Monday, August 03, 2026

🦋 Meditation verse - பிலிப்பியர் 4 : 19 / Philippians 4:19

 தியானம் - 2005

"ஆதவன்"ஆகஸ்ட் 05  புதன் 2026   


"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." ( பிலிப்பியர் 4 : 19 )

இன்றைய தியான வசனம் நமக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரும் வசனமாகும். அப்போஸ்தலரான பவுல் இந்த வசனத்தில் பிதாவாகிய தேவனை வெறுமனே தேவன் என்று சொல்லாமல், "என் தேவன்" என்று கூறுகின்றார். சிறு பிள்ளைகள் தங்கள் நண்பர்களிடம் பேசும்போது சிலவேளைகளில், "என் அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தருவேன் என்று சொல்லியிருக்கிறார்" என்று கூறுவார்களே அதுபோல என்று இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆம், பவுல் தேவனைத் தனக்குத் தனிப்பட்ட உரிமையுள்ளவராக என்தேவன் என்று கூறுகின்றார்.

மட்டுமல்ல, தேவனிடம் எல்லா செல்வங்களும் நிறைந்துள்ளன. நமது எந்தத் தேவையையும் பூர்த்திசெய்ய அவரால் முடியும். இதனையே அவர், தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் என்று கூறுகின்றார். அதாவது, எனது தேவன் அளப்பரிய செல்வத்துக்குச் சொந்தக்காரர். அவர் எனது தேவைகளை மட்டுமல்ல, உங்கள் அனைவரது அனைத்துக் குறைகளையும் நிறைவாக்குவார் என்று கூறுகின்றார். 

ஆனால், பிதாவாகிய தேவன் தன்னிடம் உள்ள செல்வத்தைத் தானாகக் கொடுக்காமல் தனது குமாரன் மூலமே கொடுக்கின்றார். இது பிதாவாகிய தேவன் தனது குமாரனிடம் கொண்டுள்ள தனிப்பட்ட அன்பின் வெளிப்பாடு.  இந்த உண்மையினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதனையே,  கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று கூறுகின்றார் பவுல். அதாவது பிதாவாகிய தேவனிடமுள்ள அளப்பரிய செல்வத்தை நாம் கிறிஸ்து இயேசு மூலமே பெறமுடியும். 

இன்று யெகோவா சாட்சிகள் போன்றவர்களும் இதர சில சபைகளும் பிதாவாகிய தேவனுக்கு முன்னுரிமைகொடுத்து அவரிடமே நாம் வேண்டுதல் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், நாம் பிதாவிடம்  நேரடியாக அல்லாமல் அவரது குமாரன் மூலம் வேண்டுதல் செய்யவேண்டும். குமாரனாகிய அவரையே பிதாவானவர் தனது பரலோக செல்வத்துக்கு உரிமையாளராகத்  தகுதிப்படுத்தியிருக்கிறார். 

இதனையே, "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 9 -11 ) என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நாமத்துக்கு வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும். பூமியின் கீழுள்ள ஆவிகள்கூட முடங்கும். எனவே அவர் கொடுக்க முயல்வதை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் கிறிஸ்துவிடம் அன்பாயிருக்கிறவன் பிதாவுக்கும் அன்பாயிருக்கிறான் என்று வேதம் கூறுகின்றது.  கிறிஸ்து இயேசுவின் கட்டளைகளை நாம் கைக்கொள்ளும்போது நாம் அவருக்கு அன்பாயிருக்கிறோம் என்று பொருள். "என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்." ( யோவான் 14 : 21 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

நமது தேவன் தனக்குள் அடங்கியிருக்கும் ஒப்பற்ற மகிமைச் செல்வத்தை கிறிஸ்துமூலமே உலகிற்கு அளிக்கின்றார் எனும் உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.  எனவே நாம் கிறிஸ்துவிடம் அன்பாயிருக்கும்போது நமது குறைகளை அவர் நிறைவாக்குகின்றார். அந்நிய உபதேசங்களால் அலைக்கழிக்கப்படாமல் கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்வோம். அப்போது பிதாவாகிய தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2005

"AATHAVAN" | August 05 | Wednesday 2026

"But my God shall supply all your need according to his riches in glory by Christ Jesus." — Philippians 4:19

Today’s meditation verse brings us hope and joy. In this verse, the Apostle Paul does not simply refer to God the Father as "God," but calls Him "my God." We can compare this to how young children sometimes talk to their friends, saying, "My dad told me he’s going to buy me a bicycle." Yes, Paul speaks of God as someone who belongs to him personally when he says, "my God."

Furthermore, God possesses all riches. He is capable of fulfilling any need we have. This is what Paul means when he says, "according to his riches... shall supply all your need." In other words, "My God is the owner of immeasurable riches. He will supply not only my needs but all the lacks and needs of every one of you."

However, God the Father does not bestow His riches directly by Himself, but through His Son. This is an expression of the special love that God the Father has for His Son. We must understand this truth. That is why Paul says, "in glory by Christ Jesus." This means we can receive the boundless riches of God the Father only through Jesus Christ.

Today, groups like Jehovah's Witnesses and certain other churches claim that we should prioritize God the Father and pray only to Him. But the truth is that we must not approach the Father directly, but through His Son. The Father has designated the Son as the rightful possessor of His heavenly treasures.

This is clearly written:

"Wherefore God also hath highly exalted him, and given him a name which is above every name: That at the name of Jesus every knee should bow, of things in heaven, and things in earth, and things under the earth; And that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father."— Philippians 2:9–11

At the name of Christ, every knee shall bow—of those in heaven, on earth, and under the earth. Even the spirits beneath the earth must bow. Therefore, no one can stop what He intends to give.

Furthermore, the Scriptures declare that whoever loves Christ is also loved by the Father. When we keep the commandments of Jesus Christ, it means we love Him. Jesus Christ said:

"He that hath my commandments, and keepeth them, he it is that loveth me: and he that loveth me shall be loved of my Father, and I will love him, and will manifest myself to him." — John 14:21

We must realize the truth that our God bestows His incomparable, glorious riches upon the world only through Christ. Therefore, when we love Christ, He fulfils all our lacks and needs. Let us live by keeping the commandments of Christ without being tossed about by foreign doctrines.

Then, God shall supply all your need according to his riches in glory by Christ Jesus.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

Sunday, August 02, 2026

🦋 Meditation verse - உபாகமம் 23 : 14 / Deuteronomy 23:14

 தியானம் - 2004

"ஆதவன்"ஆகஸ்ட் 04  - செவ்வாய்  2026   


"உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது." ( உபாகமம் 23 : 14 )

இன்றைய தியான வசனம் கர்த்தர் மோசே மூலம் இஸ்ரவேல் மக்களுக்குத் தூய்மையினைக் கடைபிடிக்கக் கூறிய ஒரு அறிவுரை. இஸ்ரவேல் மக்கள் மலம்கழிக்கச் செல்லும்போது ஒரு கோலையும் கையில் கொண்டு செல்லவேண்டுமென்றும் அதனால் மணலில் குழியெடுத்து அதில் மலம் கழித்தபின்னர் அதனை மணலினால் மூடிவிடவேண்டும் என்றும் அறிவுரைகூறித் தொடர்ந்து, இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். இதன்மூலம் தேவன் கூறும் முக்கிய காரியம் என்னவென்றால்  நீங்களும் உங்கள் வசிப்பிடமும்  தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே. 

அன்பானவர்களே, நாம் ஏற்கெனவே பலமுறை தியானங்களில் விளக்கிக் கூறியுள்ளபடி பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாக இருக்கின்றது என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, அனைத்துப்  பழைய ஏற்பாட்டுக் காரியங்களையும் நாம் புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது" என்று. அதாவது, நமது ஆவிக்குரிய வாழ்வில் தேவன் நம்மோடு கூடவே இருக்கின்றார். அவர் நம்மோடு உலவி நமது தேவனாக இருக்கின்றார். எனவே, அவரது இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பைப்  பெற்றுள்ள நாம் நம்மைத் தூய்மையுள்ளவர்களாக காத்துகொண்டு வாழவேண்டியது அவசியம். நம்மிடம் அவருக்கு ஏற்பில்லாத செயல்களைக்கண்டு நம்மைவிட்டு அவர் விலகிச் சென்றுவிட நாம் அனுமதிக்கக்கூடாது. 

தேவன் நம்மைவிட்டு விலகும்போது, இஸ்ரவேலர்களை விட்டு தேவன் விலகியபோதெல்லாம் அவர்கள் பல்வேறு இராஜாக்களுக்கு அடிமைகளானதுபோல நாமும் அடிமைகளாவோம். அப்போஸ்தலரான பேதுரு இதனால்தான், "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்று நம்மை எச்சரிக்கின்றார்.

அதாவது, தேவனை நீங்கள் அறிந்துள்ளபடியினால் இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி, அவர் பாளயத்திற்குள்ளே (உனக்குள்ளே) உலாவிக்கொண்டிருக்கிறார், உன்னிலுள்ள அசுத்த காரியங்களை உன்னைவிட்டு விலக்கி உன்னைப் பரிசுத்தப்படுத்தியுள்ளார்.  எனவே நீ மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவைகளால் ஜெயிக்கப்பட்டால், உன் பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும் என்று கூறுகின்றார். 

மட்டுமல்ல, அப்படிச் செய்வது நாய் தான் கக்கினத்தைத் தின்பதுபோன்றதாகும். "நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது" ( 2 பேதுரு 2 : 22 ) என்று வாசிக்கின்றோம். 

இன்றைய தியான வசனம், "உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும்" என்று கூறுகின்றது. நமக்குச் சத்துருக்கள் யார்? அது நமது பாவங்களும் நம்மை நெருக்கி நசுக்குகின்ற பல்வேறு உலகப் பிரச்சனைகளும்தான். இவைகளிலிருந்து நாம் தப்புவிக்கப்பட, தேவன் நமக்குள் உலாவிடவேண்டியது அவசியமாக இருக்கின்றது. 

ஆகையால், அவர் நம்மிடம் அசுத்தமான காரியங்களைக்கண்டு நம்மைவிட்டு விலகிப் போய்விடாதபடிக்கு நம்மைச் சுத்தமாகக் காத்துக்கொள்வோம். பேதுரு கூறுகின்றபடி உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Meditation - 2004

"AATHAVAN" | August 04 | Tuesday, 2026

"For the LORD thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee; therefore, shall thy camp be holy: that he see no unclean thing in thee, and turn away from thee." — Deuteronomy 23:14 (KJV)

Today's meditation verse is an instruction given by the Lord through Moses to the people of Israel regarding cleanliness. The Lord advised that whenever the Israelites went out to relieve themselves, they should carry a paddle with them, dig a hole in the sand, and cover their excrement with dirt. Right after giving this instruction, He speaks today’s verse. The key message God emphasizes through this is that both you and your dwelling place must be clean and holy.

Dearly beloved, as we have often explained in previous meditations, we must never forget that the Old Testament serves as a shadow of the New Testament. Therefore, it is essential for us to compare all Old Testament matters with the New Testament.

In today's verse, we read: "that he see no unclean thing in thee, and turn away from thee." This means that in our spiritual life, God is right there with us. He walks in our midst and is our God. Therefore, having been washed by His blood and having received the forgiveness of sins, it is vital that we keep ourselves pure and holy. We must not allow Him to see unpleasing actions in us and turn away from us.

When God departs from us, just as the Israelites became slaves to various kings whenever God turned away from them, we too will fall into bondage. This is why the Apostle Peter warns us:

"For if after they have escaped the pollutions of the world through the knowledge of the Lord and Saviour Jesus Christ, they are again entangled therein, and overcome, the latter end is worse with them than the beginning." — 2 Peter 2:20 (KJV)

In other words, because you know God, as today’s meditation verse says, He walks in the midst of your camp (within you), and He has cleansed you by removing unclean things from you. Therefore, if you become entangled in them again and are overcome by them, your latter end will be worse than the beginning.

Not only that, doing so is like a dog returning to its own vomit. As we read:

"But it is happened unto them according to the true proverb, The dog is turned to his own vomit again; and the sow that was washed to her wallowing in the mire." — 2 Peter 2:22 (KJV)

Today's meditation verse states: "For the LORD thy God walketh in the midst of thy camp, to deliver thee, and to give up thine enemies before thee." Who are our enemies? They are our sins and the various worldly troubles that press down upon us and crush us. To be delivered from these, it is essential that God walks within us.

Therefore, let us keep ourselves clean so that He does not see unclean things in us and turn away from us. As Peter says, if those who have escaped the pollutions of the world become entangled in them again and are overcome, their latter end will be worse than the beginning.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

🏫 வேதாகமத் தியானம் - ஜூலை 2026

"ஆதவன்" தியானம் - 1971

ஜூலை 01, புதன் 2026  

"நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்." ( எரேமியா 5 : 1 )

நமது தேவன் பாவத்தை வெறுக்கின்றார், ஆனால் பாவிகளை நேசிக்கின்றார். பாவத்தினால் எவரும் அழிந்து பரலோக இன்பத்தை இழந்துவிடக்கூடாது என அவர் விரும்புகின்றார். எனவேதான்  எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் ஒருவன் தனது பாவத்தை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பை வேண்டும்போது தனது கிருபையினால் மன்னித்து அவர்களுக்கு மீட்பளிக்கின்றார். 

இப்படி ஒரு நாட்டில் அல்லது ஊரில் தேவனுக்கேற்ப வாழும் மக்கள் இருப்பார்களானால் தேவன் அவர்களுக்காக அந்த மொத்த நாட்டிற்குமே தீங்கு செய்யாமல் இருக்கின்றார். இதனையே, "இப்படிச் செய்கின்ற மனிதன் யாராவது எருசலேமில்  இருக்கின்றார்களா என்று திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்" என்கின்றார் அவர்.

ஆபிரகாமின் காலத்தில் தேவன் லோத்து குடியிருந்த சோதோம் நகரத்தை அதன் அக்கிரமங்களுக்காக அழிக்க முடிவுசெய்தார். அப்போது அந்த மக்களுக்காக ஆபிரகாம் வேண்டுதல் செய்தார். அப்போது அவர், "ஆண்டவரே, ஒருவேளை அந்தப் பட்டணத்தில் 50 நீதிமான்கள் இருந்தால் அவர்களுக்காக அந்தத் தேசத்தை அழிக்காமல் காப்பாற்றுவீரோ?" என்று கேட்கின்றார். தேவன், "ஆம், அங்கு 50 நீதிமான்களை நான் கண்டால் அந்த நகரத்தை அழிக்கமாட்டேன் என்கின்றார்". ஆனால் அங்கு ஐம்பது நீதிமான்கள் இல்லை.

ஆபிரகாம் தேவனிடம்,  முன்பு தான் தேவனிடம் கேட்டக் கேள்வியை மாற்றி, நீதிமான்களின் எண்ணிக்கையினைப்  படிப்படியாகக் குறைத்து, ஐம்பதுக்குப்பதில் 45, 40, 30, 20, பேர்கள் இருந்தால்? என்று திரும்பத் திரும்பக் கேட்கின்றார். தேவன், "இருபது நீதிமான்களை நான் அங்கு கண்டால் அந்தத் தேசத்தை அழிக்கமாட்டேன்" என்கின்றார். இறுதியில் ஆபிரகாம்,  "ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்." ( ஆதியாகமம் 18 : 32 ) என்று கூறினார் என வாசிக்கின்றோம். ஆனால் அங்கு பத்து நீதிமான்கள்கூட இல்லை. தேவன் அந்த நகரத்தை அழித்தார். 

ஆம் அன்பானவர்களே, "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்" ( ஏசாயா 55 : 7 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இதற்கு உதாரணமாக நாம் யோனாவின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள செய்தியினை உதாரணம் கூறலாம். நினிவேயின் பாவத்துக்காக தேவன் அந்த நகரத்தை அழிக்க முடிவுசெய்தார். ஆனால், யோனாவின் பிரசாங்கத்தைக் கேட்டு அந்த மக்கள் மனம் திரும்பியபோது தேவன் தனது முடிவினை மாற்றி நினிவேயை அழிக்காமல் பாதுகாத்தார். "வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்" ( யோனா 4 : 11 ) தேவன். ஆம் அன்பானவர்களே, உலகத்தின் உயிர்கள்மேல் தேவன் அன்புள்ளவராக இருக்கின்றார். 

இன்றைய தியானம் மூலம் நாம் அறியும் செய்தி, நாம் நீதியுள்ள வாழ்க்கை வாழும்போது அது நமக்கு மட்டுமல்ல நாம் வாழும் நாட்டிற்கும், அங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பு உண்டு என்பதுதான். ஆம், தேசத்தின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர். நம்மை அத்தகைய மனிதர்களாக மாற்றுவோம். நமதுமூலம் தேசம் பாதுகாப்படையட்டும். 

