உள்ளான மனிதன்

 ஆதவன் 🖋️ 670 ⛪ நவம்பர் 28,  2022 திங்கள்கிழமை

"நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்...." ( எபேசியர் 3 : 16 )

நாம் ஒவ்வொருவரும் இரண்டு மனிதர்களாக உள்ளோம். வெளிப்பார்வைக்கு உலகுக்குத் தெரிவது ஒரு மனிதன்; வெளியுலகுக்குத் தெரியாத இன்னொரு மனிதன் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்  மறைமுகமாக இருக்கின்றான். பெரும்பாலான மனிதர்களும்  இரண்டு மனிதர்க்குள்ளும் முரண்பாடு கொண்டவர்களாகவே வாழ்கின்றனர்.

உள்ளான மனிதன் ஆவிக்குரியவன். இன்று உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களே உலகினில் அதிகம். உள்ளான மனிதனில் நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை வெளிக்காட்ட முடியுமானால் நாம் பலப்பட்டவர்கள் என்று அர்த்தம். ஆனால், பெரும்பாலும் உள்ளான மனிதன் பொறாமை, காய்மகாரம், பண ஆசை, பாலியல்  அவலட்சணமான எண்ணங்கள், கொண்டவனாகவே இருக்கின்றான். எனவே இவைகளை பலரும் மறைத்து தங்களை நல்லவர்களாக வெளிகாட்டிக்கொண்டு உலகினில் நடமாடுகின்றனர். 

உள்ளான மனிதனே ஆவிக்குரிய மனிதன். நாம் உள்ளான மனிதனில் பலப்படவேண்டியது அவசியம். உலக மனிதர்கள் உள்ளான விஷயங்களில் மோசமானவைகளாக இருந்தாலும்  கிறிஸ்துவின் ஆவி உள்ளான மனிதனில் வரும்போது அவர்களை வித்தியாசமானவர்களாக  மாற்றுகின்றார். அவர்கள் ஆவிக்குரியவர்களாக மாறுகின்றனர். அதன்பின்னரே அவர்களது சிந்தனை ஆவிக்குரிய சிந்தனையாக மாறுகின்றது. 

ஆனால், ஆவிக்குரிய வாழ்வு வாழ முயலும் மனிதர்களது நிலைமை பவுலைப்போல சில சிரமங்களுக்குளாக்குகின்றதாக இருக்கின்றது. அவர்கள் உள்ளான மனிதனில் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ விரும்புபவர்களாக இருக்கின்றனர். ஆனால் வெளியுலக சூழ்நிலை உள்ளான மனிதனுக்கேற்ற அத்தகைய ஆவிக்குரிய வாழ்க்கை வாழத் தடைகளைக் கொண்டுவருகின்றது. எனவேதான் பவுல் கூறுகின்றார், "உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்." ( ரோமர் 7 : 22 ) என்று. ஆனால் வெளி உலக சூழ்நிலைகள் பரிசுத்த வாழ்க்கை வாழத் தடையாக பெரிய சவாலாக இருக்கின்றன.

இப்படி இருப்பதால், "நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது." ( 2 கொரிந்தியர் 4 : 16 ). அதாவது, பரிசுத்தனாக வாழ விரும்புவதால், வெளியான மனிதன் நலிவுற்று அழிவதுபோலத் தெரிந்தாலும் உள்ளான மனிதனில் நாளுக்குநாள் புத்துணர்வும், புது உருவாக்குதலும் நடக்கின்றது. இன்றைய வசனத்தில், எபேசு சபை விசுவாசிகள் அனைவரும் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட பிதாவை நோக்கி ஜெபிப்பதாக பவுல் கூறுகின்றார்.  

பரிசுத்த ஆவியானவரின் துணை இல்லாமல் நாம் உள்ளான மனிதனில் வல்லமைப்பட்டு வெளியான மனிதனை மேற்கொள்ள முடியாது.

அன்பானவர்களே, விசுவாசிகளது உலகத் தேவைகளுக்கே முன்னுரிமைகொடுத்து ஜெபிக்கும் இன்றைய ஊழியர்களைப்போல அல்லாமல், பவுல் தனது சபை விசுவாசிகள் இந்த மேலான வாழ்க்கை நிலையை அடைந்திட ஜெபிக்கின்றார். 

இன்று நமக்கு இத்தகைய ஊழியர்கள் வெகு சிலரே இருப்பதால், நாமே நமக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். நமது உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்பட ஜெபிக்கும்போது நமது வாழ்க்கை முரண்பாடில்லாத வாழ்க்கையாக மாறும். உள்ளான மனிதனும் நமது வெளி மனிதனும் ஒன்றுபோல மாறும்போதுதான்  நாம் உலகிற்கு மெய்யானச் சாட்சிகளாக மாறமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்