இரட்சிப்பு

 ஆதவன் 🖋️ 658 ⛪ நவம்பர் 16,  2022 புதன்கிழமை

"நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 43 : 12 )

இன்று உலகத்தில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் முழு நிச்சயமாக நம்மை கிறிஸ்துவிமேல் நம்பிக்கைகொள்ள வைப்பது கிறிஸ்துவின் இரட்சிப்பு அனுபவமே. உலகிலுள்ள மக்கள் அனைவரும் தங்கள் உலகத் தேவைகளையே கடவுளிடம் வேண்டுகின்றனர். ஆனால் கிறிஸ்தவம் அப்படிச் சொல்லவில்லை. "நான் பரிசுத்தர்; நீங்களும் பரிசுத்தராயிருங்கள்" என்பதே கர்த்தரது மேலான வார்த்தை.  மறுமை வாழ்வுக்கு நேராக மனிதன் பாவ பழுதற்று இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.  அதற்கு வழிகாட்டவும் அதற்கான பாதையினை ஏற்படுத்தவும் கிறிஸ்து உலகத்தில் வந்தார். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை.

ஆனால், இன்றைய மூன்றாம்தர பண ஆசை ஊழியர்களால் கிறிஸ்தவ சத்தியம் மறைக்கப்பட்டு மற்றவர்களால் கிறிஸ்தவத்தின் மேன்மையினை அறிய முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த அவல நிலைமைக்கு இன்றுள்ள பிரபல ஊழியர்களே 100% காரணம். தேவனுக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.

"நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை" என்று இன்றைய வசனம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது. உலகத்தில் பாவத்தை மன்னிக்க எந்த அந்நிய தெய்வங்களுக்கும் அதிகாரமில்லை. அந்த அதிகாரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவருக்கே உண்டு. எனவேதான்  இன்றைய வசனம், "இப்படிச் செய்யத்தக்க  அந்நிய தேவன் இல்லை" என்று கூறுகின்றது. 

இன்று பிற தேவர்களிடம் ஜெபித்து பிற மதத்தினர் தாங்கள் பல ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். அவை உண்மையாக இருக்கலாம். உலக ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றிருக்கலாம். ஆனால், இரட்சிப்பு அனுபவம் பெற்று பாவ விடுதலையை நான் வணங்கும் தெய்வம் எனக்குக் கொடுத்தது என்று எவராலும் துணிந்து கூற முடியாது. அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே முடியும்.  

"நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆம், நாம் ஒரு சாட்சி வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். அப்படி ஒரு வாழ்க்கை வாழ உதவுவதுதான் இரட்சிப்பு அனுபவம். அந்த அனுபவத்தைப் பெறும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ முடியும். 

உலக ஆசை, செழிப்பு உபதேசம் செய்யும் ஊழியர்களை நம்பிக் கொண்டிருந்தோமானால் கிறிஸ்தவம்  கூறும் மேலான அனுபவத்திற்குள் வர முடியாது. சராசரி உலக மதங்களைப்போல கடவுளை ஆராதித்து, உலக ஆசீர்வாதங்களைப் பெற்றதையே சாட்சியாகக்கூறி  கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவர்களாக வாழ்வோம்; பரிதபிக்கத்தக்கவர்கள் ஆவோம்.

எனவேதான் எபிரெய நிருப ஆசிரியர் கூறுகின்றார், "முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 3, 4 )

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்