"ஆதவன்" தியானம் - 1972                                                                                           ஜூலை 02, வியாழன் 2026  

"பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" ( மாற்கு 5 : 36 )

"காலதாமதம் ஊழலை உருவாக்கும்" என்று சில அலுவலகங்களில் எழுதப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கலாம். ஆம், மனிதர்களது காலதாமதம் ஊழலை உருவாக்கும்; தேவனின் காலதாமதமோ அதிசயங்களைக் காணச்செய்யும். 

இதற்கு உதாரணமான சம்பவங்கள் வேதாகமத்தில் பல உண்டு. அவைகளில் ஒன்றுதான் இயேசு கிறிஸ்துவிடம் வந்த யவீரு எனும் ஜெப ஆலயத் தலைவன் ஒருவனைக்குறித்து நற்செய்தியில் நாம் வாசிப்பது. "அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து: என் குமாரத்தி மரணஅவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்" ( மாற்கு 5 : 22, 23 ) என்று கூறப்பட்டுள்ளது. 

சாகும் தருவாயில் இருக்கும் தனது மகளுக்காக இயேசு கிறிஸ்துவிடம் உதவிவேண்டி வந்த அந்தத் தகப்பனுக்கு எவ்வளவு மனவேதனை இருந்திருக்கும்!! ஆனால் அவனது வீட்டிற்குச் செல்ல இயேசு கிறிஸ்து முயன்றபோது அதற்குத் தடையாக ஒரு பெண் வருகின்றாள். அவள் இரத்தப்போக்கு நோயால் அவதிப்பட்டவள். அவள் இயேசுவின் ஆடையினைத் தொட்டால் நான் பிழைப்பேன் என்று மனதினில் எண்ணி அவ்வாறேத்   தொட்டுச் சுகம் பெறுகின்றாள். இயேசு கிறிஸ்து அவளிடம் பேசிக்கொண்டிருக்கின்றார்.  "அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்." ( மாற்கு 5 : 35 )

அப்போது யவீரு என்ன எண்ணியிருப்பான்? அவன் ஒருவேளை அந்தப்பெண்ணை மனதினில் திட்டியிருக்கலாம். காரணம், இயேசு அந்தப் பெண்ணுக்காகத் தாமதிக்காமல் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தால் அவனது மகள் பிழைத்திருக்கலாம் என்று அவன் எண்ணியிருக்கலாம். இனி என்ன? எல்லாம் முடிந்துவிட்டதே. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனது மனவேதனையை அறிந்து அன்பாக அவனிடம் கூறினார்,  "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு." பின்னர் அவனது வீட்டிற்குச் சென்று மரித்துப்போன அவனது மகளை உயிருடன் எழுப்பினார்.

ஆம் அன்பானவர்களே, மனிதர்களாகிய நாம்தான் காலத்தையும் நேரத்தைக்கும் சூழ்நிலைகளையும் கண்டு கலங்குகின்றோம். இவை அனைத்தையும் மாற்றவல்லவர்தான் தேவன். இதேபோலவே அவரது நண்பன் லாசர் நோயுற்றிருக்கும்போது இயேசு தாமதம் செய்தார். அவன் நோயுற்றச் செய்தியைக் கேட்டப்பின்னரும் தான் இருந்த இடத்திலேயே பின்னும் இரண்டு நாட்கள் தங்கினார் (யோவான் 11:6). பின்னர் புறப்பட்டுச் சென்று மரித்து நான்கு நாட்களுக்குப்பின் லாசரை உயிரோடு எழுப்பினார்.  

இதனை வாசிக்கும் அன்பான சகோதர சகோதரிகளே, இன்று நீங்கள் இதுபோல ஏதாவது பிரச்சனை, துன்பங்கள், நோய்கள் இவற்றினால் வாடிக்கொண்டிருக்கலாம். எவ்வளவோ ஜெபித்தும் பலன் இல்லையே என்று எண்ணிக் கலங்கிக்கொண்டிருக்கலாம்.  ஒருவேளை தேவன் எனது ஜெபத்தைக் கேட்கவில்லையோ என  எண்ணலாம். ஆனால், ஆண்டவர் இயேசு உங்களைப்பார்த்துக் கூறுகின்றார், "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு."

ஆம், நாம் விசுவாசத்துடன் தேவனது செயல்பாட்டிற்காகக் காத்திருப்பது நல்லது.    தேவனது காலதாமதம் நமது விசுவாசத்தை வளர்க்க உதவுகின்றது; அவர்மேலுள்ள  நமது பற்றுறுதியை அதிகரிக்கின்றது; அவரையே நாம் பற்றிக்கொண்டு வாழ உதவுகின்றது; எல்லாவற்றுக்கும் மேலாக மிகப்பெரிய அற்புதத்தை நமது வாழ்வில் கொண்டு வருகின்றது. ஆம், "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 )



"ஆதவன்" தியானம் - 1973                                                                                         ஜூலை 03, வெள்ளி 2026  

"எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று." ( சங்கீதம் 31: 9)

இன்றைய தியான வசனம் தாவீது தனது மிகக்கொடிய இக்கட்டான நெருக்கடி வேளையில் தேவனைநோக்கிக் கெஞ்சி கூறுவதாகும். இதுபோன்ற நெருக்கடிகள் உலகினில் எல்லோருக்கும் சிலவேளைகளில் ஏற்படுவதுண்டு. இன்று நாம் தினசரிப் பத்திரிகைகளை வாசிக்கும்போது பல தற்கொலைகள் இப்படி மனமடிவால் ஏற்படுவதைப் பார்க்கலாம். இத்தகைய நெருக்கடிகளில் மனிதர்களது மனமும் உடலும் பாதிக்கப்படுகின்றன. அதனையே தாவீது, துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று என்று கூறுகின்றார். 

உதாரணமாக, நம்மோடு படித்த அனைவரும் ஏதாவது ஒரு நல்ல வேலையில் அமர்ந்து வாழ்க்கையில் நிறைவடைந்து காணப்படும்போது, நாம் மட்டும் வேலையின்றி தனித்து விடப்படுவோமென்றால் நமக்கு ஊரில் நடமாடவே வெட்கமாக இருக்குமல்லவா? ஊரினுள்ள அனைவருமே நம்மை அற்பமாகத்தானே பார்ப்பார்கள்?. இதனையே தாவீது, "என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள். செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்." ( சங்கீதம் 31: 11,12)   என்கின்றார்.    

இத்தகைய வேளைகளில் நாம் உலக மனிதர்களை நமக்கு ஆறுகள்கூற அணுகமுடியாது. நமது உள்ளான வேதனைகளை நாம் யாருக்கும் அறிவிக்கவும் முடியாது; அப்படி அறிவித்தாலும் நமது மனக்கவலைகளை யாரும் முற்றிலும் புரிந்துகொள்ளவும் முடியாது. ஆனால், தேவனால் அவற்றைப்  புரிந்துகொள்ளவும் அதனை மாற்றவும் முடியும்.  எனவே இத்தகைய வேளைகளில் நாம் தேவனையே பற்றிக்கொள்ளவேண்டியது அவசியம். ஆம், தாவீது கூறுவதுபோல, "நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்." ( சங்கீதம் 31: 14) என்று கூறுவோம். 

மனிதர்களிடம் நமது கவலைகளை நாம் பகிர்ந்துகொள்ளும்போது அதனை இரக்கத்துடன் கேட்டு அவர்கள் ஆறுதல்கூறினாலும் சிலவேளைகளில் நாம் கூறியவற்றை மற்றவர்களிடம் அவர்கள் வெளிப்படுத்திவிடுவதுண்டு. இது ஏற்கெனவே நமக்கிருந்த வேதனையினை அதிகப்படுத்துவதாக இருக்கும். எனவே அன்பானவர்களே, இத்தகைய துன்பங்களில் சோர்ந்திருக்கும்போது நமது கவலைகளையும் வேதனைகளையும் தேவனிடம் மட்டுமே பகிர்ந்துகொண்டு அவர் செயல்படுவதற்கு  அமைதலோடு காத்திருப்பதே நல்லது.  

எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று என்று தாவீது கூறுவதுபோல நமது உண்மையான வேதனைகளை அப்படியே தேவனிடம் எடுத்துக்கூறுவோம். அவர் மனிதர்களைப்போல நமது துன்பங்களைக்கண்டு நம்மை அற்பமாக எண்ணமாட்டார்; அருவருக்கமாட்டார்; வேறு மனிதர்களிடம் கூறமாட்டார்.  ஆம்,  "உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்." ( சங்கீதம் 22: 24) என்று கூறியுள்ளபடி நமது கூப்பிடுதலைக்கேட்டு ஏற்ற பதிலளிப்பார்.                 

"ஆதவன்" தியானம் - 1974 

ஜூலை 04, சனி 2026     

"குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்." ( ஏசாயா 42 : 16 )

தேவனை வாழ்வில் அறியவேண்டுமானால் முதலில் நாம் நமது அறியாமையை ஒத்துக்கொள்ளவேண்டியது அவசியம். எந்த காரியத்திலும் எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணுவோமானால் நாம் ஒன்றையும் அறியத்தக்கவிதத்தில் அறியவில்லை என்று பொருள். "ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 2 ) என்று அப்போஸ்தலரான பவுல் கூறவில்லையா? 

தேவனை அறியும் விதத்திலும் இதுவே உண்மை. இன்று பலரும் தேவனை வாழ்வில் அறியாதிருக்கக் காரணம் அவர்கள் தாங்கள் தேவனை அறியவில்லை எனும் உண்மையினை ஒத்துக்கொள்ளாமல் இருப்பதால்தான். பலரும்  தேவனைக் குறித்துத் தங்கள் தாய் தந்தையர்கள் கற்பித்தச்  செய்திகள் மட்டுமே உண்மையென்று நம்பி தேவனைத் தனிப்பட்ட விதத்தில் அறிய முயலாமல் இறுதிவரை அவரை  அறியாமலேயே போகின்றனர்.  

"ஆண்டவரே, நான் உண்மையில் உம்மை அறியாதக் குருடனாக இருக்கின்றேன். நான் உம்மை அறியவேண்டும்.   எனது பெற்றோரும், ஆலயத்தில் குருக்களும் கூறும் செய்திகள் அல்ல,  நீர் உம்மை எனக்குத் தனிப்பட்ட விதத்தில்  வெளிப்படுத்தும்" என, தேவனை அறியும் உண்மையான ஆர்வத்துடன் வேண்டுவோமானால் நமக்கு அவர் வெளிப்படுவார். ஆம், "தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்." ( சங்கீதம் 145 : 18 )

இதனையே தேவன் இன்றைய தியான வசனத்தின் மூலம் கூறுகின்றார். அதாவது,  தேவனை அறியாதிருக்கின்ற ஆன்மீகக் குருடர்களை இதுவரை வாழ்வில் அவர்கள் அறியாதிருக்கும் வழியில் நடத்தி அவர்களது வாழ்வின் இருளையும், கோணலான வழிகளையும் மாற்றுவேன் என்கின்றார் தேவன். 

இப்படித் தங்களைத் தேவனுக்கு  ஒப்புக்கொடுக்காமல் வாழும் மக்களை நோக்கி இன்றைய தியான வசந்தின் அடுத்த வசனத்தில் தேவன் கூறுகின்றார்,  "சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்". ( ஏசாயா 42 : 17 ) அதாவது, ஆத்துமாவில் தேவனை உணர்ந்துகொள்ளாமல் சிலைகளையும் உருவங்களையும் பணிந்துகொண்டு அவைகளையே தேவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் தேவனை வாழ்வில் அறியாமல்  பின்னடைந்து போவார்கள். 

ஆம் அன்பானவர்களே மற்றவர்கள் கூறுவதால் அல்ல, நாம் தேவனை வாழ்வில் உணர்ந்திருக்கின்றோமா என்பதே முக்கியம். வேதாகமத்தில் தேவனை அறிந்து அன்புசெய்து வாழ்ந்த பல பரிசுத்தவான்களது அனுபவங்கள் கூறப்பட்டுள்ளன. அவை வெறுமனே வாசித்து அறிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, நமது வாழ்விலும் அவற்றை நாம் அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவும்தான். 

நாம் ஆன்மீகக் குருடர்கள் என்பதனை முதலில் ஒத்துக்கொண்டால் மட்டுமே நாம் அவரை அறியமுடியும். அப்போது குருடரான நம்மை நாம் இதுவரை  அறியாத வழியிலே நடத்தி, நமக்குத் தெரியாத பாதைகளில் நம்மை அழைத்துக்கொண்டுவந்து, நமக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவார். இந்தக் காரியங்களை செய்து முடிக்குமட்டும் அவர் நம்மைக் கைவிடாதிருப்பேன் என்கின்றார்.  தேவனைக்குறித்த நமது அறியாமையை அவரிடம் அறிக்கையிட்டு வேண்டுவோம். நிச்சயம் நமக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவார். 

"ஆதவன்" தியானம் - 1975 

ஜூலை 05, ஞாயிறு 2026     

"கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை. நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சைரசமும், மதுவும் குடிக்கவும் இல்லை." ( உபாகமம் 29 : 5, 6 )

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுக் கானானை நோக்கிப் பயணம் செய்த தூரம் மிகக் குறைவானதே.   எகிப்திலிருந்து தெற்கு கானான் பகுதிக்குச் செல்லும் மிக நேரடியான கடற்கரைப் பாதை சுமார் 90 முதல் 140 கி.மீ தூரம் கொண்டது. இப்பாதையில் நடந்து பயணம் செய்தால் சில வாரங்களில் கானானைச் சென்றடையலாம். ஆனால் தேவன் எகிப்திலிருந்து வெளியேறிய இஸ்ரயேல் மக்களை வழிநடத்தியப் பாதை இதைவிட மிக நீண்டதாக இருந்தது. சினாய் தீபகற்பம் வழியாகச் சென்ற மறைமுகப் பாதையில் அவர்கள்  பயணம் செய்த தூரம் சுமார் 987 கி.மீ ஆகும். இப்படிப் பயணம் செய்தாலும் இந்தப் பயணத்துக்கு 40 ஆண்டுகள் தேவையில்லை. ஆனால் தேவன் அதனைத்தான் அனுமதித்தார். 

இதனை நாம், "பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்." ( யாத்திராகமம் 13 : 17, 18 ) என்று வாசிக்கின்றோம். 

காரணம், தேவனே மனப்பூர்வமாக இப்படிச் செய்தார். இது ஏனென்றால், "கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்" என்று இன்றைய தியான வசனத்தில் வாசிக்கின்றோம். 

அதாவது, இக்கட்டுகளுக்குள்தான் தேவனை அறியமுடியும், அவரது அதிசயங்களை அனுபவிக்கமுடியும். இதனால் பல்வேறு இன்னல்கள், போர்கள், உணவு பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளை அந்த மக்களுக்குத் தேவன் கொடுத்தார்.  இதனையே, "நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சைரசமும், மதுவும் குடிக்கவும் இல்லை." என்று கூறப்பட்டுள்ளது. ஆம் எகிப்தில் சாப்பிட்டதுபோல வனாந்தரத்தில் அவர்களுக்கு அப்பம் கிடைக்கவில்லை, திராட்சைரசமும்  மதுவும் கிடைக்கவில்லை. ஆனால், இத்தகைய துன்பங்களிலிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றவும் செய்தார். உலக அப்பத்துக்குப்பதில் மன்னாவை அவர்கள் உண்ணும்படிக் கொடுத்தார். அவர்களது உடைகள், காலிலிருந்த செருப்புகள் பழையதாய்ப் போகவும் இல்லை.

ஆம் அன்பானவர்களே, எகிப்து எனும் பாவ வாழ்க்கையிலிருந்து தேவனை நோக்கி நாம் நடக்கும்போது இந்த உலகத்தில் பல்வேறு துன்பங்கள் நம்மை நெருக்கலாம். முன்பு நாம் அனுபவித்திருந்த பல நன்மைகள் கிடைக்காமல் போயிருக்கலாம். அதற்காக நாம் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடக்கூடாது. இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு,  உங்களை இப்படிப்பட்ட வனாந்தர பாதையில் நடத்துகின்றேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

ஆவிக்குரிய மக்களாகிய நம்மைத் தேவன் நடத்தும் வழி உலகமக்கள் நடப்பதுபோன்ற கவலைகள், துன்பங்களற்ற குறுகிய வழியல்ல. மாறாக  அது இஸ்ரவேல் மக்கள் நடந்ததுபோன்ற வனாந்தர வழி.  இந்த வழி கடினமான வழியாக இருந்தாலும், தேவன்  நமது மேலிருக்கும் ஆடைகள் பழையதாய்ப் போகாமலும், நமது காலிலிருக்கும் செருப்புகள் பழையதாய்ப் போகாமலும் அற்புதமாக நம்மை நடத்தி  இந்த வனாந்தர வழியினைக் கடக்கும்படிச் செய்வார். அதாவது அற்புதமாக இந்தத் துன்பங்களை மேற்கொள்ளும் பெலன் தருவார். மட்டுமல்ல, இந்த வழியில் நடக்கும்போதுதான்  கர்த்தராகிய தேவனை நாம் நமது வாழ்வில்  அறிந்துகொள்ளமுடியும். 

