DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, November 14, 2022

பொறாமை அதம்பண்ணும்

 ஆதவன் 🖋️ 657 ⛪ நவம்பர் 15,  2022 செவ்வாய்க்கிழமை

"கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்." ( யோபு 5 : 2 )

கோபம்,  பொறாமை எனும் இரண்டு குணங்களைப்பற்றி இன்றைய வசனம் கூறுகின்றது. கோபம் வருவதற்கு முக்கிய காரணம் பொறாமைதான். நம்மைவிட மற்றவர்கள் நன்றாக இருப்பது பலருக்குப் பிடிக்காது. இதுவே பொறாமைக்குணம். இப்படிபட்டப் பொறாமை கொள்பவன் தனது பொறாமையை கோபத்தில் வெளிப்படுத்துவான்.

இன்றைய தினசரி பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான பாவக் காரியங்களுக்குப்பின்னால் பொறாமையும் கோபமும் அடங்கியிருப்பதைக் காணலாம். 

தான் காதலிக்கும் பெண் மற்ற ஒருவனுக்குக் கிடைக்கக்கூடாது,  தன்னைவிட மற்றவர்கள் செல்வம் சேர்த்துவிடக்கூடாது, நல்ல ஆடையோ நகைகளையோ அணியக்கூடாது, எந்த இடத்திலும் நானே முன்னால் நிற்கவேண்டும், அடுத்தவர்கள் பதவி பெற்றுவிட்டால் அந்த இடத்தில நாம் இருக்கக்கூடாது, இவைபோன்றவையே பொறாமைக்குணம் கொண்டவர்களது எண்ணங்கள். இப்படிப் பொறாமை கொண்டவர்கள் கோபம் அதிகரிக்கும்போது  துணிந்து எந்தச் செயலையும் செய்வார்கள். 

கொலைகள்,  களவு, அடுத்தவர் சொத்தினை அபகரித்தல், கற்பழிப்பு, ஒருவரைக்குறித்து மேலதிகாரிகளுக்கு மொட்டைக்கடிதம் அனுப்புவது,  இவை எல்லாமே பெரும்பாலும் பொறாமையினால் ஏற்படும் கோபத்தின் விளைவுகளே இந்தக் . "கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்."

காயின் தனது சகோதரன் ஆபேலைப் கொலைசெய்யக் காரணம் பொறாமையே. இதனை அப்போஸ்தலரான யோவான், "பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே." ( 1 யோவான்  3 : 12 ) என்று கூறுகின்றார். புத்தியில்லாத அவனது செயல்   கர்த்தரது சாபத்துக்கு ஆளாக்கியது. "உலகத்தில் நிலையற்று அலைந்து திரிகிறவனாயிருப்பாய்" என்று சபித்தார் கர்த்தர்.   

மேலும், பொறாமை, கோபம் போன்ற குணங்கள் மனிதனை உடலளவில்  பாதிக்கும் என்று விஞ்ஞானமும் கூறுகின்றது. இரத்தக்கொதிப்பு,  இருதய நோய்கள், வயிறு சம்பந்தமான சில நோய்கள் ஏற்பட கோபமும் பொறாமையும் காரணமாயிருக்கின்றன. 

"பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதன் பண்ணும் என்பதற்கு  வதைக்கும் என்று பொருள். இதனை நாம் For wrath killeth the foolish man, and envy slayeth the silly one என்று ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசிக்கின்றோம்.  

பொறாமை பிசாசின் குணம். ஆதியில் தேவனோடு இருந்த லூசிபர் பெருமை, பொறாமை எனும் பாவத்தால்தான் நரகத்தில் தள்ளப்பட்டான். தேவனுக்குக் கிடைக்கும் ஆராதனையைக் கண்டு பொறாமைகொண்டான். அதுபோல  தனக்கும் ஆராதனை கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்த்தான். பொறாமையால் அழிந்தான்.  

அன்பானவர்களே, பொறாமை, கோபம் போன்ற குணங்கள் நம்மிடம் இருப்பதை உள்ளத்தின் உணர்ந்தால் தேவனிடம் மன்னிப்பு வேண்டுவோம். இத்தகைய குணங்களை இருதயத்தில் வைத்துக்கொண்டு நாம் செய்யும் ஆராதனைகளும், கொடுக்கும் காணிக்கைகளும் கர்த்தருக்கு ஏற்புடையவை அல்ல.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: