கிறிஸ்துவின் நறுமணம்

 ஆதவன் 🖋️ 667 ⛪ நவம்பர் 25,  2022 வெள்ளிக்கிழமை

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்."( 2 கொரிந்தியர் 2 : 14 )

பாகிஸ்தான் நாட்டில் சென்ற நூற்றாண்டின் மத்தியகாலத்தில் வாழ்ந்தவர் பில்குய்ஸ் எனும் பெண்மணி பற்றி அவர்களது புத்தகத்தில் படித்தேன். அவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர். அவரது கணவர் பாகிஸ்தான் அரசாங்கத்தில் அமைச்சரவையில்  பதவி வகித்தவர். இந்தப் பெண்மணிக்கு இயேசுவைக் குறித்தோ கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்தோ ஏதும் தெரியாது. ஆனால் அவரது வீட்டில் வேலைசெய்த வேலைக்காரப் பெண்மணிமூலாம் இயேசுவை அறிந்துகொண்டார். அவரை தேவன் கனவு மூலமே வழிநடத்தினார். 

வேதாகமத்தை அவர்  சரியாக படித்து அறியுமுன்னமே ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் வெண் ஆடை அணிந்த ஒருநபர் நறுமணத் தைலங்கள் ( Scent ) விற்பனை செய்ய அவரது வீட்டிற்கு வந்தார். பில்குய்ஸ் அவரிடம் அந்த நறுமணத் தைலங்களைக்குறித்து விசாரிக்கவே அவர் குறிப்பிட்ட ஒரு தைலத்தை எடுத்து பில்குய்ஸ் கையில் கொடுத்து நுகர்ந்து பார்க்கச் சொன்னார். அந்தத் தைல பாட்டிலைத் திறந்ததும் மிகச் சிறந்த நறுமணம் பரவி அவர் வீடு முழுவதும் நிரப்பிற்று. இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அவர் சென்றுவிட்டார்.

பில்குய்ஸ் அவர்களுக்கு இந்தக் கனவின் பொருள் விளங்கவில்லை. இதுபற்றி ஒன்றும் புரியவில்லை. அன்று மாலை அவர் வேதாகமத்தைப் படிக்கமுயன்றார். இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய கணவன் என்பதால் மறைத்து மறைத்துதான் வேதாகமத்தை அவர் படிக்கவேண்டியிருந்தது.  அப்படிப் படிக்கும்போது அவர் கண்ணில் பட்டது இன்றைய நமது தியானத்துக்குரிய வசனம். "எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." எனும் வார்த்தைகளை வாசித்தபோது அவருக்குக் கனவின் பொருள் புரிந்தது. "நான் என்னை அறியாமல் துள்ளிக் குதித்துவிட்டேன்" என்று எழுதியுள்ளார் அவர். 

"இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 15 ) என்று தொடர்ந்து எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

அன்பானவர்களே, கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் நம்மை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் நம்மைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்த கிறிஸ்து விரும்புகின்றார். அதாவது சாட்சியுள்ள ஒரு வாழ்க்கைமூலம் கிறிஸ்துவின் நறுமணம் உலகில் பரவிடவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். 

"இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." என்று கூறியுள்ளபடி கெட்டுப்போகிறவர்களும் அவரை அறிந்திடவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். காரணம், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம் திரும்பிடவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். கெட்டுப்போகிறவர்களும் கிறிஸ்துவுக்குள் மற்றவர்கள் வாழும் சாட்சி வாழ்க்கையைப் பார்த்து மனம் திரும்பிட வாய்ப்புண்டு.

நமது சாட்சி வாழ்வால் கிறிஸ்துவின் நறுமணம் உலகினில் பரவிடச் செய்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்