DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, November 17, 2022

பாரம்பரியம்

 ஆதவன் 🖋️ 660 ⛪ நவம்பர் 18,  2022 வெள்ளிக்கிழமை

"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."( லுூக்கா 3 : 8 )

மனம் திரும்பிய ஒரு வாழ்க்கை வாழாமல் நாம் சார்ந்துள்ள சபைகளைக்குறித்தும் நம்மைக்குறித்தும்  பெருமைபேசிக் கொண்டிருந்தோமானால் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதையே இன்றைய வசனம் கூறுகின்றது. யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்தபோது அவரிடம் ஞானஸ்நானம் பெறுவதற்குப் பலரும் வந்தனர். அவர்களிடம்தான்  யோவான் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். 

யூதர்களுக்கு தங்களை ஆபிரகாமின் மக்கள் என்று கூறுவதில் ஒரு பெருமை இருந்தது. அதனை நாம் வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கின்றோம். உதாரணமாக:-

"அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள்". ( யோவான் 8 : 39 )

"நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை.."( யோவான் 8 : 33 )

"எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ?" என்றார்கள். ( யோவான் 8 : 53 )

இப்படித் தங்களை ஆபிராகாமின் மக்கள் என்று பெருமைபேசும் மக்களிடம்தான்,  ஆபிரகாமின் மக்கள் என்று கூறிக்கொள்ளாதிருங்கள்; மாறாக மனம்திரும்பிய ஒரு வாழ்க்கை வாழுங்கள் என்கின்றார் யோவான். 

இதுபோலவே இன்றும் மக்கள் பல்வேறு  பாராம்பரிய பெருமைபேசிக்கொண்டு சத்தியத்தை அறியாமலும் வேதம் கூறும் மனம்திரும்பிய வாழ்க்கை வாழாமலும் இருக்கின்றனர். 

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், "நாங்கள்தான் இயேசு கிறிஸ்து உருவாகிய சபை. மற்றவர்களெல்லாம் எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள். பேதுரு முதல் இப்போதுள்ள போப்பாண்டவர்வரை திருச்சபைக்குத்   தலைமையேற்றவர்களது சரித்திரம் எங்களுக்கு உண்டு."  என்கின்றனர். 

சி.எஸ்.ஐ, லூத்தரன் போன்ற   சபையினர், "எங்கள் சபைதான் சரியான உபதேசத்தைக்கொண்டுள்ள சபை. தப்பறையான கொள்கைகளை மார்ட்டின் லூத்தர் சுட்டிக்காட்டி எங்களை சீர்திருத்தியுளார். நாங்கள்தான் கிறிஸ்து உருவாக்கிய ஆரம்ப சபையின் போதனைகளைக் கொண்டுள்ளோம்" என்கின்றனர்.

ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் பெந்தெகொஸ்தே சபைகள், "ஆவிக்குரிய சபை எங்கள் சபைதான். நாங்கள்தான் வேதம் கூறுகின்றபடி ஆவிக்குரிய ஆராதனை செய்கின்றோம்.  மற்றவர்களெல்லாம் பெயரளவு சபைகள்."  என்கின்றனர். 

இப்படியே பாரம்பரிய பெருமை பேசும் மக்களை இயேசு கிறிஸ்து கண்டித்தார். இத்தகைய மனிதர்களைப் பார்த்தே, "நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள்." ( மாற்கு 7 : 13 ) என்று சொன்னார்.

அன்பானவர்களே, சபை பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. அந்தப் பெருமை நம்மை மீட்க முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே ஒருவரை இரட்சிக்கமுடியும். எந்த சபையில் இருந்தாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை ஒருவர் பெறவேண்டியதுதான் முக்கியம். கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட அனுபவம் உள்ள ஒருவர் வீண் பாரம்பரிய பெருமை பேசமாட்டார். எல்லா மனிதர்களையும் நேசிக்கும் (கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் குறைகூறாமல் ) மனம் உள்ளவராக வாழ்வார். 

பாரம்பரிய பெருமை பேசுவதைவிட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் திரும்புவோம்; மீட்பு அனுபவத்தைப்பெற்று சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: