சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்

சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் 

சகோ . எம் . ஜியோ பிரகாஷ்

(இக்கட்டுரை சகோதரரால் எழுதப்பட்டு 'ஆதவன்' செப்டம்பர் 2013 இதழில் பிரசுரமானது. ஒருசில புதிய கருத்துச்  சேர்க்கையுடன் இணைய தளத்தில் தற்போது வெளியிடப்படுகிறது )



ந்த உலகத்தில் கிறிஸ்தவ பெற்றோருக்கு குழந்தையாகப் பிறந்தவர்களும், கிறிஸ்தவப் பெயரைக் கொண்டவர்களும், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களும், அவரைத் தேவ குமாரன் என ஏற்றுக்கொண்டவர்களும் பொதுவாகக் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டாலும் வேதம் அதற்கு வேறொரு அளவுகோலைக் குறித்துள்ளது. ஆம், தேவனுடைய பரிசுத்த ஆவி உள்ளவனே கிறிஸ்தவன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேதான் பவுல் அடிகள், " கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்ல" (ரோமர்-8:9) என்று கூறுகிறார்.

கிறிஸ்துவின் ஆவியாகிய பரிசுத்த ஆவி ஒரு மனிதனுக்குள் இருந்தால் மட்டுமே அவன் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தமுடியும். கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவனே கிறிஸ்தவன். "கிறிஸ்து அவன் " எனச் சொல்லும்படி வாழ்பவனே கிறிஸ்தவன். முதன் முதலில் கிறிஸ்துவைப்போல ஒரு வாழ்வு - ஒரு சீடத்துவ வாழ்வு - வாழ்ந்த ஒரு கூட்டம் மக்களுக்கே கிறிஸ்தவர்கள் எனும் பெயர் வந்தது என வேதம் கூறுகிறது. "முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் வழங்கிற்று" (அப்போஸ்தலர் - 11:26)

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்து விண்ணகம் செல்லுமுன் இதனைத்தான் தனது சீடர்களுக்கு அறிவித்தார். "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசிபரியந்தம் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்".  (அப்போஸ்தலர் - 1:8)

அதாவது ஒருவர் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக விளங்கவேண்டுமென்றால் அவர் பரிசுத்த ஆவியினால் பெலனடைய வேண்டியது அவசியமாய் இருக்கிறது.

மனிதர்களது வாழ்வு "இம்மை" எனும் இவ்வுலக ஆசைகள் நிறைந்த "மாம்ச வாழ்வு" எனவும்  "மறுமை " நிலை சார்ந்த "ஆவிக்குரிய வாழ்வு" எனும் இரண்டு நிலைகளில் உள்ளது. அதாவது , மாம்சம் சார்ந்த "ஊனியல்புக்குட்பட்ட வாழ்க்கை", "ஆவிக்குரிய வாழ்க்கை" எனும் இரண்டு நிலைகளை உடையது மனித வாழ்க்கை.  

இவற்றில் ஊனியல்புக்குட்பட்ட வாழ்க்கை தேவனுக்கு உகந்த வாழ்க்கையல்ல. மாறாக ஆவிக்குரிய வாழ்க்கை எனும் வாழ்வே தேவனுக்குரிய வாழ்க்கை. அப்படியொரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழவே தேவன் நம்மை அழைத்துள்ளார். 

எனவேதான் வேதம் கூறுகிறது, " மாம்ச சிந்தை மரணம், ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்" (ரோமர்-8:6). மேலும், "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் நீங்கள்   மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இராமல் ஆவிக்குரியவர்களாய் இருப்பீர்கள்"  (ரோமர்-8:9) என்று கூறப்பட்டுள்ளது.

பரிசுத்த ஆவி என்பது கிறிஸ்துவின் ஆவி (ரோமர்-8:9). இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது அதனை அவரது சீடர்களுக்கு அளித்தார். "அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார். (யோவான் - 20:22)

தேவனுடைய பரிசுத்த ஆவியானவருக்கு வேதத்தில் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

"எங்கும் நிறைந்தவர் " (சங்கீதம் - 139:7-10

"சத்திய ஆவி"  (யோவான் - 15;26)

"தேற்றரவாளன் "   (யோவான் - 15;26)

"இரட்சிக்கும் ஆவி" (தீத்து  - 15;26)

"ஜீவத் தண்ணீர் " (யோவான் - 4;13,14)

"மீட்கப்படும் நாளுக்கான முத்திரை" (எபேசியர் - 4:30)

"பெலன் அளிப்பவர் " ( அப்போஸ்தலர் - 1:8)

"பெலவீனங்களில் உதவுபவர்" (ரோமர்-8:26,27)

"நமக்காக வேண்டுதல் செய்பவர் "   (ரோமர்-8:26,27)

