எப்படி ஜெபிக்கவேண்டும்?

ஜெபம் என்றால் என்ன? ஏன், எப்படி ஜெபிக்கவேண்டும்?  




- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 




விக்குரிய வாழ்வின் தொடர் வெற்றிக்கு ஜெபம் முக்கியமான ஒன்று. ஜெபமில்லாமல் ஆவிக்குரிய வாழ்வு இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் 'ஜெபம் என்றால் என்ன?' என்பதும் 'எப்படி ஜெபிக்கவேண்டும்' என்பதும் தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் தெரிவதில்லை. ஜெபத்தைக் குறித்து  தவறான ஒரு எண்ணத்தைக் கொண்டவர்களாகவே பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர்.  

தங்களுக்குத் தேவையான காரியங்களைத்  தேவனிடம் கேட்பது, தினசரி காலையிலும் இரவு படுக்கச் செல்லும் முன்பும்  சில வசனங்களைச் சொல்லி பாட்டுப் பாடி தங்களது தேவைகளைக் கேட்பது, சில குறிப்பிட்ட மந்திரங்களை ஜெபப் புத்தகத்தைப் பார்த்து படிப்பது,   இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரிடமும் பொதுவான காரியம் ஜெபத்தில் தங்களது தேவை ஏதாவது ஒன்று சந்திக்கப்படவேண்டும் எனும் கருத்தே முக்கியமாக இருக்கும்.   

ஜெபம் என்றால் என்ன?

ஆனால், ஜெபம் என்பது தேவனைத் தேடுவது. தேவ உறவில் வளர உதவுவது. அது ஒரு தாயும் குழந்தையும் பேசி உறவாடுவதுபோன்ற ஒரு அனுபவம். அது எந்த உலக பொருள் சார்ந்த அல்லது இவ்வுலகு சார்ந்த காரியத்தையும் முன் நிறுத்தாதது. அது ஆவிக்குரிய ஒரு வளர்ச்சிக்கு உதவுவதாகவும் தேவனோடு ஒட்டிக்கொள்ள உதவுவதுமாகும். இந்தத் தெளிவு பலரிடமும் இல்லாததால், தேவ தொடர்பு பெரும்பாலான மக்களிடம் இருப்பதில்லை. எனவே அவர்களது ஆவிக்குரிய வளர்ச்சியும் சிறப்பானதாக இல்லை என்றே கூறவேண்டும். 


தேவனிடம் நமது தேவைகளை எடுத்துச் சொல்வதில் தவறில்லை. ஆனால் அதைவிட தேவனோடுள்ள ஐக்கியத்தை தேவன் விரும்புகிறார். ஒரு மகன் அல்லது மகள் தாய் தந்தையிடம் வேறு  எதுவும் பேசாமல் எப்போதுபார்த்தாலும் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று தனது தேவை மற்றும் ஆசைகளையே கூறிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இன்று கல்லூரியில் படிக்கும் பல மாணவ மாணவிகள் இப்படித்தான் வீட்டில் இருக்கின்றனர். தாய் தந்தையிடம் எதுவும் பேசாமல் தங்களது தேவைக்குமட்டும் பேசி ஏதாவது கேட்கின்றனர். சில பெற்றோர்கள் இப்படி என்னிடம் வருத்தப்பட்டுக் கூறுவதுண்டு. இன்று மனிதர்களது ஜெபமும் தேவன் முன் இப்படித்தான் இருக்கிறது.

தேவன் மக்கள் தன்னிடம் இரப்பதை விரும்புவதில்லை, மாறாக அவர் மக்கள் தன்னிடம் உறவோடு வாழ்வதை விரும்புகின்றார். நமது ஜெபம் சிறப்பாக அமையவும் தேவன் விரும்பும் விதமாகவும் இருக்கச் சில வேத அடிப்படையிலான காரியங்களை நாம் பார்த்து நம்மைத் திருத்திக்கொள்வது நலமாக இருக்குமென்று எண்ணுகிறேன். 

வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் அதாவது தேவையற்ற வார்த்தைகளை பேசாதிருங்கள் 

தேவன் வெறும் வார்த்தை அலங்காரத்தைப் பார்த்து ஜெபத்தை அங்கீகரிப்பவரல்ல. "கபடமில்லாத உதடுகளிலிருந்து புறப்படும் என் விண்ணப்பத்திற்குச் செவி கொடும்". (சங்கீதம் - 17:1) எனது தாவீது கேட்பதுபோல கபடமில்லாத இருதயத்தோடு ஜெபிக்கும் விண்ணப்பத்துக்குச் செவி கொடுக்கும் தேவன் அவர். சங்கீதம் 66:18 கூறுகிறது, "என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவி கொடார்" (சங்கீதம் - 66:18). எனவே வீண் வார்த்தைகள் தேவனுக்குத் தேவையில்லை. 

