளி என எண்ணிவிடக் கூடாது.  தேவன் ஒளியாயிருக்கிறார் என்பது மெய் என்றாலும் ஒளி எல்லாம் தேவனல்ல. இங்கு ஒளி என்பது தேவனது ஒரு தன்மையைக் குறிக்கிறது.

வெளிச்சத்தின் மக்கள் இருளின் மக்கள் இருவருக்கும் வித்தியாசம் உண்டு.  இருளில் வாழும் தேள், பூரான், கரப்பான், ஆந்தை, மற்றும் கற்களின் அடியில் மறைந்து வாழும் பல உவரினங்கள் உண்டு. இவற்றின் குணங்கள் வெளிச்சத்தில் வாழும் உயிரினங்களைவிட மோசமானதாக இருக்கும். அதுபோலவே இருளின் மனிதர்களுக்கு இருளின் குணங்களே இருக்கும். நற்குணங்கள்தான் வெளிச்சம். அதுதான் கிறிஸ்துவின் ஒளி.

மத்தேயு 5:16 கூறுகிறது, " மனிதர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது"

இயேசு கிறிஸ்து ஏன் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாயிரு என்று கூறினார் என்றால் வெளிச்சத்தின் பிள்ளைகளுக்கு எதிராக இருளின் பிள்ளைகள் எப்போதும் வான்மமாக இருப்பார்கள். அவர்களை அழித்து ஒழிக்க முயலுவார்கள். ஏனெனில் "பொல்லாங்கு செய்கிறவன் எவனும் ஒளியைப் பகைக்கிறான்" (யோவான் - 3:20)

திருடன் திருடச் செல்லும்போது முதலில் அங்கு இருக்கும் ஒளியைத்தான்   அணைக்க முயலுவான். அதுபோல இருளின் மக்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளுக்கு எதிராகவே இருப்பர்.  

தேவ திட்டத்தை அறியாத யூதர்கள் இயேசு எனும் ஒளியை அணை த்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் எனக் கருதித்தான் அவரைக் கொலை செய்தனர். ஏனெனில் அவர்களது அழுக்கான வாழ்க்கை முறைகள் இயேசு எனும் வெளிச்சத்தின் முன் உலகுக்கு வெளியரங்கமாயின.  

மேலும் நம்மிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று இயேசு கூறியதற்கு பல காரணங்களுண்டு. நம்மில் கிறிஸ்துவின் வெளிச்சம் இருக்குமானால்:-

1.  நமது மனச்சாட்சி கூர்மையாகி  நமது பாவங்கள் நமக்குத் தெரியவரும்

இருட்டில் இருக்கும்வரை  நமது ஆடையிலுள்ள அழுக்கு வெளியில் தெரிவதில்லை. ஆனால் நம்மீது வெளிச்சம் படும்போது அழுக்கு அப்பட்டமாக தெரியும். இதுவே கிறிஸ்துவின் ஒளி நம்மில் படும்போதும் நடக்கிறது. அதுவரை பாவம் என்று நாம் கருத்தாதவை, பாவம் என்று நாம் உணராதவை, கிறிஸ்துவின் ஒளி நம்மில் படும்போது நமக்கு உணர்த்தப்படும்.

வேதத்தில் சகேயு பற்றிய சம்பவத்தைப் படித்துப் பார்ப்போமானால் இது புரியும். சகேயு துன்மார்க்கமாக மக்களை வருத்தி அநியாயமாக வரி வசூல் செய்து வந்தவன். ஆனால் இயேசு கிறிஸ்துவை அவன் சந்தித்தபோது அவனில் கிறிஸ்துவின் ஒளி பட்டு அவனது மனச்சாட்சி அவனது பாவங்களை அவனுக்கு உணர்த்தியது. அவன் உடனே இயேசு கிறிஸ்துவிடம் கூறினான், " ஆணடவரே, ஏன் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன், நான் ஒருவனிடம் எதையாகிலும் அநியாயமாய் வாங்கியது உண்டானால் நாலு மடங்காக அதனைத் திரும்பிச் செலுத்துவேன்  என்றான்"

இயேசு கிறிஸ்து உடனே கூறினார், "இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்ச்சிப்பு வந்தது" (லூக்கா 19:8,9)

இதுதான் கிறிஸ்துவின் ஒளி நம்மீது படும்போது நடக்கும் முதல் மாறுதல்.

2. சரியானப் பாதை தெரிய வரும் 


கிறிஸ்துவின் ஒளி நம்மீது படும்போது நடக்கும்இரண்டாவது மாற்றம் சரியான பாதை தெரிவது. இருளில் நடக்கும்போது எப்படி ஒரு டார்ச் ஒளியானது சரியான பாதை தெரியும்படி உதவுகிறதோ அதுபோல கிறிஸ்துவின் ஒளி நமக்கு சரியான பாதையைக் காட்டிட உதவிடும்.

"உம்முடைய வசனம் ஏன் கால்களுக்கு தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:1) என்று வேதம் கூறுகிறதல்லவா?

வேதத்திலிருந்து ஓரிரு  சம்பவங்களை  பார்க்கலாம்.  

அப்போஸ்தலரான  பவுல் அடிகள் யூத மார்க்கத்தின்மேல் அதிக பற்றுதலாய் இருந்து  யூத மத போதனேயே சரியான வழி என எண்ணி வாழ்ந்தவர். அதனால் கிறிஸ்தவ மத போதனைக்கு எதிராக செயல்பட்டு கிறிஸ்தவர்களை கொடுமைப் படுத்தி, சிறையிலடைத்தும் கொலை செய்தும் வந்தார். ஆனால் கிறிஸ்துவின் ஒளி அவர்மேலும் பட்டது. பட்ட உடன் மிகப் பெரிய வாழ்க்கை மாறுதல் அவரில் ஏற்பட்டது. (அப்போஸ்தலர் 9) கிறிஸ்துவே மெய்யான வழி என்பதை அவர் கண்டு கொண்டார்.

