Thursday, November 03, 2022

நான் தனியனல்ல

 ஆதவன் 🖋️ 647 ⛪ நவம்பர் 05,  2022 சனிக்கிழமை

"என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்." ( யோவான் 8 : 29 )

ஒரு நாட்டின்  பிரதிநிதியாக (Ambassador) ஒருவரை அந்த நாடு இன்னொருநாட்டிற்கு அனுப்புகின்றது என்றால் அந்த நாடே அவருக்குண்டான அனைத்துச் செலவினங்களையும் ஏற்றுக்கொள்ளும். அவர் கேட்காமலே அவருக்கென்று பல சலுகைகளைக் கொடுக்கும். அவருக்கொரு பிரச்சனையென்றால் அனுப்பிய நாடு பிரச்சனையிலிருந்து அவரை விடுவிக்க செயல்படும். மட்டுமல்ல, அப்படி அனுப்பப்படும் நபருக்கு பல அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு நிபந்தனை, பிரதிநிதியாக அனுப்பப்படும் நபர் தன்னை அனுப்பிய நாட்டிற்கு விசுவாசமானவராக, தனது நாட்டின் மகிமையை விட்டுக்கொடுக்காதவராக இருக்கவேண்டும்.  

இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் தனது சித்தம் செய்ய உலகிற்கு அனுப்பினார். அந்தப்பணியை இயேசு கிறிஸ்து சரியாகச் செய்துமுடித்தார். மட்டுமல்ல அவர் செய்தவை அனைத்தும் பிதாவாகிய தேவனுக்கு பிரியமான செயல்கள். எனவேதான்,  "பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை" என்றார் இயேசு கிறிஸ்து. 

பிதா எப்படி இயேசு கிறிஸ்துவை அனுப்பினாரோ அதேபோல இன்று நம்மைக் கிறிஸ்து  உலகத்தில் அனுப்புகின்றார். "பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்." ( யோவான் 20 : 21 ) என்று கூறினார்  இயேசு கிறிஸ்து. இந்த வசனம் சீடர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் நம் அனைவருக்கும்தான். ஏனெனில் ஒரு சீடத்துவ வாழ்வு வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  

இயேசு கிறிஸ்துவோடு பிதாவாகிய தேவன் இருந்ததுபோல நம்மோடும் இருக்கும்போதுதான் நாம் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று உலகிற்கு அடையாளம் காட்ட முடியும். இயேசு கிறிஸ்து நமக்கு அதனையும் வாக்களித்துள்ளனர். "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்." ( யோவான் 14 : 23 ). அதாவது, கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்போது நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம் என்று இந்த வசனம் கூறுகின்றது.  

ஆம், நாம் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது மட்டுமே  பிதாவும் குமாரனாகிய கிறிஸ்துவும் நம்மோடு வாசம்பண்ணுவார்கள். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. 

என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார் என்று நாம் உறுதியோடு கூறக்கூடிய நிலைக்கு வரவேண்டும். ஆவிக்குரிய வாழ்வில் நாம் வளரும்போது நமக்கு அந்த உறுதி ஏற்படும். நம்மோடு கிறிஸ்து இருக்கிறார் எனும் உறுதி நமக்கு ஏற்படும்போது மட்டுமே நாம் துணிந்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும். 

மட்டுமல்ல, ஒரு பிரதிநிதிக்கு அவரை அனுப்பிய நாடு எல்லா உதவிகளையும் செய்வதுபோல தேவன் நமக்கு அனைத்து உதவிகளையும் செய்து ஏற்றபடி வழிநடத்துவார். ஒரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட  பிரதிநிதி தன்னை அனுப்பிய நாட்டிடம் தனது தேவைகளுக்குக் கெஞ்ச வேண்டியதில்லை. உரிமையாகவே அவரை அனுப்பிய நாடு அவருக்குப் பல சலுகைகளைச் செய்யும். அதுபோல கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக நாம் வாழும்போது நமது தேவைகளை அவர் சந்திப்பார். 

கிறிஸ்துவுக்குப் பிரியமான செயல்களைச் செய்யும்படி நம்மை ஒப்புக்கொடுப்போம். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலை வேண்டுவோம். சத்திய ஆவியாகிய அவரே நம்மை கிறிஸ்துவின் பாதையில் நடக்க உதவிடமுடியும்.  அப்போது, நம்மை அனுப்பிய இயேசு கிறிஸ்து நம்முடனேகூட இருக்கிறார், நம்மை அவர் தனியேயிருக்கவிடவில்லை என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ளும்.  

அத்தகைய மேலான வாழ்வு வாழ நம்மை கிறிஸ்துவுக்கு ஒப்புவிப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5

  " ஆதவன் " தியானம் - 1993  ஜூலை 23 வியாழன் 2026     "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...