இயேசு கிறிஸ்துக் கூறினார், " நீங்கள் ஜெபம் பண்ணும்போது அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள். உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்கிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்." (மத்தேயு - 6:7,8) 

சிலர் வசனங்களுக்குமேல் வசனமாகச்  சொல்லி ஜெபித்தால்தான் தேவன் கேட்பார் என எண்ணி வசனமாகச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களது அறிவால் தாங்கள் படித்த வசனங்களை சொல்கிறார்களே தவிர இருதய பூர்வமாக ஜெபிப்பதில்லை. இதயபூர்வமான ஜெபம் உண்மையில் வசனங்களை அடுக்க நினைக்காது. 

ஜெபிப்பதிலும் பெருமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சிலர் தாங்கள் ஜெபிப்பது பிறருக்குத் தெரியவேண்டும் எனும் எண்ணத்தில் ஜெபிப்பர். அத்துடன் தாங்கள் ஜெபிப்பது சிறப்பான ஜெபம் என பிறர் என்ன வேண்டுமென்று வசனங்களை அடுக்குவர். தங்களை அறியாமலே இவர்களது மனம் பிறர் நமது ஜெபத்தைக் கவனிக்கிறார்கள்  எனும் பெருமையிலேயே இருக்கும். இயேசு கிறிஸ்து கூறிய பரிசேயனுடைய ஜெபமாகவே இவர்களது ஜெபம் இருக்கும். எனவே இந்தப் பெருமை நம்மை ஆழ்த்திவிடாமல் கவனமாக இருக்கவேண்டும்.

"நமது கைகளோடுகூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்! (புலம்பல் - 3:41)

அந்தரங்கத்தில் ஜெபியுங்கள் 

ஜெபிப்பதற்கு இயேசு கிறிஸ்து கூறிய முக்கியமான ஒரு முறை அந்தரங்கத்தில் ஜெபிப்பதாகும். அதாவது நாம் ஜெபிப்பது (அதாவது நமது தனி ஜெபம்) தேவனுக்கு மட்டுமே தெரிய வேண்டும். "நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறை  வீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலுள்ள உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்போது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய்  உனக்குப் பதிலளிப்பார்". (மத்தேயு - 6:6).

சில ஊழியர்கள் " நான் ஒன்றரை மணி நேரம் , இரண்டு மணி நேரம் நெடு முழங்காலில் நின்றேன் என தங்களது அந்தரங்க ஜெப பெருமையை கூறக்  கேட்கலாம். ஆனால் நாமே பார்க்கலாம், இப்படிக் கூறுபவர்களது தனிப்பட்ட வாழ்க்கை சாட்சியற்றதாகவே இருக்கும். 

ஒருமுறை ஒரு சகோதரர் என்னிடம், "பிரதர், எங்களது வீட்டில் தனி அறையே இல்லை. நான் எப்படி அந்தரங்கமாக  தனி அறையில் சென்று ஜெபிப்பது?" என்று கேட்டார். இப்படித்தான் பலர் எண்ணுகின்றனர். அந்தரங்கம், தனி அறை   என்று கூறப்பட்டுள்ளதன்  மெய்யான பொருள், "நீ ஜெபிப்பது பிறருக்குத் தெரியாமல் இருக்கவேண்டும் எனும் அர்த்தத்திலேயே தவிர அறை கதவை பூட்டிக்கொண்டு ஜெபிப்பதையல்ல. உன் உள் மனக்கதவை பூட்டிக்கொண்டு என்று அர்த்தம்.


மனச்சாட்சியோடு ஜெபியுங்கள் 

ஜெபிப்பதில்  மன சாட்சியோடு ஜெபிப்பது முக்கியம். எனக்குத் தெரிந்த ஆசிரியர்  நண்பர் ஒருவருக்கு இரண்டு குழந்தைகள். அவரது மனைவியும் ஆசிரியை. காலையில் எழுந்ததும் அவரது மனைவி படும் கஷ்டம் சொல்லி முடியாது. சமையல் வேலையை முடித்து இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்டி, பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர்களும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவர் கணவரோ ஆவிக்குரிய மனிதர் என்று சொல்லிக்கொள்பவர். காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு தனி அறையில் சென்று ஜெபிக்கிறேன் என்று சொல்லிக்  கதவை மூடிக்கொள்வார். ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து கதவைத் திறந்துகொண்டு வெளி வருவார். அதற்குமுன் அவர் மனைவியே  தனியே அனைத்து வேலைகளையும் தனியே செய்து முடித்துவிட்டு சாப்பிட்டும் சாப்பிடாமலும் பள்ளிக்குச் செல்வார். அவர் சென்றபின் இந்த ஆவிக்குரிய ஆசிரியர் குளித்து மனைவி ஆக்கிவைத்த சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு நிதானமாக பள்ளிக்குச் செல்வார். மனைவி படும் கஷ்டத்தைப் பற்றியோ இதர விஷயங்களை பற்றியோ இவருக்கு ஒரு கவலையும்கிடையாது. இத்தகைய மனச்சாட்சியற்ற ஜெபம் தேவையா? இதனை தேவன் அங்கீகரிப்பாரா? சாதாரண உலக மனிதன்கூட இப்படி இருக்க மாட்டானே? எனவே ஜெபத்தைவிட மனிதத் தன்மை முக்கியம். 

எப்போதும் ஜெபம் பண்ணுங்கள் 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "சோர்ந்துபோகாமல் எப்போதும் ஜெபம் பண்ணவேண்டும்" (லூக்கா - 18:1) என்று அறிவுறுத்தினார்.   அப்போஸ்தலரான பரிசுத்த பவுல் அடிகளும், " இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" (கொலோ - 4:2 & 1 தெச - 5:17) என்று அறிவுரைக்கு கூறுகின்றார்.

பலருக்கும் இது குறித்து தெளிவில்லை. இந்த அவசர உலகத்தில் எப்போதும் இருந்து ஜெபம் பண்ணிக்கொண்டே இருந்தால் போதுமா? மனிதனுக்கு வேறு வேலையே இல்லையா? என்று எண்ணுகின்றனர்.  எப்போதும் ஜெபம் பண்ணவேண்டும் என்று கூறுவதால் ஒரு ஓரமாக அமர்ந்திருந்து ஜெபித்துக்கொண்டே இருக்கவேண்டும் என அர்த்தமல்ல. நமது இருதயம் எப்போதும் தேவ சிந்தையுடன் இருக்கவேண்டும் என்பதே பொருள். ஒருவர் எந்த வேலை செய்தாலும் அதனிடையே தேவனை புகழ்ந்து போற்ற முடியும். நீங்கள் ஒரு ஆசிரியராக, மருத்துவராக, கொத்தனாராக, தச்சுவேலை செய்பவராக இருக்கலாம். அனால் உங்கள் வேலையினூடே தேவனை புகழ்ந்து நன்றி சொல்லி ஜெபிக்க முடியும். ஆதாவது நமது ஆத்துமா தேவ தொடர்பில் இருக்கும்.

அப்படி ஜெபிக்கும் மனிதன் தவறான செயல்பாடுகளில் ஈடுபடமாட்டான். அப்படி ஜெபிக்கும் மனிதன் இழிவான ஆதாயத்துக்காக  எதுவும் செய்யமாட்டான்.

"ஜெபத்தில் உறுதியாய் தரித்திருங்கள் " (ரோமர் - 12:12)

யாருக்காக ஜெபிப்பது?

பலரது ஜெபங்கள் தங்களது குடும்ப தேவைகளை எடுத்துச் சொல்லி வேண்டுவதாகவே இருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்து  சொல்கிறார்,  " உங்கள் பிதாவைநோக்கி நீங்கள் வேண்டிகொள்கிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்" (மத்தேயு - 6;8).

நமது தேவை பிதாவுக்குத் தெரியும் எனும் நம்பிக்கை நமக்கு வேண்டும். நமது தேவைகளை அவர் பார்த்துக்கொள்வார். எனவே நமக்காக ஜெபிப்பதுடன் மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். அப்போஸ்தலரான பவுல் அடிகள் திமோத்தேயுக்கு  பின்வருமாறு எழுதுகிறார்:

"  எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களை பண்ணவேண்டும். நாம் எல்ல பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலக்கமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு ராஜாக்களுக்காகவும் அதிகாரமுள்ள யாருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்" (1. திமோத்தேயு -2:1,2). பிறருக்காக ஜெபிக்கும்போது பிறர் செய்யும் தவறுகள், அவர்களது முரண்பாடான செயல்கள் நம்மை நோகச்செய்யாது. மட்டுமல்ல அதுதான் கிறிஸ்து கூறிய , "தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது" எனும் மேலான ஆவிக்குரிய நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும். 