"ஆதவன்" தியானம் - 1976

ஜூலை 06, திங்கள் 2026     

"என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்." ( ஓசியா 8 : 12 ) 

தேவன் மனிதர்களது நல்வாழ்வுக்காக பல்வேறு கட்டளைகளையும் அந்தக் கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்ந்த பரிசுத்தவான்களது வாழ்க்கை அனுபவங்களையும் நமக்கு வேதாகமாகத் தந்துள்ளார். காரணம், நாம் அவைகளை உணர்ந்து, அவற்றின்படி வாழ்ந்து நித்தியஜீவனை அடையவேண்டும் என்பதற்காகவே. இதற்காகவே தேவன் ஆரம்ப காலங்களில் தீர்க்கதரிசிகள்மூலம் பல்வேறு விதங்களில்  பேசினார். இறுதியில் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துமூலம் பேசினார். இவைகளே வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."( எபிரெயர் 1 : 1, 2 ) என்று வாசிக்கின்றோம்.

மேலும், இந்தத் "தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்" ( 2 பேதுரு 1 : 21 ) என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், "எனது நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை நான் அவர்களுக்காக எழுதியிருந்தும், அவை அந்நியமானவைகளாகக் கருதப்படுகின்றன" என வேதனையுடன் கூறுகின்றார் தேவன். அதாவது, இந்தக் கட்டளைகள் எங்களுக்கானவை அல்ல என்று மக்கள் கருதுகின்றார்கள் என்கிறார் தேவன். 

ஒவ்வொரு பள்ளியிலும்  கல்லூரியிலும் தங்களுக்கென சில விதிமுறைகள் வைத்திருப்பார்கள். அந்தப் பள்ளியிலோ கல்லூரியிலோ நாம் தொடர்ந்து பயிலவேண்டுமானால் அந்த விதிமுடைகளை நாம் பின்பற்றியாகவேண்டும். "இத்தகைய விதிமுறைகள் வேறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இல்லை எனவே இவற்றைக் இங்கு நான் கடைபிடிக்கமுடியாது" என்று நாம் கூறமுடியாது. 

ஆம் அன்பானவர்களே, வேறு மார்க்கங்களில் உள்ளதுபோல கிறிஸ்தவ மார்க்கம் நமக்குக் கற்றுத்தரவில்லை. நமது தேவன் பரிசுத்தர். எனவே கிறிஸ்தவ மார்க்கத்தின் கட்டளைகளும் நாம் அவரைப்போல பரிசுத்தமடையவே எழுதப்பட்டுள்ளன. "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே." ( 1 பேதுரு 1 : 16 )

தேவன் எழுதிக்கொடுத்த வேதாகம வார்த்தைகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் நேசிக்கின்றோமோ, தியானிக்கின்றோமோ அதற்கேற்ப தேவன் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் மேன்மையாக வைப்பார். எனவேதான் மோசே மூலம் இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் பின்வருமாறு  கூறினார்:-  "நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக." ( உபாகமம் 11 : 19 - 21 )

தேவன் எழுதிக்கொடுத்துள்ள வேதாகமம் அந்நிய காரியமல்ல. அது நமக்கு வாழ்வுக்கான வழிகாட்டி. மோசே கூறியபடி அந்த வேத வசனங்களை நமது பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே நாம் கற்றுக்கொடுக்கவேண்டியது அவசியம்; அவற்றைக்குறித்து நமது பிள்ளைகளிடம் பேசவேண்டியது அவசியம். ஆம், "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி." ( நீதிமொழிகள் 6 : 23 ) தேவன் எழுதிக்கொடுத்த வேதத்தின் மகத்துவத்தை அலட்சியப்படுத்தாமல் மதித்து நடப்போம். 

"ஆதவன்" தியானம் - 1977

ஜூலை 07, செவ்வாய் 2026     

"இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம்." ( 1 கொரிந்தியர் 15 : 19 )

பொதுவாக கடவுளை விசுவாசித்து வாழும் மக்களை ஆன்மீகவாதிகள் என்று எல்லோரும் கூறுகின்றனர். உலகினிலுள்ள எல்லா மதங்களிலும்  அந்தந்த மத விசுவாசிகள் உண்டு. ஆனால் எல்லோரும் ஆன்மீகவாதிகளா என்பதுதான் கேள்வி. 

ஆன்மீகவாதிகள் என்றால் உண்மையில் அவர்கள் தங்களது ஆன்மாவைக் குறித்த அக்கறையுள்ளவர்களாகவும் அந்த ஆன்மா வாழ்வடைந்திருக்க ஏற்றச் செயல்பாடுகளைச்  செய்பவர்களாகவும் இருக்கவேண்டும். ஆனால் நாம் இன்று உலகினில் பார்க்கும் தங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலரும்  இப்படித் தங்கள் ஆன்மாவைக்குறித்துச் சிந்திக்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான்.  

எந்த மதத்தினரின் ஆலயங்களாய் இருந்தாலும் பெரும்பாலான ஆலயங்களில் நாம் மக்களது வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும், அவர்களது பொருத்தனைகளையும் கவனித்துப்பார்த்தால் 100 சதவிகிதம் அவை அவர்களது உலகத் தேவைகளைப்பற்றியதாகவே இருப்பதை நாம் பார்க்கலாம்.  தங்களது நோய்கள் நீங்கவேண்டும், பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கவேண்டும், பிள்ளைகளுக்குத் திருமணம் நடக்கவேண்டும், குழந்தைப்பேறு கிடைக்கவேண்டும், படித்த தங்களது பிள்ளைகளுக்கு ஏற்ற வேலை கிடைக்கவேண்டும் என்பனபோன்ற  வேண்டுதல்களாகவே இவர்களது வேண்டுதல்கள் இருப்பதை நாம் பார்க்கின்றோம். 

கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஜெபிக்கும் பல குருக்களும் இந்தக் கருத்துகளுக்காகவே ஜெபிக்கின்றனர். அங்கு வரும் விசுவாசிகளும் இப்படியே இருக்கின்றனர். கிறிஸ்தவ கன்வென்சன் கூட்டங்களில் இதுபோன்ற போதனைகளையும் சாட்சிகளையும்தான் நாம் பெரும்பாலும் பார்க்க, கேட்க முடிகின்றது.  

இப்படி வேண்டுதல் செய்பவர்கள் பரிதபிக்கத்தக்கவர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. காரணம், இவர்கள் வாழ்வில் தேவனை அறியாமலேயே மரணமடைகின்றனர்; தேவன் ஆயத்தம்பண்ணியுள்ள நித்திய ஜீவனை இழக்கின்றனர்.  ஆம் அன்பானவர்களே, எனவேதான் இன்றைய தியான வசனம் நம்மை எச்சரிக்கின்றது.  இம்மைக்காக மட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், பரிதபிக்கப்படத்தக்கவர்கள். மட்டுமல்ல, நாம் நம்மை ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்வது பொய்.      

ஒருவேளை இப்படி விண்ணப்பம் செய்து நமது தேவைகளை நாம் பெற்றுக்கொண்டதாலும் அது தேவன் தனது கிருபையால் தருவதே தவிர அப்படிக் கிடைப்பதால் நமது ஆத்துமாவுக்கு அதனால் எந்தப் பலனுமில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத மக்களும் உலகினில் எல்லா செல்வங்களையும் பெற்று நலமாக வாழ்கின்றனர்.  என்னோடு பணியாற்றிய கடவுள் நம்பிக்கையில்லாத நண்பர் இப்போதும் கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை எழுதியும் பேசியும்  வருகின்றார். அவரது மொத்தக் குடும்பத்தாரும் அதே உறுதியில்தான் இருக்கின்றனர். அவரது பிள்ளைகளும் நல்ல உலகவேலையில்தான் இருக்கின்றனர். 

அன்பானவர்களே, நாம் ஆன்மீகவாதிகள் என்றால் முதலில் நாம் நமது ஆத்துமாவைக்குறித்து எண்ணமுள்ளவர்களாக இருக்கவேண்டும்; அந்த ஆத்துமாவில் தேவனது பிரசன்னத்தை உணரவேண்டும்; தேவன்மேலுள்ள ஆசையே நம்மில் மேலானதாக இருக்கவேண்டும்; தேவனோடு நெருங்கிய அன்புறவு நமக்கு இருக்கவேண்டும். தேவனது வழிநடத்துதலையும்,  இந்த உலக வாழ்க்கைக்குப் பின்னரும் நமது ஆத்துமா வாழ்கின்றது,  அது நித்திய பரலோக இன்பமாக அல்லது நித்திய நரகஅக்கினியாக இருக்கலாம் எனும் உணர்வும் இருக்கவேண்டும். 

இவை எதுவும் இல்லாமல் வெறுமனே ஆலயங்களுக்குச் சென்று நமது உலகத் தேவைகளுக்காக விண்ணப்பம் செய்துகொண்டிருப்போமென்றால் நாம் ஆன்மீகவாதிகள் அல்ல; உண்மையான கிறிஸதவர்களும் அல்ல. ஆம், இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று கூறினார். 

இம்மைக்காக மட்டுமே  நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கைக்கொண்டு  எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக மாறிப்போகாமல் இருப்போம்.

"ஆதவன்" தியானம் - 1978

ஜூலை 08, புதன் 2026     

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )

குழந்தைகளைத் தண்டித்துக் கண்டித்து வளர்க்கவேண்டியது அவசியம். இன்று பெரும்பாலும் பெற்றோர்கள் அப்படிக் குழந்தைகளைத் தண்டிப்பதில்லை. முன்பு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் தவறு செய்யும் மாணவர்களைக் கண்டித்துத் திருத்தினார்கள். ஆனால் இன்று அப்படியல்ல, குழந்தைகளைத் தண்டிக்கும் ஆசிரியர் நீதிமன்றங்களில் தண்டனை பெறுகின்றார். இதன் விளைவே இன்று நாம் காணும் சமூக சீர்கேடுகள்.  ஆம், பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கவே வேதம் அறிவுறுத்துகின்றது. "பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்." ( நீதிமொழிகள் 23 : 13 )

குழந்தைகள் தவறு செய்யும்போது நல்ல  தாய் தந்தையர்கள் அவர்களைத் தண்டிப்பதுண்டு. சில வேளைகளில் தாய் தனது குழந்தையைப் பலமாக அடித்துவிட்டால், பின்னர் அவளே அந்தக் குழந்தையைக் கொஞ்சுவாள். இதுபோலவே தேவன் நம்மையும் நடத்துகின்றார். தண்டனையைத் தரும் அவரே நமக்கு ஆறுதலையும் அளிக்கின்றார். 

சிலவேளைகளில் நாம் சோதனை, துன்பங்களில் அகப்படுவதற்கு  நமது தவறுகளும் பாவங்களும் காரணமாக இருக்கலாம்; அவை தேவன் தரும் தண்டனையாக இருக்கலாம்.  ஆனால் நமது தேவன் இரக்கமும் கிருபையும் உள்ளவராக இருப்பதால் நாம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும்போது நம்மை அணைத்துக்கொள்கின்றார். இதனையே யோபுவும், "அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது" ( யோபு 5 : 18 ) என்று கூறுகின்றார். 

இப்படித் தேவன் நம்மைத் தண்டிப்பதற்குக் காரணம் அவர் நம்மைத் தனது பிள்ளைகளாக எண்ணி நடத்துவதால்தான். ஆம்,  "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 ) நாம் நமது பிள்ளைகளைத்தான் தண்டிக்கமுடியும், அடுத்தவர்களது பிள்ளைகளையல்ல. ஆம் அன்பானவர்களே, நாம் அவரது பிள்ளைகளாக இருப்பதால் தேவன் நாம் தவறுசெய்யும்போது நம்மைத் தண்டிக்கின்றார். "இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்" ( யோபு 5 : 17 ) என ஆலோசனைத் தருகின்றார் யோபு. 

நமது தாய்தந்தையர்கள் நம்மை எப்போதும் தண்டிப்பதில்லை. எது நமக்கு நல்லது என்று அவர்கள் கருத்தினார்களோ அவற்றை நாம் செய்யாதபோது நம்மைத் தண்டித்தார்கள். நாம் குறிப்பிட்டப் பருவவயதை அடைந்தபின்னர் அவர்கள் நம்மைத் தண்டிப்பதில்லை. ஆனால் தேவனோ நாம் அவரது பரிசுத்த இராஜ்ஜியத்துக்குத்  தகுதியுள்ளவர்கள் ஆகும்படி நம்மை நமது வாழ்வின் இறுதிவரைத் தண்டித்து நடத்துகின்றார். இதனையே நாம் எபிரெயர் நிருபத்தில், "அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்." ( எபிரெயர் 12 : 10 ) என்று வாசிக்கின்றோம். 

நமது எல்லாத் துன்பங்களுக்கும் தேவனது தண்டனையே காரணமாக இருக்கமுடியாது. எனினும் நாம் நெருக்கடிகளுக்கு உள்ளாகும்போது நாம் நம்மையே நிதானித்துப்பார்த்து நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டியது அவசியம். ஆம் அன்பானவர்களே, துன்பங்களால்  அவதிப்படும்போது நாம் கலக்கமடையத் தேவையில்லை. தேவன் துன்பங்கள் வழியாக நமக்கு நன்மையே செய்கின்றார். காரணம், அவரைவிட்டு நாம் விலகிப்போகாமல் இருப்பது துன்பங்களால்தான். 

மனிதர்களது வாழ்வு  பிரச்சனைகளும் துன்பங்களும் இல்லாமல் ஒரே மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்குமானால் யாரும் தேவனைத் தேடப்போவதில்லை. துன்பங்களால் அவதிப்படுவோர்களைப் பார்த்துக் கூறப்பட்ட வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.  எனவே, துன்பநேரங்களில் நமது வாழ்வை ஆராய்ந்துபார்த்துக்  கர்த்தரிடத்தில் திரும்புவோம். ஆம், நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார் எனும் வார்த்தைகளின்படி கிருபையின் தேவன் நம்மை ஆறுதல்படுத்துவார். 

"ஆதவன்" தியானம் - 1979

ஜூலை 09, வியாழன் 2026     

"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )

கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்கு மனிதர்கள் பல்வேறு கடினமான முயற்சிகளைச் செய்வதை நாம் பார்க்கின்றோம். இதற்காகப் பல்வேறு ஆலயங்களில் கடினமானச்  செயல்களை மனிதர்கள் செய்கின்றனர். கம்பியால் கன்னத்தில் துளையிட்டுக்கொள்கின்றனர், நாக்கில் துவாரமிட்டு கம்பிகளைச் சொருகிக்கொள்கின்றனர், அங்கப்பிரதட்சணம்  எனக் கூறித் தரையில் உருள்கின்றனர், நெருப்பின்மேல் நடக்கின்றனர், தட்டுகள் இல்லாமல் தரையில் உணவை வைத்து மண்சோறு உண்கின்றனர், இன்னும் இதுபோலப்  பல்வேறு முறைகளில் தங்களது உடலை வருத்திக்கொள்கின்றனர். 

ஆனால் இத்தகைய கடின முயற்சி எதுவும் இல்லாமலேயே தேவனது இரக்கத்தை நாம் பெறமுடியும். அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு,  "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது" என்று கூறுகின்றது. ஆம்  அன்பானவர்களே, கடினமான முயற்சிகளல்ல தேவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலே போதும், நாம் அவரது இரகத்தைப் பெறமுடியும். 

நமது அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அவரது சுமை மெதுவாயும், இலகுவாயும் இருக்கிறது என்று கூறவில்லையா?  ஆம்,  "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது" ( மத்தேயு 11 : 28-30 ) என்கின்றார் கிறிஸ்து.

தேவனுக்குப் பயந்து வாழ்வதுதான் அவர் கூறும் எளிதான வழி. தேவனுக்குப் பயப்படுதல் என்பது அவர் வெறுக்கும் தீமையான காரியங்களைச் செய்யாமல் இருப்பதுதான். "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

மேலும், பெருமையை விட்டு மனத் தாழ்மையோடு நாம் நடக்கும்போது  தேவன் தனது கிருபையினை அளிப்பதால் நமது சுமை எளிதாகின்றது. "அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 )

இன்று பல கிறிஸ்தவர்களும்கூட பிற மத நண்பர்கள் செய்வதைப்பார்த்துத் தாங்களும் சில கடினமான உடலை வருத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மனிதர்கள் வேண்டுமானால் இத்தகைய செயல்களைப்பார்த்து பரிதாபம்கொண்டு இரங்கலாம், ஆனால் தேவனோ மனம்திரும்பிய தாழ்மையான உள்ளத்தைக்கண்டு மட்டுமே பரிதாபம் கொண்டு இரக்கம் காட்டுவார். 