"விடுதலை அளிப்பவர்" (2 கொரிந்தியர் - 3:17)

"ஞானத்தை அளிப்பவர்" (எபேசியர் - 1:17)

வேதம் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி இப்படிக் கூறினாலும் இன்னும் பல கிறிஸ்தவர்கள் இதுபற்றிய ஒரு தெளிவோ அல்லது பரிசுத்த ஆவியானவரின் அனுபவமோ இல்லாமல் ஆவிக்குரிய சபை எனக் கூறப்படும் ஏதோ ஒரு சபையில் அமர்ந்துகொண்டு துள்ளுபவர்களாக, அல்லது சாதாரண ஒரு கிறிஸ்தவ சபையில் ஞாயிறு ஆராதனையில் கடமைக்காகக் கலந்துகொண்டு பரிசுத்த ஆவியானவரைப் பற்றியோ வேறு எதைப்பற்றியுமோ கவலை இல்லாமல் வாழும் ஒரு நிலைதான் இன்று இருக்கிறது.

ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் பல சபைகளில் பரிசுத்த ஆவியைப் பற்றி தவறான கருத்தே பரப்பப்பட்டு, ஒருவர் "லப ..லப ..சபாலா ...லப் ..லப் " என ஏதோ உளறிவிட்டால் அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டார் எனக் கூறி மற்றவர்களையும் அப்படிப் பேசத் தூண்டும் ஒரு நிலை இருக்கிறது. எப்படி அந்நிய பாஷை பேசுவது எனப் போதகர்கள் விசுவாசிகளுக்கு வகுப்பெடுக்கின்றனர். இதனால் தாங்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளோம் என மற்றவர்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக சுயமாக அந்நிய பாஷை பேச்சும் விசுவாசிகளும் பல சபைகளில் நிறைந்துள்ளனர்.

அந்நிய பாஷை பேசுவதுதான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதற்கு அடையாளம் என ஒரு தவறுதலான போதனையை போதகர்கள் கொடுத்துள்ளனர். ஆனால் வேதம் அப்படிக் கூறவில்லை. ஆவியின் பல்வேறு ஒன்பது வாரங்களில் அந்நிய பாஷையும் ஒன்று என்றுதான் கூறுகிறது. ஒருவர் அந்நிய பாஷை பேசுவதால் மட்டுமே பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளார் என்றோ  பேசாததால் அவர் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை என்றோ கூறிட முடியாது.

"எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லோரும் குணமாகும் வரங்களுடையவர்களா? எல்லோரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? ....." (1 கொரிந்தியர் - 12:29,30) எனப் பவுல் அடிகள் எழுதுவதிலிருந்து  இதனை அறிந்துகொள்ளலாம். எனவே பரிசுத்த ஆவியின் நிறைவுக்கு அந்நியபாஷை அடையாளமல்ல என்பது தெளிவு.

இன்று பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளேன் எனக் கூறும் பலரும் ஆராதனை வேளைகளில் பரலோக இன்பத்தை அடைந்துவிட்டதைப்போல துள்ளிக் குதித்தாலும் ஆராதனை வேளைக்குப் பின் இவர்களிடம் எந்த நல்லக்  குணங்களும் இருப்பதில்லை. உலகவாழ்கையில் உண்மையோ நீதியோ நேர்மையோ இவர்களிடம் இருப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்களால்தான் சத்திய மார்க்கம் தூஷிக்கப்பட்டு பிற மக்கள் கிறிஸ்தவத்தைப் பற்றி தவறாக நினைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

"எவனாகிலும் மனுஷ குமாரனுக்கு விரோதமான விஷேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் ; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை " (லூக்கா-12:10) பரிசுத்த ஆவியைப் பெறாமல் பெற்றதாகக் கூறுவதும் அவருக்கு விரோதமாகத் தூஷணம் சொல்வதுதான். இத்தகைய தவறுகள் நம்மிடம் இருந்தால் திருத்திக்கொண்டு வேதம் கூறும் பரிசுத்த ஆவியானவரைப் பெற  வேண்டுதல் செய்யவேண்டும்.

ஒருவர் தனது பாவங்களை உணர்ந்து  மெய்யான மனஸ்தாபப்பட்டு தேவனிடம் வேண்டுதல் செய்யும்போது  தேவன் அவரை இரட்சிப்பின் ஆவியால் நிரப்புகிறார். இரட்சிப்பின் ஆவி என்பதும் பரிசுத்த ஆவிதான். ஒருவர் இரட்சிக்கப்படுவதற்கு முத்திரை அடையாளமாக தேவன் பரிசுத்த ஆவியை அளிக்கிறார். எனவேதான், "நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி  ....".(எபேசியர் - 4:30) என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவர் இரட்சிக்கப்படும்போது பரிசுத்த  ஆவியைப் பெற்றாலும் மேலான ஒரு நிறைவின் அடையாளம் ஒருவரது ஆவிக்குரிய வளர்ச்சி நிலையையும் அவரது தனிப்பட்ட தாகத்தையும் பொறுத்து ஒருவர்க்கு கிடைக்கிறது. இதனையே "பரிசுத்த ஆவியின்  நிறைவு" என்கிறோம். இதனை பலப்படுத்தல் அல்லது திடப்படுத்தல் என்று கூறலாம். ஆவிக்குரிய வாழ்க்கையில் நடக்க நாம் திடப்படுகிறோம்.

