காணிக்கையால் அல்ல..

 ஆதவன் 🖋️ 672 ⛪ நவம்பர் 30,  2022 புதன்கிழமை

"தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது." ( ரோமர் 11 : 35, 36 )

இந்த உலகத்தில் மனிதர்கள் தங்களுக்கு ஏதாவது உதவித் தேவையென்றால் எந்த வழியிலாவது அதனைப் பெற்றிடத் தயங்குவதில்லை. அரசாங்கத்தில் ஏதாவது சலுகையோ அல்லது சான்றிதழோ தேவையென்றால் கைக்கூலி கொடுத்து அதனைப் பெற்றிடவே முயலுகின்றனர். மனிதர்களது இந்த குறுகிய புத்தி அவர்களை தேவனிடம் நெருங்கும்போதும் தொடருகின்றது. இதற்கு மக்களை வழிகாட்டும் ஊழியர்களும் ஒரு காரணம். 

தேவனிடம் ஏதாவது ஆசீர்வாதம் பெறவேண்டுமானால் அவருக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று போதித்து மக்களை அப்படியே வழிநடத்துகின்றனர். ஆயிரம் ரூபாய்  காணிக்கை கொடுத்தால் தேவன் அதனைப் பத்தாயிரமாகத் திருப்பித் தருவார்; இரண்டாயிரம் கொடுத்தால் இருபதாயிரமாக திருப்பித் தருவார்  என்றும்  தேவனுக்குக் காணிக்கை கொடுக்கும் அளவினைப் பொறுத்தே அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்றும்  முட்டாள் போதனையை பிரபல ஊழியர்கள் வழங்கி மக்களை தேவ அன்பில்லாதவர்களாக மாற்றிவிட்டனர். 

அதிகமாக காணிக்கை அளித்த செல்வந்தர்களது காணிக்கையையல்ல, ஏழை விதவையின் இரண்டு காசு காணிக்கையினைத்தான்  இயேசு கிறிஸ்து மேன்மையாகக் கருதினார். அந்தக் காணிக்கைக் குறித்து  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியது நமக்கு எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். "அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்." ( மாற்கு 12 : 44 ) என்றார் இயேசு. மேலும், அந்த விதவை தனக்கு இரட்டிப்பான ஆசீர்வாதம் வேண்டுமென்று காணிக்கை கொடுக்கவில்லை; கர்த்தருக்குக் கொடுக்கவேண்டும் எனும் ஆர்வத்தில் கொடுத்தாள்.  

செல்வ ஆசீர்வாதங்கள் பெறவேண்டும் எனும் எண்ணத்தில் காணிக்கை கொடுக்கும் மனிதர்களைப் பார்த்துதான் அப்போஸ்தலரான பவுல், "தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது." என்று கூறுகின்றார். அதாவது நமக்கு தேவனது பதில் கிடைக்கும்படி அவருக்கு ஒன்றை நாம் கொடுக்கமுடியாது. ஏனெனில் இந்த உலகத்திலுள்ள அனைத்தும் அவராலும் அவர் மூலமாகவும் அவருக்காகவும் உண்டாகியுள்ளன.

நாம் ஒன்றை தேவனிடமிருந்து பெறுவது அவரது சுத்தக் கிருபையால்தானே தவிர அவருக்குக் காணிக்கைக் கொடுப்பதாலல்ல. இப்படிச் சொல்வதால் காணிக்கைக்  கொடுக்கவேண்டாம் என்று பொருளல்ல, காணிக்கையை நாம் மனப்பூர்வமாக, தேவனிடமுள்ள அன்பின் நிமித்தமாகக் கொடுக்கவேண்டுமே தவிர அவரிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் குறுகிய வியாபார நோக்கில் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவர் நாம் கொடுத்து நிறைவடையும் நிலையில் உள்ள அற்பமானவரல்ல.  சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது.

அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார், "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) பிதாவாகிய தேவனிடமிருந்து தான் அனைத்து வரங்களும் இறங்கி வருகின்றன. அவரிடத்தில் அதிகம் காணிக்கைக்  கொடுத்தவன், குறைவாகக் கொடுத்தவன் என்ற வேற்றுமை இல்லை.  

தேவனது கிருபையினை வேண்டி மன்றாடவேண்டுமேதவிர, குருட்டு வழிகாட்டிகளான  போதகர்களது அறிவுரைக்கைக் கேட்டு  கிருபையினை இழந்து போய்விடக்கூடாது.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்