நமது  உடலை வருத்தாமல் ஆத்துமாவில் நமது செயல்களுக்காக வருந்துவோம். தேவனுக்குப் பயந்த ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையினை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது  தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.

"ஆதவன்" தியானம் - 1980

ஜூலை 10, வெள்ளி  2026     

"சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்." ( எசேக்கியேல் 13 : 10 )

தேவனோடு நாம் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இன்று பொதுவாக இப்படித் தனிப்பட்ட  தேவ ஐக்கியத்தில் வளர்ந்துள்ள விசுவாசிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். எனவே விசுவாசிகள் பலரும் தங்களைக்குறித்தும் தங்களது வாழ்கையினைக் குறித்தும்  அறிந்திட  கிறிஸ்துவின் ஊழியர்கள் என்று கூறிக்கொள்ளும் ஊழியர்களை நாடி ஓடுகின்றனர். 

தங்களிடம் வரும் விசுவாசிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறினால்தான் அவர்கள் மறுபடியும் தங்களை நாடி வருவார்கள், தங்கள் வருமானமும் பெருகும் என்பதால் இந்த ஊழியர்கள்  மக்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக்கூறி அனுப்புகின்றனர்.  இதனையே இன்றைய தியான வசனம், "சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்" என்று கூறுகின்றது. ஒரு ஊழியர் மட்டுமல்ல, பெரும்பாலான ஊழியர்களும் இப்படியே தொடர்ந்து விசுவாசிகளை பொய்ச்சொல்லி ஏமாற்றுகின்றனர். 

இதனையே இன்றைய தியான வசனம் தொடர்ந்து,  "ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்" என்று கூறுகின்றது. உண்மையான தேவ ஊழியன் மக்களது ஆத்தும பலவீனத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தவேண்டும். அவர்களது பாவங்களை வெளிப்படுத்திக்கொடுத்து மக்கள் மனம்திரும்ப வழி கூறவேண்டும். நாத்தான் தீர்க்கதரிசி இப்படித்தான் தாவீதின் பாவத்தை உணர்த்திக்கொடுத்து அவரை மனம் திரும்பச் செய்தார். 

ஆனால், இப்படிப்பட்ட ஊழியர்கள் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் இருப்பார்கள் என்று கருதுகின்றேன். எனது ஆரம்பகாலத்தில் ஆவிக்குரிய வாழ்வில் என்னை வழிநடத்திய இந்தியன் பெந்தேகோஸ்தே சபை (I.P.C) பாஸ்டர் ஜான்சன் டேவிட் அவர்கள் இப்படிப்பட்ட தீர்க்கதரிசன வரம்பெற்ற உண்மையுள்ள ஊழியராக இருந்தார்கள். அதாவது, இன்றைய தியான வசனத்தின்படி அவருக்கு சாரமில்லாத சாந்தைப் பூசத்தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். அவர் யாரையும் முகத்தாட்சணியம் இல்லாமல் கடிந்துகொள்வார். தவறை கண்டித்து எச்சரிப்பார். அவரது வழிநடத்துதல்தான் நான் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைய உதவியது. ஆனால், அவரைப் பலருக்குப் பிடிக்காது. காரணம், அவரது இந்தக் கண்டிப்பை அவர்கள் விரும்புவதில்லை.   

அன்பானவர்களே, நாம் நமக்கு ஆறுதலும் ஆசீர்வாதமும் கூறி நம்மை மகிழ்விக்கும் ஊழியர்களையே நாடி ஓடுவோமானால் நாம் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறமுடியாது. ஆம், "இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்துபூசினவர்களுமில்லை. எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." ( எசேக்கியேல் 13 : 15, 16 )

இந்த வசனத்தின் எச்சரிப்பை நாம் கவனிக்கவேண்டும். அதாவது, ஊழியர்களை நாடி வந்த விசுவாசிகளாகிய  சுவருமில்லை, அதற்குச் சாந்துபூசின ஊழியனுமில்லை என்று அழிந்துபோவார்கள்.  ஆம், சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற  தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்கின்றார் தேவனாகிய கர்த்தர். மிகக்கடினமான எச்சரிப்பல்லவா இது?

ஆவிக்குரிய வாழ்க்கை விளையாட்டல்ல; தேவனுடைய ஊழியம் பணம் சம்பாதிப்பதற்கும் மக்கள் கூட்டத்தைச் சேர்த்துத் தங்களைத் தாங்களே மகிமைப்படுத்தவுமல்ல.  எச்சரிக்கையாக இருந்து மனம் திரும்புவோம். உண்மையான ஆவிக்குரிய அனுபவத்தோடு வளர்ந்திட தேவனோடு தனிப்பட்ட உறவினை வளர்த்துக்கொள்வோம். அதற்கு முதற்படியாக நமக்கு வழிகாட்ட ஏற்ற ஊழியர்களை தேவனே நமக்குக் கொடுக்க வேண்டுதல் செய்வோம். 

"ஆண்டவரே, நான் உம்மை அறியாத குருடனாக இருக்கின்றேன். எனக்கு வழிகாட்டும் உண்மையுள்ள ஆவிக்குரிய ஊழியரை எனக்குக் காண்பித்தருளும்" என வேண்டுதல் செய்வோம். அப்போது, "உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்" ( எரேமியா 3 : 15 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

"ஆதவன்" தியானம் - 1981

ஜூலை 11, சனி  2026     

"பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா." ( லுூக்கா 11 : 13 )

சாத்தானும் வேதாகமத்திலிருந்து வசன ஆதாரங்களைக் காண்பித்து மக்களைக் குழப்பமுடியும். இப்படித்தான் அவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே வேதாகம வசனங்களின் மூலம் சோதித்தான். ஆனால் இயேசு கிறிஸ்துவும் அவனுக்கு வசனங்களின்மூலமே பதிலடிகொடுத்தார்.

ஒரு குறிப்பிட்ட வேத வசனம் கூறப்பட்ட சூழ்நிலையைக் கவனிக்காமல் அவற்றை ஆதாரமாகக் கொள்வது; ஒரு வசனம் கூறப்படும் முழு உண்மையையும் பார்க்காமல் நமக்குச்  சாதகமான பகுதிகளை மட்டும் வாசித்துப் பொருள்கொள்வது இவையே சாத்தானின் தந்திரம். அப்படிப் பெரும்பாலான ஊழியர்களாலும் மக்களாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வசனம்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய பின்வரும் வசனம்:- "மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( லுூக்கா 11 : 9 - 10 )

இந்த வசனம் நாம் எந்த உலக ஆசீர்வாதத்தினைக் கேட்டாலும் அதனைத் தேவன் தந்தருள்வார் எனும் பொருளில் பலராலும் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனம் கூறவரும் உண்மைதான் என்ன, இது எதற்காகக் கூறப்பட்டது என்பது இந்த வசனத்தைத் தொடர்ந்து வாசித்தால்தான் நமக்குப் புரியும். இந்த வசனத்தை இயேசு, "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா" என்று சொல்லி முடிக்கின்றார். 

அதாவது, நீங்கள் பரிசுத்த ஆவியை வேண்டி பரலோகத் தந்தையிடம் கேளுங்கள், பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் தேடுங்கள், அவர் உங்களுக்கு வேண்டுமென்று தொடர்ந்து தட்டுங்கள் என்கின்றார். அப்படி கேட்கும்போது பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? என்று கூறப்பட்டுள்ளது. 

பரிசுத்த ஆவியானவரை நாம் வாழ்வில் பெறவேண்டும் எனும் வாஞ்சையுள்ளவர்களாக வாழவேண்டும் என  இயேசு கிறிஸ்து கூறிய சத்தியத்தைத் திரித்து, நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் நமக்கானதாக எடுத்துக்கொண்டு முக்கியமான இறுதிப்பகுதியை விட்டுவிடுவது எத்தனை பெரிய ஏமாற்றுதல்!!!

வேதாகம வசனங்கள் நமது இவ்வுலக பரிசுத்த வாழ்க்கைக்கான வழியைக் காண்பித்து நாம் நித்திய ஜீவனை அடைந்திட உதவுகின்றனவேத் தவிர முழுவதும் உலக ஆசீர்வாதங்களுக்கானவை அல்ல. "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? இப்படிக் கூறியவர் உலக ஆசீர்வாதத்துக்காக கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்று கூறுவாரா? இயேசு கிறிஸ்து நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுபவரல்ல எனும் உண்மை நமக்குத் தெரியவேண்டாமா?  

"நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிகிறீர்கள். விபச்சாரரே, விபச்சாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்." ( யாக்கோபு 4 : 3, 4 )

அன்பானவர்களே, வேதாகமத்தை நமது ஆன்மீக வளர்ச்சிக்கான தேவ வார்த்தைகளாக நாம் உட்கொள்ளவேண்டியது அவசியம். சாத்தானின் தந்திரத்துக்குப் பலியாகி வசனங்களை நமக்கு ஏற்றாற்போல குறுக்கியும் நறுக்கியும் பொருள்கொள்ளாமல் அவை கூறப்பட்ட உண்மையின்படி புரிந்துகொண்டு வாழ்வாக்குவோம். 

"ஆதவன்" தியானம் - 1982

ஜூலை 12, ஞாயிறு 2026     

"துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் எனப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்களாகவும் ஒன்றுமில்லாதவர்கள் எனப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்." ( 2 கொரிந்தியர் 6 : 10 )

இந்த உலகம் நம்மைப் பார்க்கும் விதம் வேறு,  தேவன் நம்மைப்பார்க்கும் பார்வை வேறு. நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது உலகுக்கும் நமக்குமுள்ள வேறுபாடு, இடைவெளி இவற்றை இன்றைய தியான வசனம் விளக்குகின்றது. இதனை நான் எனது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகாலத்திலேயே கண்டுகொள்ள தேவன் உதவிசெய்தார்.   

நான் ஆரம்ப காலங்களில் ஆராதனைக்குச் சென்ற ஆலயத்தில் வரும் பெரும்பாலான மக்கள் ஏழை எளியவர்கள்தான். வெளிப்பார்வைக்கு  எந்தப் பகட்டும் அவர்களிடம்  இருக்காது. அவர்கள் பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்களாகவும் வீட்டுவேலை செய்யும் பெண்களாகவும் இருந்தனர். தினசரி வேலைவாய்ப்புக்கள் இவர்களுக்கு இல்லை, வருமானம் மிகவும் குறைவு, இவர்களது வீடுகள்கூட ஓடு அல்லது தென்னை ஓலைக்  கூரைகளால்  கட்டப்பட்டவைதான்.

ஆனால் அவர்களிடம் பேசிப் பார்த்தால் பெரிய இறையியல் கல்லூரியில் படித்தவர்களிடம் அறியமுடியாத ஆவிக்குரிய காரியங்களை அறிந்துகொள்ள முடிந்தது. ஆம்  அன்பானவர்களே, இத்தகைய மனிதர்களிடம் பகட்டான உலக மனிதர்கள் பேசுவதற்கும் தயங்குவதுண்டு; இவர்களைத்  தீண்டத்தகாதவர்கள்போல  பார்ப்பதுண்டு. ஆனால், இத்தகைய ஆவிக்குரிய மனிதர்களைக்குறித்தே இன்றைய தியான வசனத்தில்,  துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் எனப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்களாகவும் ஒன்றுமில்லாதவர்கள் எனப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாகவும் இருப்பவர்களாகக் கூறப்பட்டுள்ளது. 

இவர்கள் பொருளாதார நெருக்கடியில் துக்கப்படுபவர்கள்தான் ஆனால் எப்பொழுதும் ஆவியில் சந்தோஷப்படுகிறவர்களாக இருக்கின்றனர். இவர்கள் தரித்திரர்கள்தான் ஆனால் அநேகரை ஆவிக்குரிய வாழ்வில் ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒன்றுமில்லாதவர்கள்தான் ஆனால் கிறிஸ்துவைத் தங்களுக்குள் தாங்கியவர்களாக இருப்பதால்  சகலத்தையும் உடையவர்களாக இருக்கின்றனர்.  

அன்பானவர்களே, நாம் பெரிய பெரிய ஆலயங்களில் பகட்டாக உடையணிந்து நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இப்படிப் பகட்டாக ஆலயங்களுக்கு வரும் பலரும் தனிப்பட்ட விதத்தில் தேவனை அறிந்தவர்களோ ஆவிக்குரிய மேலான அனுபவங்கள் பெற்றவர்களோ அல்ல. இவர்களில் பலரது குடும்ப வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே இருக்கின்றது. 

ஆம், இவர்கள் தேவனுடைய பார்வையில் இன்றைய தியான வசனத்துக்கு நேர் மாறானவர்களாக இருக்கின்றனர்.  சந்தோஷப்படுகிறவர்களாக காணப்பட்டாலும்  துக்கப்படுகிறவர்ளாகவும்,                ஐசுவரியவான்கள்  எனப்பட்டாலும்  தரித்திரர்களாகவும்,  சகலத்தையும் உடையவர்களாக இருந்தாலும் ஒன்றுமில்லாதவர்களாகவும் இருக்கின்றனர். 

இத்தகைய மிகப்பெரிய மாற்றத்துக்குக் காரணம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதால் ஏற்படுவதுதான்.  அப்போஸ்தலரான பவுல் தனது சொந்த அனுபவத்தில் கண்டுகொண்ட இந்த ஆவிக்குரியச் சத்தியத்தை நமக்கு இன்றைய தியான வானம் மூலம் விளக்குகின்றார்.  

கிறிஸ்துவை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவரோடு தனிப்பட்ட உறவில் வளரும்போது தேவன் நம்மையும் இதுபோல மாற்றுவார். அப்போது நாமும், இந்த உலக வாழ்க்கையில் பிரச்சனைகளால் துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் எனப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்களாகவும் ஒன்றுமில்லாதவர்கள் எனப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாகவும் விளங்குவோம்.  

"ஆதவன்" தியானம் - 1983

ஜூலை 13, திங்கள் 2026     

"கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 )

இந்த உலகத்தில் இஸ்ரவேல் மக்களை தேவன் தனக்குரியவர்களாகத் தெரிந்துகொண்டார். எனவே, அவர்கள் தனக்கு ஏற்றவர்களாக விளங்குமாறுச்  செய்ய அவர்களுக்குப் பல்வேறு கட்டளைகளைக்கொடுத்தார். இத்தகைய நீதியுள்ள கட்டளைகளை அவர் இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. இதனை நாம்,  "இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?" ( உபாகமம் 4 : 8 ) என்று வாசிக்கின்றோம். 

வேதாகம ஆராய்ச்சியாளர்கள் வேதத்தில் யாத்திராகமம் முதல் உபாகமம் வரை சுமார் 613 கட்டளைகளைக் கணக்கிட்டுள்ளனர். ஆம், இத்தனைக் கட்டளைகளும் தனது மக்கள் பரிசுத்தமுள்ளவர்களாக மாறவேண்டும் என்பதற்காகவே. 

ஆனால் தேவன் விரும்பியதுபோல இந்தக் கட்டளைகள் மக்களைப் பரிசுத்தப்படுத்தவில்லை. மக்கள் கட்டளைகளை மீறிக்கொண்டுதான் இருந்தார்கள். காரணம், மனித பலத்தால் இந்தக்கட்டளைகளை கடைபிடிக்க முடியாது என்பதுதான். எனவேதான் தேவன் தனது சொந்தக் குமாரனை பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி உலகிற்கு மீட்பளித்தார். இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நமது சுய பலமல்ல, கிறிஸ்து இயேசுவினாலே உண்டான ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நமக்கு பாவம் அதனைத் தொடர்ந்த ஆவியின் மரணம் இவைகளிலிருந்து விடுதலை தருகின்றது. நமது சுய பலத்தால் பாவத்திலிருந்து விடுதலை பெறமுடியாது. ஆனால், நமது உடலை நாம் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுக்கும்போது மட்டுமே நாம் பாவத்திலிருந்து முழு விடுதலை பெறமுடியும். 

"நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்." ( ரோமர் 6 : 6 - 8 )

கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படுதல் என்பது அவரைப்போல நாமும் ஆணிகளால் சிலுவை மரத்தில் அறையப்படவேண்டுமென்று பொருளல்ல, அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்தலை அது குறிக்கின்றது. அதாவது, முதலில் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுதல்; அவரையே வாழ்வில் நமக்கு முதன்மையானவராக ஏற்றுக்கொள்ளுதல். இப்படிச் செய்வோமானால் நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்படுவான். நாம் அவரது பலத்தால் பாவத்தை மேற்கொள்ளும் தகுதியுள்ளவர்கள் ஆவோம். இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே" என்று மகிழ்வுடன் கூறுகின்றார். நாமும் இந்த அனுபவத்தைப் பெறும்படி நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம்; கட்டளைகளின் பிரமாணங்களிலிருந்து விடுதலை பெறுவோம்.