ஊழியர்களுக்காகவும் / ஊழியங்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும்  

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் சுமந்து செல்லும் ஊழியர்களுக்காகவும் அவர்கள் சொல்லும் சுவிசேஷ அறிவிப்புகள் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் நாம் ஜெபிக்கவேண்டும். அவர்களது ஊழிய தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிக்கவேண்டும். பவுல் அடிகள், "திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்"  (கொலோசெயர் -4:4) எனக் கூறுவது கவனிக்கத்தக்கது. பவுல் போன்ற மிகப்  பெரிய ஊழியர்களுக்கே மக்களது ஜெபங்கள் தேவைப்பட்டதானால் நமக்கு அது எவ்வளவு தேவை!

சந்தேகப்படாமல் ஜெபிக்கவேண்டும், தேவ சித்தம் நிறைவேற ஜெபிக்கவேண்டும் 



நமது விசுவாசத்துக்கு பெரும் தடையாக இருப்பது சந்தேகம். ஜெபிக்கும்போது நமது ஜெபம் கேட்கப்படுகிறது எனும் நிச்சயம் நமக்கு வேண்டும். தேவனோடு தொடர்பில் இருந்தால்தான் அது முடியும். அல்லது ஏதோ அரற்றுவதுபோல கொஞ்சநேரம் உளறுவதாகத்தான் நமது ஜெபம் இருக்கும். ".........எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கக்கடவன். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடல் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக" (யாக்கோபு - 1:6,7). ஆனால் சந்தேகமில்லாமல் ஜெபித்தாலும் சில வேளைகளில் உடனே தேவன் நமது வேண்டுதல்களைக் கேட்பதில்லை.  காரணம் பலவாக இருக்கும். தேவன் நம்மை மேலும் விசுவாசத்தில் திடப்படுத்த  விரும்பலாம், அல்லது நாம் கேட்பது தேவ சித்தத்துக்கு எதிரானதாக இருக்கலாம்.  தேவனோடு நெருக்கமான  தொடர்பிருந்தால்தான் இது முடியும். எனவே நாம் எப்போது ஜெபித்தாலும்  அவரது சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்தே ஜெபிக்கப் பழக வேண்டும்.

தனது பாடுகளின் முன் இயேசு கிறிஸ்து கெத்சமெனி தோட்டத்தில் ஜெபிக்கும்போது இப்படித்தான் ஜெபித்தார், "பிதாவே , உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல , உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்" (லூக்கா- 22:42).

மேலும் தேவ சித்தமில்லாமல் நமது சுய விருப்பத்தை நிறைவேற்ற ஜெபிப்பதால் பல வேளைகளில் நாம் வேண்டுவதை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறோம். "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாத விதமாய் விண்ணப்பம் பண்ணுகிற படியால் பெற்றுக்கொள்ளாம லிருக்கிறீர்கள்"  (யாக்கோபு - 4:3).

மேலும் நமது குற்றங்குறைகளை யாருக்கு எதிராக குற்றம் செய்தோமோ அவர்களிடம் அறிக்கையிட்டு ஜெபிக்கவேண்டும். "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கைபண்ணி ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள் "  (யாக்கோபு - 5:16).

எனவே சிறப்பான ஜெபம் என்பது .....

* இருதயத்தை தேவ சந்நிதியில் ஊற்றி ஜெபிப்பது
* தன்னைத் தாழ்த்தி ஜெபிப்பது
* அந்தரங்கத்தில் ஜெபிப்பது
* பெருமையில்லாமல் ஜெபிப்பது
* எப்போதும் எந்த வேலை செய்தாலும் ஜெப சிந்தையுடன்      இருப்பது
* பிறரை மதித்து அவர்களது தேவைகளை சந்தித்து ஜெபிப்பது
* தனக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும் ஜெபிப்பது
* சுய இச்சையை நிறைவேற்ற என்று ஜெபியாமலிருப்பது
* பிறருக்கு விரோதமாய் செய்த  செயல்களை அறிக்கையிட்டு ஜெபிப்பது
* தேவ சித்தம் அறிந்து ஜெபிப்பது
* தேவ சித்தம் நிறைவேற ஜெபிப்பது

ஆம் அன்பானவர்களே, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது "  (யாக்கோபு - 5:16).









        
         






Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்