மேலும் ஒரு சம்பவத்தை உதாரணமாக கூறலாம்.  கொர்நேலியு எனும் மனிதன் உத்தமனும் நீதிமானுமாக வாழ்ந்துவந்தார், ஆனால் அவரும் சரியான மெய்யான வழி தெரியாதவராகவே இருந்தார். பேதுரு அவரிடம் வந்து கிறிஸ்துவைப் பற்றி பேசியபோது அவரில் கிறிஸ்துவின் ஒளி பாய்ந்தது. அவர் கிறிஸ்துவே மெய்யான வழி என்பதைக் கண்டு கொண்டார். ஆம் அன்பானவர்களே , கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் இருந்தால் மட்டுமே சரியான வழியை நாம் கண்டுகொண்டு அதன்படி நடக்க முடியும்.

3. பிறருக்கு ஒளியாவோம் 

கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் இருந்தால் மட்டுமே நாம் பிறருக்கு ஒளியாக முடியும்.

"நானே உலகத்தின் ஒளி " என்று கூறிய இயேசு கிறிஸ்து "நீங்கள் உலகத்தின் வெளிச்சம்" என்றும் கூறினார்.  (மத்தேயு 5:14) அதாவது கிறிஸ்துவின் ஒளி நம்மில் இருந்தால் நாம் உலகுக்கு வெளிச்சமாக மாறுவோம்.

சூரியனைச் சுற்றி வரும் சந்திரன் சூரியனது ஒளியைப் பெற்று அதனைப் பிரதிபலித்து பூமிக்கு வெளிச்சம் தருவதுபோல் நாம் கிறிஸ்துவின் ஒளியைப் பெற்று உலகுக்குப் பிரதிபலிப்போம். சூரியனை விட்டு சந்திரன் விலகிச் செல்லுமேயானால் சூரியனது ஒளியைப் பெற முடியாது.

கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் இருந்தால் ஒரு லைட் ஹவுஸ் கப்பல்களுக்கு வழி காட்டுவதுபோல நாம் பிறருக்கு வழி காட்ட முடியும்.

தன்னிடம்பி கிறிஸ்துவின் ஒளி இருந்ததால் பிலிப்பு எத்தியோப்பிய மந்திரிக்குச் சரியான  வழி காட்டினார். வேதாகாமப் பகுதிகளை அவருக்கு விளக்கிக் காட்டி அவரை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்தினார். (அப்போஸ்தலர் -8)

மேலும் யோவானைப் பற்றி இயேசு கிறிஸ்து, "  அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்கயிருந்தான்" (யோவான் 5:35) என்றுக் குறிப்பிடுகிறார். ஏனெனில் யோவானிடம் கிறிஸ்துவின் ஒளி இருந்ததால் அவர்  மக்களைக் கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தினார்.

நம்மிடமும் கிறிஸ்துவின் ஒளி இருக்குமானால் நாமும் பிறருக்கு ஒளியாகத் திகழ முடியும்.


4. அவருக்குச் சொந்த ஜனங்களாக இருப்போம் 

இறுதியாக, கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் இருக்குமானால் நாம் அவரது சொந்த மக்களாக இருப்போம்.

அப்போஸ்தலரான பேதுரு கூறுகிறார், " நீங்களோ உங்களை அந்தகாரத்திலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியையும் ராஜரீகமான ஆசாரியக்  கூட்டமாகவும் பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1.பேதுரு -2:9)

அதாவது கிறிஸ்துவின் ஒளி நம்மில் இருக்குமானால் மட்டுமே நாம் அவரது சொந்த மக்கள் என்று தைரியமாகக் கூற முடியும்.

நம்மிடம் கிறிஸ்துவின் ஒளி இருக்கிறது என்று எப்படி உறுதியாகத் தெரியும்?

இதுவரை கிறிஸ்துவின் ஒளியைக் குறித்துப் பார்த்தோம், இனி நம்மிடம் அந்தக் கிறிஸ்துவின் ஒளி இருக்கிறதா என்று நம்மை நாமே பரிசோதித்துப் பார்க்கவேண்டும். அதற்குச் சில கேள்விகளை நமக்குள் கேட்டு அதனை உறுதி செய்து கொள்வோம்.

கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் இருக்குமானால் இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன என்பதை உறுதி செய்யுங்கள்

1. பாவத்தைக் குறித்த ஒரு பயம் அல்லது வெறுப்பு உங்கள் உள்ளத்தில் இருக்கிறதா?

2. நாம் பரிசுத்தமாகவேண்டும் எனும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

3. தேவ சமூகத்தை எப்போதும் நாடும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

4. தேவ வார்த்தைகளை அறிய வேண்டுமெனும் ஆவல் உங்களுக்கு இருக்கிறதா?

மேற்படி கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? ஆம்  என்ற பதில் இருக்குமானால் உங்களிடம் கிறிஸ்துவின் ஒளி இருக்கிறது என்று பொருள். இல்லையென்றால் கிறிஸ்துவின் ஒளி எனக்கு வேண்டும் எனத் மெய்யான ஆவலோடு தேவனை  வேண்டிப் பெற்றுக்கொள்ளுங்கள். தேவனே வாக்கு அளித்துள்ளார்...ஏனெனில் கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்.  கேளுங்கள் கர்த்தர் தாமே உங்களை தனது ஒளியால் நிரப்புவார். ஆமென்    

 



 

 












Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்