"ஆதவன்" தியானம் - 1984

ஜூலை 14 செவ்வாய் 2026     

"நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்." ( 2 தெசலோனிக்கேயர் 2 : 14 ) 

எந்தத் தகப்பனும் தாயும் தங்களது பிள்ளைகள் தங்களைவிடக் கீழானவர்களாக மாறவேண்டும் என எண்ணுவதில்லை. தங்களைப்போல தங்கள் பிள்ளைகளும் மாறவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அல்லது தங்களைவிட மேலானவர்களாக மாறவேண்டுமென்று உழைப்பார்கள்.  உதாரணமாக, மருத்துவத் தொழில் செய்பவர்கள் தங்களது பிள்ளைகள் மருத்துவராக மாறுவதையே விருப்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். 

இப்படித் தங்கள் பிள்ளைகளுக்காக உழைத்து அவர்களைத்  தங்களைவிட மேலானவர்களாக மாற்றும்போது அது பெற்றோருக்கு மகிழ்ச்சியளிக்குமல்லவா?  சமீபகாலங்களில் செய்தித்தாள்களில்  "ஆட்டோ ஓட்டுனரின் மகள் மாவட்ட ஆட்சியாளர் ஆனார்"  என்றும், "ஹோட்டல் தொழிலாளியின் மகன் I.P.S. அதிகாரியானார்" என்றும் சிலவேளைகளில் செய்திகள் வெளிவருவதுண்டு. அப்போது அந்தத் தகப்பனுக்கும் தாய்க்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!!. ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மைக்குறித்து இப்படி மகிழ்ச்சியடைய விரும்புகின்றார். 

அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம், "நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக அவர் உங்களை அழைத்தார்" என்று வாசிக்கின்றோம்.  நாம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்போல வாழ்ந்து, அவர் பிதாவிடம் பெற்ற மகிமையை அடைந்திடவேண்டும். 
  
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் உலகில் வாழ்ந்தகாலத்தில் இதற்காக பிதாவிடம் ஜெபித்ததையும்  வேதாகமத்தில், "நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்" ( யோவான் 17 : 22 ) என்று வாசிக்கின்றோம். 

ஒருவர் மருத்துவராக அல்லது I.A.S / I.P.S. அதிகாரியாக மாறவேண்டுமானால் அதற்குக் கடினமாகப் படித்து  உழைக்கவேண்டியது அவசியம். இதுபோலவே, நாம் கிறிஸ்துவின் மகிமையினை அடைந்திடச் செய்யவேண்டிய காரியத்தையே இன்றைய தியான வசனத்தில்,  "எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் சுவிசேஷ சத்தியங்களுக்குக் கீழ்ப்படிந்து இரட்சிப்பு அனுபவத்தைப் பெறும்போது அதற்கான ஆயத்தப்படியில் கால்பதிக்கின்றோம். பின்னர் அந்த அனுபவத்தில் வளர்ச்சியடைந்து மகிமைமேல் மகிமையடைந்து கிறிஸ்துவைப்போல மாறுகின்றோம். 

இதனால்தான் சுவிசேஷ அறிவிப்பு மேலானதாகக் கருதப்படுகின்றது. இதனையே பவுல், "எங்கள் சுவிசேஷத்தினாலே" என்று கூறுகின்றார். அதாவது, "நாங்கள் அறிவிக்கும் சுவிசேஷத்தினாலே" என்று கூறுகின்றார். எழுதப்பட்டுள்ள சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டும். அப்போதுதான் பலரை அதுச் சென்றடையும். 

ஆம் அன்பானவர்களே, பலரும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக நமது சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் நம்மை அழைத்துள்ளார். சுவிசேஷ அறிவிப்பு வெறும் தேவ வசனங்களை மக்களுக்கு அறிவிப்பது மட்டுமல்ல, நமது வாழ்க்கையாலும் நாம் அவரை அறிவிக்கலாம். நமது சாட்சியுள்ள வாழ்க்கையே மேலான சுவிசேஷ  அறிவிப்பாக இருக்கும். அதற்கு கிறிஸ்து முதலில் நமக்குள் வரவேண்டியது அவசியம். 

நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரை நமக்குள் வரவேற்போம். அப்போது நமது வாழ்க்கை மாறும். சாட்சியுள்ள நமது வாழ்க்கை பலரையும் கிறிஸ்துவிடம் அழைத்துச் சேர்க்கும். 

"ஆதவன்" தியானம் - 1984

ஜூலை 15 புதன் 2026     

"யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்." ( ஏசாயா 41 : 14 )

இந்த உலகப் பகட்டுக்கும், ஆடம்பரத்துக்கும், செழிப்புக்கும் முன்பு ஆவிக்குரிய தேவ மக்கள் சிறு பூச்சி போன்றவர்களே.  மட்டுமல்ல, உண்மையான ஆவிக்குரிய அனுபவத்துடன் வாழ்பவர்கள் மிகக்கொஞ்சம்பேர்தான். அவர்களைப் பார்த்துதான் இன்றைய தியான வசனம், யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே என்று கூறுகின்றது. 

நாம் அற்பமான பூச்சிபோலவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருப்பதால் பயப்படத் தேவையில்லை. காரணம், சார்லோகத்தையும் படைத்து ஆளும் தேவன் நம்மோடு இருக்கின்றார். எனவே 'கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை' என்பதுபோல, ஆவிக்குரிய மக்களின் காரம் குறைந்துபோவதில்லை. நாம் உண்ணும் உணவில் சிறிதளவு உப்புதான் சேர்ப்போம். ஆனால் அதுதான் உணவைச் சுவையுள்ளதாக மாற்றுகின்றது. நாமும் உப்பைப்போல குறைவானப்பேர்களாக இருந்தாலும் நம்மால் உலகம் சுவைபெறமுடியும். 

நாம் வல்லவர்கள் என்பதாலோ அதிகமானபேர் என்பதாலோ தேவன் நம்மைத் தெரிந்துகொள்ளவில்லை. நம்மை அவர் கிருபையால் தெரிந்தெடுத்துள்ளார். "நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள் பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்." ( உபாகமம் 7 : 6, 7 ) ஆம், நமது எளிய நிலையினைப் பார்த்துதான் தேவன் நம்மைத் தெரிந்தெடுத்துள்ளார். எனவே அவர் நம்மைக் கைவிடமாட்டார்.

பலரைக் கொண்டாவது கொஞ்சம் மக்களைக் கொண்டாவது தேவனால் எதனையும் சாதிக்க முடியும். மீதியானியருக்கு எதிராக கிதியோனை அனுப்பியபோது தேவன் வெறும் 300 பேரை மட்டுமே அவனோடு கூட்டிச்செல்ல அனுமதித்தார். கிதியோன் தயங்கினான். "ஆண்டவரே நான் எப்படி இஸ்ரவேலை இரட்சிப்பேன்" என்றான்.  "அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 ) அதுபோல கர்த்தர் கிதியோனோடு இருந்து  மீதியானியரை முறியடிக்கும்படிச் செய்தார்.   

இன்று இதுபோல ஒருவேளை பல காரியங்களை எண்ணி நீங்கள் கலங்கிக்கொண்டிருக்கலாம். "எனது வருமானம் மிகவும் குறைவு, இதனைவைத்து எப்படி நான் குடும்பம் நடத்துவேன்?, எப்படி என்  பிள்ளைகளை நன்றாகக் படிக்கவைக்கமுடியும்?" என்று எண்ணலாம். அல்லது, "எனது உடல் நோயால் வலுவிழந்த  எனக்கு வேலைசெய்ய முடியவில்லை, எப்படி இந்த உலகத்தில் வாழ்வேன்?" என்று திகைத்துக்கொண்டிருக்கலாம். எனது கடனை எப்படிச் செலுத்தி முடிப்பேன்? என்றும் எனக்குச் சொந்தமாக வீடு இல்லையே எனவும் பலவித எண்ணங்களில் வாடிக்கொண்டிருக்கலாம்.  உங்களைப்பார்த்து, "யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்."

ஆம் அன்பானவர்களே, எலியாவைக்கொண்டு ஏழை விதவையின் கலசத்தின் எண்ணையும் பானையின் மாவும் குறைந்துபோகாமல் பஞ்சகாலத்தில் காத்தவர், வெறும் தண்ணீரை  மதுரமான தீராட்சை இரசமாக மாற்றியவர்,  அற்பமான பூச்சிபோலவும் இஸ்ரவேலின் சிறுகூட்டம் போலவும் அற்பமாக இருக்கும் நமக்கு வாழ்வில் எந்த அதிசயத்தையும் செய்யமுடியும். 
 
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது அவர் நம்மைக்  கைவிடமாட்டார்; வெட்கப்படவிடமாட்டார். எந்த விதமான குறைவிலும் நம்மை நடத்த அவரால் முடியும். குறைவுகளையே நினைத்துக் கவலைப்படாமல் குறைவுகளை நிறைவாக்குகின்ற அவரையே நோக்கிப்பார்ப்போம். "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்" ( ஏசாயா 41 : 13 )  என்கிறார் தேவனாகிய கர்த்தர்.

"ஆதவன்" தியானம் - 1985 

ஜூலை 16 வியாழன் 2026     

"இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 40 : 25 )

தேவனை நாம் யாருக்கும் ஒப்பிட்டு அடையாளப்படுத்தமுடியாது. இதனால்தான் அவர்,   "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;."  யாத்திராகமம் 20 : 3, 4 ) என்று முதல் கட்டளையாகக் கூறினார். 

இன்றைய தியான வசனத்தில்  தேவன் சொல்கிறார் என்று கூறாமல்,  "பரிசுத்தர் சொல்லுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நமது தேவனுக்கு மறுபெயர், "பரிசுத்தர்". இந்த உலகத்தில் பல்வேறு தேவர்கள் இருக்கலாம்; அவர்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படலாம். ஆனால், நமது தேவன் மட்டுமே பரிசுத்தர் என்று அழைக்கப்படுகின்றார். வேறு எந்த தெய்வத்துக்கும் இந்தப்பெயர் பொருந்தாது. 

ஆம், பல தெய்வங்களும், தேவர்கள் எனக் கூறப்படுபவர்களும் உலகினில் இருக்கலாம். ஆனால் நமக்குப் பரிசுத்தரான தேவன் ஒருவரே உண்டு. அவரே நம்மை உருவாக்கியவர்.  "வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." ( 1 கொரிந்தியர் 8 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். 

சில மதங்களில் அறிவுக்கு ஒரு கடவுள், ஆற்றலுக்கு ஒரு கடவுள், செல்வதைக் கொடுக்க ஒரு கடவுள் என்று வகைப்படுத்திக் கூறுகின்றனர். ஆனால் நமது தேவன் அனைத்தையும் கொடுக்கவல்லவர். மட்டுமல்ல, நம்மைப் பரிசுத்தப்படுத்துபவர்.  "ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது." ( கொலோசெயர் 1 : 16 ) என்று வாசிக்கின்றோம். 

மட்டுமல்ல, இந்த மகத்துவமுள்ள தேவன் நமது குரலுக்குச் செவிகொடுக்க எப்போதும் ஆயத்தமாய் இருக்கின்றார் என்பதுதான் நமது பலம். அதுதான் நமது மிகப்பெரிய பாக்கியம். இதனால்தான் மோசே, "நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?" ( உபாகமம் 4 : 7 ) என்று கேட்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, பரிசுத்தமும் சர்வ வல்லமையும் வானங்களைவிட உயர்ந்தவருமான தேவனே நமது தேவன். இந்த "பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்." ( எபிரெயர் 7 : 26 ) இப்படியிருக்க, அவரை நாம் வேறு யாருக்கு ஒப்பிடமுடியும்? அவருக்கு யாரை நிகராக்க முடியும்? எனவேதான், அவரைத்தவிர வேறு யாருக்கும் எந்த உலகப் பொருளுக்கும் நமது வாழ்வில் முன்னுரிமையோ ஆராதனையோ செலுத்தவேண்டாம் என்று வேதம் வலியுறுத்துகின்றது. 

தேவனது குரலுக்குச் செவிகொடுத்து,  அவருக்கு மட்டுமே ஆராதனை செலுத்தி வாழ்வோம். அப்போதுதான் நாம் அவருக்கேற்ற மக்களாக மெய்யான ஆசீர்வாதத்தினைப்  பெற்று மகிழமுடியும். 

"ஆதவன்" தியானம் - 1986 

ஜூலை 17 வெள்ளி 2026   

"ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." ( 2 கொரிந்தியர் 5 : 16 ) 

மனிதர்களது பார்வைகள் வித்தியாசமானவை.  ஆனால் எல்லோரும் தாங்கள் பார்ப்பதுதான் சரி என்று நிரூபிக்க முயல்கின்றனர். எனவேதான் உலகில் மனிதர்களிடையே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. ஒருவரை அல்லது ஒரு பொருளை நாம் பார்க்கும் விதத்தைப்பொறுத்துதான் நாம் அதனைக்குறித்து அறியமுடியும்.  ஆனால், எல்லாவற்றுக்கும் உண்மையான சரியான பார்வை ஒன்று உண்டு. அதனை அறிந்தவர்களே வெற்றியாளர்கள்.   

இன்றைய தியான வசனம் மேலான ஆவிக்குரிய பார்வையினை நாம் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார்; மரியாள் யோசேப்பு இவர்களின் மகன் என்று அறியப்பட்டார். இது கிறிஸ்துவைகுறித்த மனித பார்வை. ஆனால், நாங்கள் கிறிஸ்துவை இப்படி அறிந்திருந்தாலும் இனி ஒருபோதும் அவரை அப்படி அறியமாட்டோம். மாறாக, அவர் தேவனுடைய குமாரன் என்றுதான் நாங்கள் அறிவோம் என்கின்றார் பவுல். 

உலகத்தின் பார்வையில் அவர் மனிதன். ஆனால் "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது." ( கொலோசெயர் 1 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம்.

இதுபோல, "இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, நாம் உலகினில் பார்க்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தேவ சாயலில் உருவாக்கப்பட்டவர்கள். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." ( ஆதியாகமம் 1 : 27 ) என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் பவுல் அப்போஸ்தலர், நாம் கிறிஸ்துவை அறிந்துகொண்டோமானால் அவரால் படைக்கப்பட்ட மனிதர்களையும் நாம் வெறும் மனிதர்களாக மட்டும் பார்க்காமல் அவர்களிலிருக்கும் கிறிஸ்துவையே  பார்ப்போம் என்று கூறுகின்றார். 

ஆம்  அன்பானவர்களே, முதலில் நாம் கிறிஸ்துவை தேவனுடைய குமாரனாகப் பார்க்கத் துவங்கினால்தான் நம்மால் மற்றவர்களை கிறிஸ்துவின் சாயலாகப் பார்க்கமுடியும். கிறிஸ்து வெறும் தாவீதின் மகனல்ல. அப்படிக் கூறுவதை அவரும் விரும்பவில்லை. தாவீதுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி? என்றுதான் அவர் யூதர்களிடம் தன்னைக்குறித்துக் கூறினார். "தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை." ( மத்தேயு 22 : 45, 46 ) என்று நாம் வாசிக்கவில்லையா? 

கிறிஸ்துவைக் குறித்த நமது பார்வை மாறவேண்டியது அவசியம். அவரை நாம் தாவீதின் குமாரனென்றும் மரியாள் யோசேப்பின் மகன் என்றும் பார்க்கும் பார்வையினை மாற்றி "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்" என்று பார்க்கும்போதுதான் நமது ஆவிக்குரிய வாழ்க்கை மாறும். நாம் அப்போதுதான் மற்றவர்களையும் தேவ சாயலாக படைக்கப்பட்டவர்களாகப் பார்க்க முடியும். அதற்கு, "நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." என்று உறுதியாகக் கூறிக்கொள்வோம் அப்படியே தேவனுடைய குமாரனாக மட்டுமே பார்ப்போம். 

"ஆதவன்" தியானம் - 1987 

ஜூலை 18 சனி 2026   

"எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கின்றனவே." ( 2 கொரிந்தியர் 1 : 20 )

தேர்தலில் வெற்றிபெற அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை  மக்களுக்கு அளிப்பார்கள். அவைகளில் பல நிறைவேற்றவே முடியாதவையாக இருக்கும். ஆனாலும் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப்பிடிக்க முயல்வார்கள்.  வெற்றிபெற்றபின் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்பது கேள்விக்குறிதான். 

காரணம், இந்த அரசியல்வாதிகள் அவர்களின் உள்ளத்திலிருந்து பேசுவதில்லை. எப்படியாவது மக்களது மனதினை கவர்ந்து வாக்குகளைப்பெற்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதுதான் அவர்களது சுயநல எண்ணம்.  ஆனால் நமது தேவனுக்கு அப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்கவேண்டிய அவசியமில்லை. மனிதர்களாகிய நாம்தான் அவருக்கு உண்மையில்லாதவர்களாக வாழ்ந்து வருகின்றோம். ஆம், "நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்." ( 2 தீமோத்தேயு 2 : 13 )

இன்றைய தியான வசனத்தில் நாம், "தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்று இருக்கின்றது" என்று வாசிக்கின்றோம். அதாவது, தனது வாக்குத்தத்தங்கள் நிறைவேறும்போது தேவன் நம்மால் மகிமையடைகின்றார் என்று இந்த வசனம் கூறுகின்றது. பொய் வாக்குறுதிகளைக் கொடுக்கும் அரசியல்வாதி அவமானம் அடைகின்றான்; வாக்குறுதிகளை நிறைவேற்றும் தேவனோ நம்மால் மகிமை அடைகின்றார். 

மேலும், இந்த உலகினில் மனிதர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகள்  நிறைவேற்றிடவேண்டுமென்று நினைத்தாலும் சில வேளைகளில் நிறைவேற்றமுடியாமல் போய்விடக்கூடும். காரணம், வாக்களித்த இவர்களது வாழ்க்கைச் சூழல் சிலவேளைகளில் மாறிவிடலாம். ஆனால் தேவன் அப்படியல்ல, அவர் காலத்தையும் நேரத்தையும் மாற்றுகின்றவர். இல்லாதவைகளை இருக்கும்படிச் செய்பவர். தான் வாக்குத்தத்தம் செய்ததை எந்தச் சூழ்நிலையிலும் நிறைவேற்ற வல்லவராகவே இருக்கின்றார். "தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்." ( ரோமர் 4 : 21 ) என்று ஆபிரகாமைப்பற்றி நாம் வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, வேதாகமத்தில் ஆயிரக்கணக்கான தேவ வாக்குத்தத்தங்கள் உண்டு. இவைகளில் சில தனி மனிதர்களுக்கு குறிப்பிட்டக்  காலத்தில் தேவனால் கொடுக்கப்பட்டவை; சில வாக்குத்தத்தங்களோ கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டவை. மேலும் சில வேளைகளில் தேவன் நம்மோடு இடைப்பட்டு  நமக்குச் சில வாக்குத்தத்தங்களைத் தரலாம். இத்தகைய வாக்குத்தத்தங்களைக்குறித்து நாம் சந்தேகப்படத் தேவையில்லை, நிச்சயமாக அவை நமக்கு நிறைவேறும்.

"எனது தேவன் எனக்கு இப்படி வாக்களித்துள்ளனர்; அதனை அவர் எனது வாழ்வில் நிச்சயமாக நிறைவேற்றுவார்" என நாம் அந்த வாக்குத்தகங்களை விசுவாசித்து நம்பிக்கையுடன் அறிக்கையிடலாம். எனவேதான் எபிரெய நிரூப ஆசிரியர் கூறுகின்றார், "அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே." ( எபிரெயர் 10 : 23 ) என்று. 

வேதாகமத்தின் எந்த வாக்குத்தத்தமும் வீண் வார்த்தையோ ஏமாற்றோ அல்ல. அவை ஜீவனுள்ள தேவனின் வார்த்தைகள். எனவே அவை நிச்சயமாக நிறைவேறும். அவருடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கின்றன. 

"ஆதவன்" தியானம் - 1989 

ஜூலை 19 ஞாயிறு 2026   

"என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்." ( சங்கீதம் 25 : 15 )

வேடர்கள் பறவைகளை பிடிக்க வலைகளை விரித்து வைப்பார்கள். மட்டுமல்ல, பறவைகளைக் கவர்ந்து வலைக்குள் இழுக்கும்படி பறவைகள் உண்ணும் தானியங்களையும் அந்த வலைகளுக்குள் வைப்பார்கள். உணவைநாடிச் செல்லும் பறவைகள் அந்த வலைகளுக்குள் சிக்கிக்கொள்ளும். ஆடுமேய்த்துக்கொண்டிருந்த தாவீது காடுகளில் வேடர்கள் இப்படிச் செய்வதைப் பார்த்து அதனை ஆவிக்குரிய காரியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றார். அந்த உறுதியில்,   அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்று கூறுகின்றார். 

இதுபோல தற்காலங்களில் எதிரிகளை அழிக்க மண்ணில் கண்ணிவெடிகளைப் புதைத்துவைத்து தங்களைக் காத்துக்கொள்ள பல நாடுகளும் கிளர்ச்சியாளர்களும் முயல்வதுண்டு. 

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே நமது ஆத்துமாவை கவர்ந்து இழுத்து அழிக்கச் சாத்தான் முயலுகின்றான். அவனே ஆத்துமாக்களை வலைவிரித்து  கவர்ந்து இழுத்து அழிக்கும் வேடன். நமது கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்குமானால் அவர் நமது கால்களை இந்த வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். "நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்." ( சங்கீதம் 91 : 2, 3 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

வலைகளுக்கும் கண்ணிவெடிகளுக்கும் தப்ப நாம் தரையைப்பார்த்து குனிந்து நடக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் நம்மை ராஜாக்களாக அபிஷேகம் செய்துள்ளார். எனவே நாம் தலையை உயர்த்தி தேவனைப்பார்த்து நடத்தால்போதும்.  இப்படி நடக்கும்போது, அவரே நமது கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

நம்மை அழிக்க சாத்தான் நேரடியாக முயலுவதில்லை. அவன் நமக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடலாம், நமது ஆத்துமாவை அழிக்கும் பாவ காரியங்களை நாம் காணும்படியும், செய்யும்படியும் கவர்ச்சியை நமக்குக் காண்பிக்கலாம். அல்லது தேவையில்லாதப் பிரச்சனைகளில் நம்மைச் சிக்கவைக்கலாம், பெரிய அழிவுகளை நமக்கு ஏற்படுத்தலாம்; இல்லையானால் தேனை விட்டு நம்மைப் பிரிக்கும்படி நோய்களால் நம்மை வருத்தலாம். என்னவிதக் கண்ணியாக இருந்தாலும் நமது கண்கள் தேவனை நோக்கிக் கொண்டிருக்குமானால் நாம் அவற்றிலிருந்து தப்புவிக்கப்படுவோம்.

இதற்கு யோபு நமக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றார்.  பல்வேறு அழிவுகளை வாழ்வில் சந்தித்த அவரைச் சொந்த மனைவியே வெறுத்து ஒதுக்கினாள்.  "செத்துத்தொலை" என்பதுபோல அவள் கூறியபோதும் யோபு தேவனைவிட்டுத் தனது பார்வையை அகலவிடவில்லை.  "அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை." (யோபு 2:10) என்று நாம் வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, இப்படி தேவனை நோக்கிப்பார்த்த யோபுவின் கால்களை அவர் சாத்தானின் வலைகளுக்குத் தப்புவித்து காத்துக்கொண்டார். 

இதனை வாசிக்கும் நீங்கள்கூட இதுபோல ஏதாவது வலையில் சிக்கியிருக்கலாம். அல்லது உங்களுக்குத் தெரியாத வலையினை சாத்தான் மனிதர்கள்மூலம் விரித்திருக்கலாம். என்ன இருந்தாலும் கண்களை எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும்படிச் செய்வோமானால் அவரே நமது கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

"ஆதவன்" தியானம் - 1990 

ஜூலை 20 திங்கள் 2026   

"நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." (கலாத்தியர் 6:9)

சிலர் எப்போதும் தங்களது நல்ல செயல்களை எடுத்துக்கூறி, தங்களைத் தாங்களே நியாயப்படுத்தி தேவனைக் குறைகூறுவதுண்டு. எனக்குத் தெரிந்த ஒரு வயதான சகோதரி, "நான் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறேன், ஏழைகளுக்கு உதவுகிறேன், ஒரு சில குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்கின்றேன்,  இப்படியிருந்தும் எனக்கு வாழ்வில் நல்லது எதுவும் நடக்கமாட்டேன் என்கிறது. ஆண்டவர் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை" என்று நான் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னிடம் புலம்பிக்கொண்டிருப்பார்கள்.  

இவர்களிடம் இரண்டு தவறுகளை நான் கண்டுகொண்டேன். முதலாவது, இப்படி பிறருக்கு உதவி செய்தால் தனக்கு நல்லது எப்போதும் நடக்கும் எனும் முன் எதிர்பார்ப்பு எண்ணம். பிறருக்கு நல்லது செய்யும்போது நாம் கைமாறு கருதாமல் செய்யவேண்டியது அவசியம். இந்தப் பெண்மணியிடம் இந்த குணம் இல்லை. இவர்கள் நன்மைசெய்வதை வங்கியில் பணத்தை முதலீடு செய்வதுபோல எண்ணி அதனால் வரும் பலனை எதிர்பார்த்து ஏமாந்தவர்கள். 

இரண்டாவது, இவர்கள் பிறருக்கு நன்மை செய்தால் நமக்கு உடனேயே நல்லது நடக்கும் என எண்ணிக்கொண்டிருப்பவர்கள். ஆனால் வேதத்தில் நாம் அப்படி வாசிக்கவில்லை. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். ஆனால் சிலுவை மரணம்தான் அவருக்குப் பரிசாகக் கிடைத்தது. 

இன்றைய தியான வசனம் நன்மைசெய்கிறதில் நாம் சோர்ந்துபோகாமல் இருக்க அறிவுறுத்துகின்றது.  மட்டுமல்ல, அப்படிச் சோர்ந்துபோகாமல்  நன்மை செய்வோமானால் ஏற்றகாலத்தில் அறுப்போம் என்று கூறுகின்றது. "ஏற்ற காலம்" என்பது எந்த காலம் என்று நமக்குத் தெரியாது. "ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு" (பிரசங்கி 3:1) என்று நாம் வாசிக்கின்றோம். 

மேலும், "அவர் சகலத்தையும் அதனதன் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்." (பிரசங்கி 3:11) என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாம் நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருக்கவேண்டியது அவசியம். 

நாம் நிலத்தில் ஏதாவது பயிர் செய்திருப்போமானால், அதற்கு தினசரி தண்ணீர் ஊற்றுவோம், உரமிடுவோம், களைகளை அகற்றி பராமரிப்போம், அவைகளின் அடிப்பகுதியில் கிளறி விடுவோம், பூச்சிகள் தாக்காதபடி பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவோம். இப்படிச் செய்வது நன்மை செய்வதுபோலத்தான். ஆனால் இதன் பலன் உடனடியாக  நமக்குக் கிடைக்காது. ஏற்ற காலம் வரும் வரை நாம் காத்திருக்கவேண்டியது அவசியம்.  ஆனாலும் சிலவேளைகளில் விவசாயிகள் பயிரின் பலனை அடைவதற்குமுன் இயற்கைப் பேரிடர்களால் பயிர்கள் அழிந்துவிடுவதுண்டு. 

இப்படித் தாங்கள் பயிரிட்ட நெற்பயிரோ, வாழையோ அழிந்துபோனால் அந்த விவசாயிகள் சோர்ந்துபோய்விடுவதில்லை. மறுபடியும் பயிர்ச்செய்வார்கள். பின்னர் வெற்றிபெறுவார்கள். ஆம் அன்பானவர்களே, நாம் நன்மை செய்வது இந்திய விவசாயிகள் பருவகாலத்துடன் போராடுவது போன்றதே. இதனையே ஆங்கிலத்தில், "Indian agriculture is a gamble with the monsoon" என்பார்கள்.  இந்த விவசாயிகளைப்போல ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நாமும் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

"ஆதவன்" தியானம் - 1991 

ஜூலை 21 செவ்வாய் 2026   

"அவன் (எசேக்கியா) கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்." ( 2 இராஜாக்கள் 18 : 6, 7 )

கர்த்தர்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையும் அன்பும் நமக்கு இருக்குமானால் அவர் நமக்காகப்  போராடுவார் என்பதை நாம் இன்றைய தியானத்தில் தியானிக்க இருக்கின்றோம். 

இன்றைய தியான வசனம் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவைப்பற்றி கூறுகின்றது. இந்த எசேக்கியா, பிளவை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்துக்கு ஏதுவாக இருக்கும்போது கர்த்தரை நோக்கிக் கண்ணீரோடு விண்ணப்பம் செய்து தனது வாழ்நாளில் 15 ஆண்டுகள் நீடித்துப் பெற்றுக்கொண்டவர் என்பது நமக்குத் தெரியும். அதற்குக் காரணம் அவர் கர்த்தர்மேல் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆம், "அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை." ( 2 இராஜாக்கள் 18 : 5 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அவன் அசீரியா ராஜாவாகிய செனகரீபை சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டதால் அசீரிய ராஜா தனது தளபதி ரப்சாகேவை எசேக்கியாவிடம் அனுப்பினான். ஆனால் எசேக்கியா பணிந்துவிடவில்லை. இறுதியாக எசேக்கியாவிற்கு எச்சரிக்கை மடல் அனுப்பினான். அப்போது எசேக்கியா பயப்படாமல், அவனை எதிர்த்து போரிட முயலாமல் நேரே கர்த்தரது பாதத்தின் அந்த கடிதத்தைவைத்து விண்ணப்பம் செய்தார். இக்கட்டான அந்த வேளையிலும் எசேக்கியா பயப்படாமல், கர்த்தர் தனக்கு உதவி செய்வார் என்று நம்பினார். 

ஆம் அன்பானவர்களே, தேவன் எசேக்கியாவின் விண்ணப்பத்துக்கு அன்று உடனேயே பதிலளித்து தனது ஒரு தேவதூதனை அனுப்பினார்.  "அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்." ( 2 இராஜாக்கள் 19 : 35 ) என்று வாசிக்கின்றோம். 

மட்டுமல்ல, எசேக்கியாவை எதிர்த்து வந்த அசீரியாவின் அரசன் செனகரீபையும் அவனது சொந்த புதல்வர்களாலேயே தேவன் அழித்தார். "அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரனாகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்." ( 2 இராஜாக்கள் 19 : 37 ) என்று வாசிக்கின்றோம். 

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" ( யாத்திராகமம் 14 : 14 ) என்று கூறியுள்ளபடி, கர்த்தர்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையும் அன்பும் நமக்கு இருக்குமானால் நாம் நமது எதிரிகளை எதிர்த்து; பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவேண்டிய அவசியமில்லை. கர்த்தரே நமக்காகப்  போராடுவார்.  நாம் சும்மா இருப்போம். 

கர்த்தர்மேல் இத்தகைய அன்பும் விசுவாசமும் நமக்கு ஏற்படுமாறு ஜெபிப்போம். முற்றிலும் அவரையே நம்புவோம். "கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று" என்று இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றபடி இன்றும் நமக்குச்  செய்யக்  கர்த்தர் வல்லமையுள்ளவராக இருக்கின்றார். 

"ஆதவன்" தியானம் - 1992 

ஜூலை 22 புதன் 2026   

"எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை." ( சங்கீதம் 9 : 18 )

"அற்ற குளத்தின்  அறுநீர்ப்  பறவைபோல் ...." என்று தமிழ்ப் புலவர் அவ்வையாரின்  மூதுரைப் பாடல் ஒன்று உண்டு. குளத்தின் தண்ணீர் வற்றிவிடுமானால் பறவைகளுக்கு மீன் கிடைக்காது. எனவே அதுவரை குளத்தின் அருகிலேயே தங்கி வாழ்ந்த பறவைகள் குளத்தின் நீர் வற்றியவுடன் குளத்தை மறந்து அங்கிருந்து பறந்து சென்றுவிடும். 

இதுபோலச்  செல்வச் செழிப்போடு நாம் வாழும்போது மனிதர்களும் உறவுகளும் நம்மைச் சூழ்ந்துகொள்வார்கள். ஆனால் காலச் சூழ்நிலையில் நமது வாழ்வில் வறுமை வருமானால் நம்மைப் புகழ்ந்து நம்மோடு இருந்தவர்கள் நம்மைவிட்டு விலகிவிடுவார்கள். இது உலக இயல்பு. யோபுவை இப்படித்தான் நண்பர்களும் சுற்றத்தார்களும் சொந்த மனைவியும் வெறுத்தார்கள். ஆனால் நமது தேவன் இப்படிப்பட்டவர் அல்ல. அவர் எளியவர்களை என்றைக்கும் மறப்பதுமில்லை, சிறுமைப்பட்டவர்களைக் கைவிடுவதுமில்லை.  