ஆனால் ஆவிக்குரிய காத்திருப்புக் கூட்டங்கள், ஆவியைப் பெற உபவாச ஜெபம் என ஊழியர்களால் வழிநடத்தப்படும் பல விசுவாசிகள் வெறும் மனக் கிளர்ச்சியை பரிசுத்த ஆவியென எண்ணிக்கொண்டு துள்ளிக் குதிக்கின்றனர். ஆவியின் நிறைவு வெறும் உடல் சார்ந்த குதூகலம் அல்ல. அது ஆத்துமா சார்ந்தது. ஒருவர் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்படும்போது அவரது மனது மறு  ரூபமாகிறது. அது உள்ளான மனிதனில் மிகப் பெரிய மாறுதலைக் கொண்டு வருகிறது.

ஆவியின் நிறைவை மதுவால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு மனிதனுக்கு உவமைப்படுத்திக் கூறலாம். மதுவின் மயக்கத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு மனிதனிடம் பல மாறுதல்களை நாம் காணலாம். அவனது நடை, பேச்சு, செயல் அனைத்தும் மதுவுக்கு அடிமையாகி அதனை வெளிப்படுத்தும். அவன் முற்றிலும் மதுவின் கட்டுப்பாட்டில் இருப்பான்.

இதுபோலவே தேவனது ஆவியால்  நிறையும்போது ஒருவன் ஆவியானவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பான். உலகில் அவனது நடை, பேச்சு, செயல்பாடுகள் அனைத்தும் ஆவிக்குட்பட்டதாக இருக்கும். சாதாரண மக்களைவிட வித்தியாசமானதாக இருக்கும். இதுவே ஆவியில் நிரம்புதல். அதாவது பரிசுத்த ஆவியானவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருத்தல்.  பவுல் அடிகள் இதனை, "துன்மார்க்கத்துக்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல் ஆவியினால் நிறைந்து" (எபேசியர்- 5:18) என்று கூறுகிறார். இப்படி ஆவியால் நிரம்பி ஆவியானவரின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களே தேவனுடைய மக்கள் என்கிறது வேதம்.

"எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர்-8:14)

இப்படி ஒருவர் ஆவியினால் நிறையும்போது மட்டுமே அவரில் ஆவியின் கனிகள் வெளிப்படும், அதாவது ஆவிக்குரிய குணங்கள் வெளிப்படும். "ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ......"(கலாத்தியர் -  5:22,23) இத்தகைய ஆவியின் கனிகள் எனும் குணங்களுள்ளவனே ஆவியில் நிறைந்தவன். அத்தகையவனே  கிறிஸ்துவின் சீடன்.

இயேசு கிறிஸ்து எனவேதான் கூறினார், " நீங்கள் மிகுந்த கனிகள் கொடுப்பதினால் என் பிதா  மகிமைப் படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்"  (யோவான் - 15;8)

இப்படி ஒரு கனி கொடுக்கும் வாழ்வு வாழவே கிறிஸ்து நம்மை அழைத்திருக்கிறார். "நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன் " (யோவான் - 15;16) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

மேலும், தேவனுடைய பரிசுத்த ஆவியில் வலுப்படும்போது இயேசு கிறிஸ்து நமக்குத் பெரியவராகத் தோன்றுவார். கிறிஸ்துவில் நமது விசுவாசம் வலுப்பெறும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவைக் குறித்தே சாட்சியளித்துப் பேசுகிறார்.

"பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும்  பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமான சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் வரும்போது அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்" (யோவான் - 15;26)

எனவே இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறியவேண்டுமானால் கூட நாம்  பரிசுத்த ஆவியானவரையே அதிகம் தேடவேண்டும். ஏனெனில், "பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தர் என்று எவனும் சொல்ல முடியாது என்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" (1 கொரிந்தியர் - 12:3) என எழுதுகிறார் பவுல் அடிகள்.

அன்பானவர்களே, பரிசுத்த ஆவியினால் நிறைந்து துள்ளிக் குதிப்பதற்கல்ல, கிறிஸ்துவை இன்னும் அதிகம் அதிகம் அறிந்து கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக் கொடுப்போம்; அதன்  மூலம் கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்துவோம் , ஆமென்.  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்