வானத்தைப் பார்

 ஆதவன் 🖋️ 663 ⛪ நவம்பர் 21,  2022 திங்கள்கிழமை

"எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை." ( ரோமர் 1 : 20 )

இன்றுள்ள விஞ்ஞான யுகத்தில் மனிதனது புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பலர் கடவுள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். "கடவுள் என்பது கற்பனை; மனிதனைக் கடவுள் படைக்கவில்லை, கடவுளை மனிதன்தான்  படைத்தான்." என்ற தப்பறையான போதனைக்கு இளைஞர்கள் அதிகம் இழுக்கப்படுகின்றனர்.  

ஆனால், உண்மையில் மிகப்பெரிய விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். இன்றைய வசனம் கூறுவதைப்போல, காணப்படாத அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகளை உண்டாக்கப்பட்டப் பொருட்களில் கண்டு தேவனை நம்பினர். இப்படிக் காணத் தவறினால் நியாயத் தீர்ப்பில் தேவனிடம் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது 

இதுவரைப் உலகினில் பிறந்த மனிதர்களிலேயே அதிக அறிவாளி (I Q )  ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் (1879 - 1955). அவர் குறிப்பிட்ட மதத்தை ஆதரிக்காவிட்டாலும், ஒரு மிகப்பெரிய சக்தி இந்தப் பிரபஞ்சத்தை நடத்துகின்றது என்பதை ஒத்துக்கொண்டார். இயற்கையாக தானாக பிரபஞ்சம் அமைந்த்திட வாய்ப்பில்லை என்கின்றார் அவர்.

நிகழ்தகவு கோட்பாடு (Probability Theory) எனும் மிகப்பெரிய விஞ்ஞான கோட்பாட்டினைக் கண்டறிந்த பாஸ்கல் (1623 - 1662) அவர் கண்டறிந்து கூறுவது நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. அவர் கூறுகின்றார், "ஒவ்வொவொரு  மனிதனது இருதயத்திலும் கடவுள் உருவாக்கிவைத்துள்ள வெற்றிடம் ஒன்று உள்ளது. இந்த வெற்றிடத்தை உருவாக்கப்பட்ட எந்த உலகப் பொருளினாலும் நிரப்பிட முடியாது. கிறிஸ்து வெளிப்படுத்திய கடவுளால் மட்டுமே இந்த  வெற்றிடத்தை நிரப்பிட  முடியும்." என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.

சர் ஐசக் நியூட்டன் (1642 - 1727) அவர்களைப்பற்றி ஒரு சம்பவம் படித்தேன். ஒருமுறை அவர் ரெயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது வேதாகமத்தைப் படித்து ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது அருகில் அமர்ந்திருந்த இளைஞன் அவர் யார் என்பதை அறியாமல் அவரிடம், "ஐயா, விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. இன்னும் வேதாகமத்தையும் ஜெபத்தையும் நம்புகிறீர்களே என்று கிண்டலாகக் கூறி, ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையாகக் கூறினான். பாருங்கள் மனிதன் இப்படியெல்லாம் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கின்றான், நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள்........ஐயா கடவுள் என்று எதுவும் கிடையாது என்றான்".   

நியூட்டன் அவனிடம் எதுவும் தர்க்கம் செய்யவில்லை. தான் இறங்கும் இடம் வந்தபோது தனது அடையாள அட்டையை அவனிடம் கொடுத்து, என்னை இந்த முகவரியில் வந்து பாருங்கள், நாம் விரிவாகப்  பேசலாம்  என்றபடி இறங்கிச் சென்றுவிட்டார். அந்த முகவரியைப் பார்த்த இளைஞன் திடுக்கிட்டான். தன்னிடம் பேசிக்கொண்டிருந்தனர் நியூட்டன் என்பது அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது. 

அவர் கொடுத்த முகவரியத் தேடித் கண்டுபிடித்து அங்கு சென்றான் அந்த இளைஞன். நியூட்டனின் விஞ்ஞான கூடத்தின்  ஒரு அறையில்  இந்தப் பிரபஞ்சத்தை அவர் செயற்கையாக உருவாக்கி வைத்திருந்தார்.  காந்த சக்தியின்மூலம் சூரியன், கோள்கள், சந்திரன், பூமி இவை அந்தரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. இளைஞன் ஆச்சரியத்துடன், "ஐயா, இவைகளை நீங்கள்தான் உருவாக்கினீர்களா? என்று கேட்டான். அவனுக்குப் பதிலாக நியூட்டன், "இல்லை, இவை தானாக வந்துவிட்டன. ஒருநாள் நான் உறங்கி விழித்துப் பார்க்கும்போது இவைகள் இங்கு வந்திருந்தன" என்றார். 

"அது எப்படி ஐயா தானாக இவை  வரும்? நீங்கள்தான் உருவாகியிருக்கிறீர்கள்" என்றான் இளைஞன். "நான் உருவாக்க வில்லை. தானாகத்தான் வந்தன" என்றார் நியூட்டன். அந்த இளைஞன் நியூட்டன் தன்னைக் கிண்டல் செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான்.  அவனிடம் நியூட்டன் கூறினார், " தம்பி இந்தச் சிறிய அறையினுள் இந்த மாதிரி உருவங்கள் தானாக வந்திருக்க முடியாது என்று உறுதியாக நம்புகின்றாய், அப்படியிருக்கும்போது உண்மையான இவைகள் எப்படித் தானாகத் தோன்றியிருக்கமுடியும்?  அந்த இளைஞன் வெட்கப்பட்டு நியூட்டன் கூறியதை ஏற்றுக்கொண்டான்.

"இந்த ஆண்ட சராசரங்கள், சூரியன், கிரகங்கள், பூமி , பால்வீதி இவை இயற்கையில் தோன்றிட வாய்ப்பில்லை. இவற்றுக்குப்பின் மிகப்பெரிய தேவ ஞானம் இருக்கின்றது" என்கின்றார் நியூட்டன். 

கடவுள் நம்பிக்கையற்றவர்களாக நீங்கள் இருந்தால் அல்லது விசுவாசக் குறைவு ஏற்படும்போது இரவுவேளைகளில்  மொட்டை மாடியில் படுத்து வானத்தைப் பாருங்கள். 

"பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது." ( சங்கீதம் 19 : 2 )

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...