மாற்கு நற்செய்தியில் பர்திமேயு எனும் ஒரு மனிதனைக்குறித்து வாசிக்கின்றோம். இவன் தெருஓரமாய் அமர்ந்து பிச்சையெடுத்துத்  தனது வாழ்க்கையை நடத்தியவன். காரணம் இவனுக்கு இரண்டு கண்களும் பார்வையற்றவை. நமது வாழ்வில் நாம் இப்படிப்பட்ட பிச்சையெடுக்கும் மனிதர்கள் பலரைக் கண்டிருப்போம். மனிதர்கள் அவர்களுக்கு என்ன மதிப்பைக் கொடுப்பார்கள் என்றும் நமக்குத் தெரியும். ஆம், அவன் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு ஏழை மனிதன். 

ஒருநாள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அந்த வழியே வந்தார். "அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்." ( மாற்கு 10 : 47, 48 ) ஒரு பிரபல மனிதன் வரும்போது தெருஓரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரன் இப்படி சப்தமிட்டால் நாம் என்ன செய்வோம், அதையேதான் அங்கிருந்த மக்கள் செய்தனர். அப்படித்தான் அவனை அதட்டி சத்தம்போடாமலிருக்கக்  கூறினர். 

ஆனால், "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை" எனும் வசனத்துக்கேற்ப ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவனது கூக்குரல் கேட்டது. அவனைத் தன்னிடம் அழைத்துவருமாறு கூறினார்.  அவனிடம் அங்கிருந்தவர்கள் அதனைச் சொன்னபோது, "உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்." ( மாற்கு 10 : 50 )

ஆம் அன்பானவர்களே, அவனது விசுவாசத்தை நமக்கு இது உணர்த்துகின்றது. இயேசு என்னைக் கூப்பிட்டிருக்கிறார், எனவே எனக்கு அதிசயம் செய்வார். எனக்கு இனி இந்தப் பழைய ஆடையும் பிச்சைப்  பாத்திரமும் தேவையில்லை எனும் விசுவாசம் அவனுக்குள் இருந்தது. எனவே அவன் அவற்றை எறிந்துவிட்டு இயேசு கிறிஸ்துவிடம் வந்தான். அவனது விசுவாசத்தின்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவன் பார்வையடையும்படிச் செய்தார். 

ஒருவேளை இன்று இந்தக் குருடனான  பர்திமேயுவின் வாழ்க்கைபோல நமது வாழ்க்கையும் இருக்கலாம். வறுமை, எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையற்ற நிலை; எதிர்காலத்தைக்குறித்த பார்வையற்ற இருண்ட நிலை நம்மைத் தொடரலாம். புறக்கணிக்கப்பட்ட இந்த ஏழை மனிதனைப்போல நாமும் இருக்கலாம். ஆனால் அன்பானவர்களே, செழிப்போடு, பகட்டோடு, அன்று கிறிஸ்துவோடு நடந்தவர்கள் அதிசயத்தை வாழ்வில் ருசிக்கவில்லை. ஒதுக்கப்பட்ட இந்த எளியவன்தான் உலகையும் அவரையும் வாழ்வில் கண்டுகொண்டான். 

எனவே, உறுதியான விசுவாசத்துடன் தேவனைப் பற்றிக்கொள்ளுங்கள். எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை; தேவ வசனம் பொய்யானதுமில்லை. 

 "ஆதவன்" தியானம் - 1993 

ஜூலை 23 வியாழன் 2026   

"எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்." ( 1 கொரிந்தியர் 10 : 4, 5 )

இஸ்ரவேல் மக்களை தேவன் மோசேமூலம் கானானை நோக்கி வழிநடத்தினார். அவர்களுக்கு வனாந்தரத்தில் உணவும் தண்ணீரும் கொடுத்து ஆதரித்தார். தண்ணீர் தாகத்தால் அந்த மக்கள் மோசேயை நோக்கி முறையிட்டபோது மோசே அதனைத் தேவனுக்குத் தெரியப்படுத்தினார். அப்போது தேவன் மோசேமூலம் கன்மலையிலிருந்து அவர்கள் குடிக்கும்படித் தண்ணீரைக் கொடுத்தார். அன்று இஸ்ரவேல் மக்களோடு கூடச் சென்றவரும் கன்மலையிலிருந்து தண்ணீரைக் கொடுத்தவரும், அந்தக் கன்மலையும் கிறிஸ்துவே என்று கூறுகின்றார் பவுல். 

ஆனால், "அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  ஆம் அன்பானவர்களே, இது இன்று நமக்கு ஒரு எச்சரிப்பாக எழுதப்பட்டுள்ளது. அதாவது, நாம் இன்று கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம், அவரோடு ஆவிக்குரிய வாழ்க்கை நடத்தலாம். ஆனால், இச்சை எனும் பாவம் நமக்குள் இருக்குமானால் நாம் அந்த இஸ்ரவேல் மக்களைப்போல அழிந்துபோவோம் என்கிறார் பவுல். 

பத்துக்கட்டளைகளின் இறுதிக் கட்டளைதான் "இச்சியாதிருப்பாயாக" என்பது.   ஆனால் நம்மில் பலரும் இதனைப் பெரிய பாவமாகக் கருதுவதில்லை. இச்சை என்பது பொருளாசையினைக் குறிக்கின்றது. மேலும், அடுத்தவர்களுக்கு இருக்கும் பொருட்கள் மேலும், உடைமைகளின்மேலும் ஆசைப்படுவது இச்சை.  "பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக" ( யாத்திராகமம் 20 : 17 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இஸ்ரவேல் மக்களோடு கிறிஸ்து சென்றிருந்தபோதும், அவர்கள் குடிக்கும்படி தண்ணீர், உண்ணும்படி மன்னா இவைகளைக் கொடுத்தபோதும் அவர்கள் இறைச்சி உணவின்மேல் இச்சைகொண்டு அதனையேத் தேடினார்கள். அவர்களுக்கு தேவன் அவர்கள் ஆசைப்பட்டதுபோல இறைச்சியைக் கொடுத்தாலும்  அவர்களை வனாந்தரத்தில் அழித்தார்.  "தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்." ( எண்ணாகமம் 11 : 33, 34 ) என்று வாசிக்கின்றோம்.

ஆம் அன்பானவர்களே, "அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 10 : 6 ) என்கின்றார் பவுல். நாம் இன்று கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம், ஆனால் இச்சை எனும் பொருளாசையினை விடமுடியாதவர்களாக இருப்போமானால் நம்மை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ள நமக்குத் தகுதியில்லை. 

இச்சையை மேற்கொள்வதே ஆவிக்குரிய வாழ்வின் வெற்றி. எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு நம்மை எச்சரித்துக் கூறுகின்றார், "அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்" ( யாக்கோபு 1 : 14, 15 ) என்று.

எப்படி இஸ்ரவேல் மக்கள் அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையாகிய கிறிஸ்து அளித்த தண்ணீரைக் குடித்தும் அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயில்லையோ அதுபோல கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொண்டாலும் இச்சை நம்மிடம் இருக்குமானால் அவர் நம்மிடமும் பிரியமாய் இருக்கமாட்டார். எனவே முதலில் இந்தப் பாவத்தை மேற்கொள்ள பெலன்வேண்டி தேவனிடம் மன்றாடுவோம்.

"ஆதவன்" தியானம் - 1994 

ஜூலை 24 வெள்ளி 2026   

"உமது பரிமளத்தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1 : 3 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரானது பரிமளத் தைலத்தைவிட அதிக வாசனையுள்ளதாக இருக்கின்றது. ஆம், அதன் மணம் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் உலகம் முழுவதுமுள்ள அனைத்து மக்களிடமும் வீசிக்கொண்டிருக்கின்றது.  

இன்றைய தியான வசனம், "ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்" என்று கூறுகின்றது. அதாவது, கர்த்தரால் மீட்கப்பட்ட  பாவக்கறை இல்லாத கன்னியர்கள்போன்ற  கபடற்ற மக்கள் அவரை நேசிக்கிறார்கள். மட்டுமல்ல, பாவத்தை மேற்கொள்ளும் மெய்யான மன ஆசை உள்ளவர்களும் அவரது நறுமணத்தை உணர்கின்றார்கள். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 14, 15 ) என்று கூறுகின்றார். 

இந்தக் கிறிஸ்துவின் நறுமணம் முதலில் நம்மை வெற்றிச்சிறக்கப்பண்ணுகின்றது. மட்டுமல்ல, நம்மைக்கொண்டு அவரை மற்றவர்களும் அறியும்படியான வாசனையை வெளிப்படுத்துகின்றது. நாம் கூடியிருக்குமிடத்தில் யாராவது ஒருவர் விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டு வரும்போது அது மற்றவர்களைத் திரும்பிப்பார்க்க வைக்கின்றது அல்லவா?  அதுபோலவே கிறிஸ்துவின் வாசனை நம்மில் இருக்குமானால் அது மற்றவர்களுக்கு நம்மை அடையாளப்படுத்துகின்றது. 

அன்று மரியாள் இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் நளதம் எனும் நறுமணத்தைலத்தைப் பூசியபோது அந்த வீடு முழுவதும் வாசனை நிரம்பி அனைவரையும் மகிழ்வித்தது. இதனை நாம், "அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது." ( யோவான் 12 : 3 ) என்று வாசிக்கின்றோம். இப்படி மரியாளைப்போல  நாம் கிறிஸ்துவின் நறுமணத்தை உலகிற்கு அறிவிக்கின்றோம்.

ஆனால் யூதாசைப்போன்ற மனமுள்ளவர்களுக்கு இந்த நறுமணம் பிடிப்பதில்லை. அவன் திருட்டுக் குணமுள்ளவனாக இருந்ததால், "இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்." ( யோவான் 12 : 5, 6 ) என்றுகூ றப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, யூதாசைப்போன்ற துன்மார்க்கர்களுக்கும், கெட்டுப்போகிறவர்களுக்கும் கிறிஸ்துவின் வாசனை மரணவாசனையாகவே தெரியும்; அதனை அவர்களால் சகிக்கமுடியாது.  எனவே கிறிஸ்துவை அறிவிக்கும் நாமும் "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 16 )

இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, கிறிஸ்துவின் பெயர் ஊற்றுண்ட  பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்களான கபடற்றவர்கள் அவரை நேசிக்கிறார்கள். நாமும் உண்மையாக அவரை நேசிப்போமானால் நாமும் கபடற்ற பரிசுத்தமான கன்னியர்களாக இருக்கிறோம் என்று பொருள்; இல்லையானால் அதனை மரணவாசனையாக உணர்ந்த யூதாசைப்  போன்றவர்களாக இருக்கிறோம் என்று பொருள்.

"ஆதவன்" தியானம் - 1995 

ஜூலை 25 சனி 2026   

"எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்." ( 2 கொரிந்தியர் 4 : 3 )

வேதாகமத்தை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். ஆனால் வேதாகமம் கூறும் செய்தியின் ஆவிக்குரிய உண்மைப் பொருளினை எல்லோரும் எளிதில் அறிந்துகொள்ளமுடியாது. அது குழந்தையைப்போன்ற மனமுள்ளவர்களாய் சத்தியத்தை அறியத் தேடுபவர்களுக்கே முற்றிலும் புரியும். 

இறையியல் கல்லூரிகளில் படிப்பவர்களும், பல்வேறு ஆராய்சியாளர்களும் சுவிசேஷத்தை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.  பல்வேறு கிறிஸ்த சபைப்பிரிவினரும் தங்களது சபைப்பிரிவின் போதனைகளின் அடிப்படையில் வேத வசனங்களுக்கு விளக்கமளிக்கின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், தேவனை யாரும் படித்து அறிந்துகொள்ள முடியாது என்பதுதான். மனத்தாழ்மையுடன் நடந்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு  குழந்தை உள்ளத்துடன் வாழ்பவர்களுக்குத் தேவன் பல்வேறு சத்தியங்களை வெளிப்படுத்திக் கொடுக்கின்றார். 

இதனையே நாம் "அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது." (லூக்கா 10:21) என்று இயேசு கூறுவதாக வாசிக்கின்றோம்.

வேதாகமத்தை நூறு சதவிகிதம் விசுவாசக் கண்ணோட்டத்துடன் நாம் பார்க்கவேண்டியது அவசியம். நமக்குப் புரியாத பகுதிகளுக்கு நாமாகப் பொருள்கொள்வது, நமக்குமுன் வேதாகமத்தை ஆராய்ச்சி செய்து மற்றவர்கள் எழுதிவைத்துள்ள  விளக்கத்தை நம்புவது இவை முற்றிலும் சரியானதாக இருக்காது. வேதாகமத்தின் ஆசிரியரான பரிசுத்த ஆவியானவர் நமக்கு அவற்றை  புரியவைக்கும்படி நாம் மன ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். இந்த அடிப்படை இல்லாமல் வசனங்களை புரிந்துகொள்ள முயல்வோமானால் நாம் அவிசுவாசிகள் போன்றவர்களே. 

இப்படித் தேவ ஆவியானவரைப் பற்றிக்கொள்ளாமல் இருப்போமானால் இப்பிரபஞ்சத்தின் அதிபதியான சாத்தான்  நமது மனக்கண்களைக் குருடாக்கிவிடுவான். ஆம், "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." ( 2 கொரிந்தியர் 4 : 4 ) என்று கூறப்பட்டுள்ளபடி நாம் சத்தியத்தை அறியமுடியாத குருடர்களாக மாறிவிடுவோம். 

ஆம் அன்பானவர்களே, நம்மில் யாரும் முற்றிலும் எல்லாம் அறிந்தவர்களல்ல. எனவே நாம் மறைபொருளாக இருக்கும் சுவிசேஷத்தை முற்றிலும் அறிந்துகொள்ள ஒருவேளை தேவ ஊழியர்களை நாடினாலும் அவர்கள் கூறுபவையே முற்றிலும் சரியானது என முடிவெடுக்காமல், "ஆண்டவரே, எனக்குச் சத்தியத்தைப் புரிய வையும்" என வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம்.  ஏனெனில், இந்தக்காலத்தில் சுவிசேஷ வசனங்கள் பலரது சொந்த லாபத்துக்காக புரட்டப்படுகின்றன; கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு சபைப்பிரிவும் ஒரே வசனத்துக்கு வெல்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன. 

எந்த தேவ வசனமும் மறைபொருளல்ல. தேவன் தனது பிள்ளைகள் புரிந்துகொள்ளாதபடி எதனையும் எழுதிவைக்கவில்லை. பவுல் கூறுவதுபோல, தேவனுடைய  சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். வாழ்வடைய விரும்பும் தேவ பிள்ளைகளுக்கு எதுவும் மறைவாக இருக்காது. எனவே, பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் வேதாகமத்தை வாசிப்போம். அவரே நிறைவான உண்மையினை நோக்கி நம்மை வழிநடத்துவார். 

"ஆதவன்" தியானம் - 1996 

ஜூலை 26 ஞாயிறு 2026   

"புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )

இன்று கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சகராக ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களிடையே பல்வேறு பிரிவினைகள் இருக்கின்றன. உலகெங்கிலும் சுமார் 2000 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைப் பிரிவுகள் இருக்கின்றன. இவை தவிர சிறு சிறு தனிநபர் சபைகள் பல இருக்கின்றன. ஆனால் இவர்கள் தங்களுக்குள் ஏதாவது ஒரு சிறு கருத்து வித்தியாசத்தால் பிரிந்திருக்கின்றனர். 

இந்தப்பிரிவினையினை நியாயப்படுத்த வேதாகமத்திலுள்ள உண்மைகளைக் குறித்து தங்களுக்குள் தர்க்கமிடுகின்றார், கிறிஸ்துவின் பிறப்பு குறித்தும் அவரது வம்சம், தாய், தகப்பன் குறித்தும், நியாயப்பிரமாணங்களைக் குறித்தும் தாங்கள் புரிந்துகொண்டதுதான் உண்மை என வாதிட்டு மற்றப்பிரிவினரை  தங்களைவிட குறைந்தவர்களாக மதிப்பிட்டு அற்பமாகவும்  எண்ணுகின்றனர். 

இவைகளை புத்தியீனமான தர்க்கங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். இத்தகைய  சண்டைகளையும்,  வாக்குவாதங்களையும் விட்டு நாம் விலகவேண்டும். காரணம் இவைகள் பிரயோஜனமற்றவையும்  வீணுமாயிருக்கும். இப்படி நாம் தர்க்கம் பண்ணுவதால் நாம் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகிவிடுவதில்லை. 

நாம் பேசவேண்டியவை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள்பட்டு, நம்மை மீட்டுக்கொண்டு தனக்கு உரியவர்களாக மாற்றிக்கொண்டதை மட்டுமே. அதாவது கிறிஸ்துவின் மீட்பளிக்கும் வல்லமைக்குறித்து மட்டுமே நாம் பேசவேண்டும். இதனையே அவர் தனது சீடனாகிய தீத்துவுக்குப் பின்வருமாறு கூறுகின்றார்:-

"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக." ( தீத்து 2 : 14, 15 )

தர்க்கம் செய்யாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அதிகாரத்தோடும் கடிந்துகொள்ளுதலோடும் நாம் கூறவேண்டும். மேற்குறிப்பிட்ட காரியங்களில்  யாராவது நம்மிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டால் பதிலுக்கு அவர்களோடு வாக்குவாதம் செய்யாமல்,  "முதலில் உனது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள், தேவையில்லாமல் பேசி வாக்குவாதம் செய்யாதே" என்று நாம் துணிவுடனும் அதிகாரத்துடனும் கூறவேண்டும். இதனையே பவுல் அப்போஸ்தலர், "சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக" என்கின்றார்.

