இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்.

 ஆதவன் 🖋️ 644 ⛪ நவம்பர் 02,  2022 புதன்கிழமை 

"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 26, 27 )

ஒருமுறை இயேசு கிறிஸ்து எருசலேமுக்குப் பயணமாய்ச் செல்லும்போது வழியிலுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் பிரசங்கம்பண்ணிக் கொண்டு போனார். இயேசு கிறிஸ்துவின் போதனை குறிப்பாக, பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்குரிய தகுதிகளைக் குறித்ததாக இருந்தது. அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவனுக்கு இயேசு கிறிஸ்துவின் போதனை கடைபிடிக்க அரிதான ஒரு செயல்போலத் தெரிந்தது. வித்தியாசமான உபதேசமாக இருந்தது.

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 ) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் அவனுக்குக் குழப்பதைக் கொண்டுவந்திருக்கும். 

எனவே, அவன் இயேசு கிறிஸ்துவிடம், "ஆண்டவரே, இரட்சிக்கப்படுபவர்கள் சிலபேர்தானோ?" என்று கேட்டான்.  அவனுக்குப் பதில்கூறும்போது இயேசு கிறிஸ்து இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார். 

இயேசு கிறிஸ்துவின் போதனைகளைக் கேட்கவந்தவர்களுக்கு அவர் பல வேளைகளில் உணவு கொடுத்தார். அப்பத்தையும் மீனையும் பலுகச்செய்து உணவளித்தார். பலர் இயேசு இப்படி உணவளிப்பதால் அவரிடம் வந்து போதகத்தைக் கேட்டனர்; உணவும் உண்டனர். ஆனால் அவர்கள் மெய்யான மனம்திரும்புதலுக்குள் வரவில்லை. இத்தகைய மனிதர்கள்தான் இறுதிநாட்களில் பரலோகத்தினுள் பிரவேசிக்கமுடியாமல் போகும்போது வந்து நின்று,  "உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே" என்று சொல்லுகின்றவர்கள். 

போதனைகளைக்கேட்டு அவர் அளித்த உணவினை உண்டு வந்ததால் அவர்கள் இறுதி நாளில் அவரோடு பரலோகத்தில் நுழைய முடியும் என்று நம்புவார்கள். ஆனால் அவர்களைப்பார்த்து, "உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

அன்பானவர்களே, இது இந்தநாளில் வாழும் நமக்கு ஒரு எச்சரிப்பாகும். ஆண்டவரின் நற்கருணையை (இராப்போஜனம்) உண்டு பல்வேறு சுவிசேஷ கூட்டங்களில் தவறாமல் பங்கு பெறுவதால் மட்டும் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியாது என்கின்றார் இயேசு கிறிஸ்து. காரணம், இவைகளைச் செய்வது எளிது. யார் வேண்டுமானாலும் எளிதில் இவைகளை நிறைவேற்றலாம். 

ஆனால், தேவன் விரும்புவது ஒரு மனம் திரும்பிய வாழ்வு. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு வாழும் ஒரு மீட்பு பெற்ற ஆவிக்குரிய வாழ்வு. இந்த வாழ்வினை வாழ விரும்பாமல் வெறும் ஆராதைகளில் கலந்துகொண்டு  அதனால் திருப்தியடைவதில் அர்த்தமில்லை. ஆராதனையோடு ஆவிக்குரிய வாழ்வும் நமக்கு வேண்டும்.  இறுதிநாளில் உங்களை அறியேன் என்று தேவனது வாயினால் கூறப்பட்டு புறம்தள்ளப்படும் பரிதாப நிலைமை நமக்கு வரக்கூடாது.  

மீட்பு அனுபவம் பெற்று மாம்ச இச்சைகளை நிறைவேற்றாமல் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதே நமக்கு தேவனோடு நித்திய பேரின்பத்தில் நுழைய முடியும். அப்போஸ்தலரான பவுல் அடிகளும் இதனால்தான் "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ( ரோமர் 8 : 1 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்