ஆம் அன்பானவர்களே, தேவையற்ற காரியங்களில் தர்க்கங்களிலும் சண்டைகளிலும் ஈடுபடாமல் கிறிஸ்துவின் மீட்பளிக்கும் வல்லமையினை  மட்டும் அவர்களுக்குப் பதிலாகக் கூறுவோம். தர்க்கமிடும் பலரும் பாவம், இரட்சிப்பு எனும் வார்த்தைகளைக் கேட்டால் ஒதுங்கிவிடுவார்கள். காரணம், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடும் பெயர் கிறிஸ்தவர்கள் பலருக்கும் இவை ஒவ்வாமையாகவே (அலர்ஜியாகவே) இருக்கும். 

வேதாகம சத்தியங்களைக்குறித்துத் தர்க்கம் செய்பவர்களைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் தெளிவாகக் கூறி நம்மையும் எச்சரிக்கின்றார்:- "அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு." ( 1 தீமோத்தேயு 6 : 4, 5 )

"ஆதவன்" தியானம் - 1997

ஜூலை 27 திங்கள் 2026   

"என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்." ( சங்கீதம் 18 : 17, 18 )

இன்றைய தியான வசனம் தாவீது இராஜாவின் சங்கீத புத்தகத்தின் வார்த்தைகளாகும். கர்த்தர் தாவீதை எல்லா சத்துருக்களின் கைகளுக்கும் சவுலின் கைகளுக்கும் தப்புவித்தபோது தாவீது பாடியது  என்று இந்தச் சங்கீதம் குறிப்பிடப்படுகின்றது.   

தாவீதுக்கு எதிராக எழும்பியவர்கள்  பலர். எப்படியாவது அவனை அழித்துவிடவேண்டும் என்று அவர்கள் முயன்றார்கள். சவுல் முற்றிலும் பொறாமையால் நிறைந்தவனாகத் தாவீதைக் கொன்று ஒழிக்க முயன்றான். பல்வேறு சூழ்நிலைகளில் தாவீதுக்கும் மரணத்துக்கும் ஒருசில அடி தூரம் மட்டுமே இருந்தது. ஆனால் தாவீதுக்குக் கர்த்தர் ஆதரவாக இருந்தார்; அவரைக் காப்பாற்றினார். அந்த நன்றி உணர்வில் அவர் கூறுகின்றார்,  "என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்"  என்று. 

அன்பானவர்களே, வேதாகமம் முழுவதும் நாம் இப்படிக் கர்த்தர் தனது அடியார்களை விடுவித்தச் சம்பவங்களால் நிறைந்துள்ளதைப் பார்க்கலாம். தேவனை உறுதியான விசுவாசத்துடன் நம்பிச் செயல்படுபவர்களை அவர் கைவிடுவதில்லை. அன்று கானானைச் சுதந்தரிக்கும்முன் அதனைச் சுற்றிப்பார்த்துத்  தகவல் கொண்டுவர மோசே குலத்துக்கு ஒருவராகத் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் புத்திரரை அனுப்பினார். அவர்கள் சென்று நாற்பதுநாள் கழித்துத் திரும்பி வந்தார்கள். அப்படி வந்த அவர்கள் கூறிய வார்த்தைகளோ அவிசுவாச வார்த்தைகள். 

"நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்." ( எண்ணாகமம் 13 : 32, 33 )

ஆனால் அவர்களோடு சென்றுவந்த காலேபும் யோசுவாவும் இஸ்ரவேல் மக்களைத் திடப்படுத்தினார்கள். கர்த்தர் நம்மோடு இருக்கிறார் எனவே நாம் அவர்களுக்குப் பயப்படவேண்டிய அவசியமில்லை என்றனர். ஆம், "கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்." ( எண்ணாகமம் 14 : 9 )

அவர்கள் விசுவாசித்ததுபோல கர்த்தர் பல்வேறு ராஜாக்களை மடங்கடித்து இஸ்ரவேல் மக்களை கானானுக்குள் கொண்டுசென்று சேர்த்தார்.  

அன்று அந்த இஸ்ரவேலர்கள், "நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்"  "இராட்சதப் பிறவிகள்"  என்று கூறியதைப்போல நாமும் பலவேளைகளில் நமக்கு எதிராக நிற்கும் பிரச்சனைகளைப் பார்த்துப் பயந்து நடுங்குகின்றோம். அதற்கு மாறாக நாம் தாவீதைப்போல  "என்னிலும் பலவான்களாயிருக்கும் என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் அவர் விடுவிப்பார். எனக்கு எதிரிட்டு வருகிறார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிப்பார்" என்று விசுவாச அறிக்கையிடப்  பழகுவோம்.  எல்லோரிலும் பெரியவரும் வல்லவருமான தேவனையே  நோக்கிப்பார்த்து அவரை விசுவாச உறுதியுடன் பற்றிக்கொள்வோம்.  நெருக்கும் பிரச்சனைகளுக்கும் துன்பங்களுக்கும்  பயப்படவேண்டியதில்லை. கர்த்தர் நமக்கு ஆதரவாகவே இருப்பார். 

"ஆதவன்" தியானம் - 1998

ஜூலை 28 செவ்வாய் 2026   

"கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!" ( மத்தேயு 6 : 22, 23 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் மனிதர்களின் ஆவிக்குரிய பார்வையினைக்குறித்துக் கூறுகின்றார். நமது உடலில் கண்ணானது ஒரு முக்கியமான உறுப்பு. நமது பார்வைத்  தெளிவாக இருந்தால்தான் நம்மால் உலகினை பார்க்கமுடியும்; அதன் அழகினை ரசிக்கமுடியும்; எல்லாவற்றுக்கும் மேலாக இடறிடாமல் நம்மால் நடக்கமுடியும். 

இப்படி நமது ஆவிக்குரிய கண்ணனது பார்க்கமுடியாமல் கெட்டதாயிருந்தால், நமது உடல் முழுவதும் பாவ இருளாயிருக்கும்; இப்படி நம்மிலுள்ள ஆவிக்குரிய வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

இயேசு கிறிஸ்து பல ஆவிக்குரிய சத்தியங்களை எளிமையான உவமைகளாக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களைத் தெளிவுபடுத்த விரும்பினார். ஆனால் அந்த மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே,  தன்னையும்  தான் கூறியதையும்  உணர்ந்துகொள்ளாத யூதர்களைப்பார்த்து, "இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே." ( மத்தேயு 13 : 15 ) என்று கூறினார். 

அதாவது கிறிஸ்துவையும் அவர் கூறிய உண்மைகளையும்  அறிய முடியாமல் மனிதர்களின் ஆவிக்குரிய பார்வை குறைவாக இருக்கக் காரணம் அவர்களது இருதயம் கொழுத்திருப்பதுதான் என்று கூறினார்.  இதனை நாம்  அப்போஸ்தலருடைய நடபடிகள் 28 : 27 பகுதிகளிலும் வாசிக்கலாம். 

ஆம் அன்பானவர்களே, உலக ஆசை இச்சை இவைகளால் நமது இருதயம் கொழுத்திருக்குமானால் நம்மால் தெளிவாக எதனையும் பார்க்கவோ கேட்கவோ முடியாது.  இப்படி மனிதர்களது இருதயம் கொழுத்திருப்பதனால் ஆவிக்குரிய சத்தியங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.  எனவேதான் கிறிஸ்து மட்டுமே நமக்கு எல்லாமாக இருக்கின்றார் என்பதனையோ அவரை மட்டுமே நாம் அண்டிக்கொள்ளவேண்டும் என்பதனையோ பலரும் உணர்ந்துகொள்ளாமல் இருக்கின்றனர். 

நாம் நமது பார்வையில் குறைவு ஏற்படுமானால் உடனேயே மருத்துவமனைக்குச் சென்று கண் பரிசோதனை செய்து பார்வைத் தெளிவடையவேண்டி அதற்கான மருத்துவ சிகிர்சையை மேற்கொள்ளுகின்றோம். இதுபோல, நமது ஆவிக்குரிய பார்வைக்குறைபாட்டையும் நாம் சரிசெய்ய முயற்சி எடுக்கவேண்டியது அவசியம். 

ஆனால் இன்று பிரச்னை என்னவென்றால் பலரும் தங்களது பார்வைக்குறைவை உணர்வதுமில்லை அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை. இப்படியே அன்றைய யூதர்களும் இருந்தனர். எனவேதான் "இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்." ( யோவான் 9 : 41 )

ஆம் அன்பானவர்களே, நாம் குருடர்கள் என்பதனை ஒத்துக்கொள்வோமானால் நாம் நியாயம்தீர்க்கப்படமாட்டோம்;  கிறிஸ்துவும் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். ஆனால் நாம் "நாங்கள் குருடர்களல்ல, நன்றாக பார்வை பெற்றவர்கள்" என்று கூறிக்கொண்டு அவரை வாழ்வில் அறியாமல் இருப்போமானால் நமது பாவம் நிலைநிற்கும். 

நமது ஆவிக்குரிய பார்வையினைக்குறித்துத் தெளிவுள்ளவர்களாக இருப்போம்.  அவரை நாம் எப்படி அறிந்திருக்கின்றோம் என்பதனை நிதானித்துப்பார்ப்போம். கிறிஸ்துவைகுறித்த நமது ஆவிக்குரிய பார்வை தெளிவாக இருக்குமானால் நமது சரீரம் முழுவதும் பாவக்கறை இல்லாமல் வெளிச்சமாயிருக்கும். நமக்குக் கிறிஸ்துவைகுறித்த பார்வைக் குறைந்து நமது ஆவிக்குரிய கண் கெட்டதாயிருந்தால், நமது  சரீரம் முழுவதும் பாவ இருளாயிருக்கும்.  

"ஆதவன்" தியானம் - 1999

ஜூலை 29 புதன் 2026  

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 )

அப்போஸ்தலரான யோவான் கூறும் இன்றைய தியான வசனத்தினை நாம் பலமுறை வாசித்திருக்கின்றோம். ஆனால் இந்த வசனம் வெறும் வார்தைகளாகவே நம்மில் பலருக்குள்ளும் இருக்கின்றது. இதனைச் செயல்படுத்தும்போது மட்டுமே நாம் இந்த வசனத்தின் உண்மையினை வாழ்வில் உணர்ந்துகொள்ள முடியும். 

கிறிஸ்தவர்கள் அனைவருமே கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள்தான். ஆனால் எல்லோரும் இந்த வசனம் கூறுவதன்படி தேவனுடைய பிள்ளைகளா என்பதுதான் கேள்வி. ஆலயங்களில் வழிபாடுகளில் கலந்துகொள்பவர்கள், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள் இவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்கள்தான். ஆனால் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகளா? 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 )  என்று வேதாகமம் கூறுகின்றது. அதாவது ஒன்றை நாம் விசுவாசிக்கின்றோமென்றால் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டியது அவசியம். தேவனிடம் ஏதாவது ஒன்றினை எதிர்பார்த்து வேண்டுதல் செய்வதும், அதற்காகவே ஆலயங்களுக்குச் செல்வதும் முழுமையான தேவன்மேல் கொள்ளும் விசுவாசம் என்று கூறிட முடியாது. இன்றைய வசனத்தின்படி, தேவன் அப்படிச் செல்பவர்கள்  அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி  அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. 

தேவன்மேல் விசுவாசமுள்ள ஆவிக்குரிய மனிதன் அவரையே வாழ்வில் அடைந்துகொள்ள நாடுவான். மட்டுமல்ல, அத்தகைய மனிதன் தனது சுய சித்தத்தை மறந்து தேவனையுடைய சித்தத்துக்கும் அவருடைய ஆவியின் வழிநடத்துதலுக்கும் தன்னை ஒப்புக்கொடுப்பான். இதனையே அப்போஸ்தலரான பவுல், "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்." ( ரோமர் 8 : 14 ) என்று கூறுகின்றார். 

நூறு சதவிகிதம் உலக ஆசையினையும் உலகத் தேவைகளையும் உள்ளத்தில் சுமந்துகொண்டு ஆலயங்களில் வந்து கைகளைத்தட்டிப் பாடுவது தேவனைத் தேடுவது ஆகாது. வாழ்வின் முழு நேரத்தையும் உலகத்தோடு ஒத்து வாழ்ந்துவிட்டு ஒரு சில மணிநேரம் ஆராதனை எனும் பெயரில் பாடல்பாடி, ஆர்ப்பரிப்பது தேவனைத் தேடுவது ஆகாது. இத்தகைய செயல்பாடுகள் இன்றைய வசனம் கூறும் அவருடைய நாமத்தின்மேல் உள்ள  விசுவாசமல்ல; இப்படிச் செய்வது அவரை நாம் ஏற்றுக்கொண்டோம் என்பதாகாது.  

இஸ்ரவேலில் நிக்கொதேமு எனும் போதகன் இப்படித்தான் இருந்தான். ஆனால் அவனுக்கு இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ மக்களைப்போல இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் இருந்தது. அவன் யூதர்களுக்குப் பயப்பட்டதால் இரவுவேளையில் இயேசு கிறிஸ்துவைத் தேடி வந்தான். "அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 3 : 2, 3 )

ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்வது, அவரைத்தேடி வருவது மட்டும் போதாது. இயேசு கிறிஸ்து குறிப்பிடுவதுபோல நாம் மறுபடி பிறக்கவேண்டும். பாவத்துக்குச் செத்து நீதிக்குப் பிழைக்கவேண்டும். கிறிஸ்துவிடம் நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து பாவமன்னிப்பைப் பெறவேண்டும். அப்போது மட்டுமே நாம் அவரது பிள்ளைகளாக முடியும். இப்படி  பாவமன்னிப்பைப்பெற்று அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு தேவன் அதிகாரங்கொடுத்துள்ளார்.  இந்த அதிகாரத்தை பெறுவதற்கு இன்றே முயற்சியெடுப்போம். 

"ஆதவன்" தியானம் - 2000 

ஜூலை 30 வியாழன் 2026  

"சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )

உடல் முயற்சியால் பலர் இந்த உலகத்தில் அரிய பல காரியங்களைச் செய்கின்றனர். விளையாட்டுகளிலும் உடல் வலிமையை மெய்ப்பிக்கும் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளையும் பதக்கங்களையும் பெறுகின்றனர். இந்த உலகம் அவர்களைப் பாராட்டி பெருமைப்படுத்துகின்றது. ஆனால் இத்தகைய சரீரமுயற்சிகள் அற்பமான பலனையேக் கொடுக்கவல்லவை. 

இதுபோல இந்த உலகத்தில் பலரும் பல்வேறு கடினமான உடல் முயற்சிகளால் தேவனது ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ள முயல்வதையும்  நாம் பார்க்கின்றோம். ஆனால் இத்தகைய சரீர முயற்சிகள் அற்பமான பலனைத்தான் கொடுக்குமென்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. நாம் நமது உடலை வருத்தும் செயல்களைச் செய்வதால் உலகத்துக்கு ஏற்புடையவர்கள் ஆனாலும் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகிவிடுவதில்லை.  

நாம் உடல் முயற்சிகளை விட்டு நமது உள்ளத்தை தேவனை நோக்கித் திருப்பவேண்டியது அவசியம். இத்தகைய தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் ஏற்புடையதாக இருப்பதால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. முதலில் கிறிஸ்து நமக்குள் வரவேண்டியது முக்கியமேத்தவிர நமது உடல் முயற்சிகளல்ல. காரணம், அப்படிக்  கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்தவர்களாகின்றோம். ஆம்,  "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 ) இதுவே மேலான வெற்றி.

சரீர முயற்சிகள் மூலம் நாம் ஒருவேளை மனிதர்களது பார்வைக்கு மேலானவர்களாக, பக்தியுள்ளவர்களாகத் தெரியலாம். ஆனால் வெறுமனே உடல் சார்ந்த முயற்சிகளான உபவாசம், உடலை வருத்தும் இதரச் செயல்பாடுகள் தேவனை நம்மை நோக்கித் திருப்ப தேவையாயிருப்பதில்லை. சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி அது உடலைப் பேணுவதற்கேப்  பயன்படும். 

சிலர் கடுமையான உபவாசம் மூலம் தேவனது அன்பைப் பெறுவதற்கு முயல்கின்றனர். நமது இருதயத்தைத் தேவனை நோக்கித் திருப்பாமல் இப்படி உபவாசிப்பதும் தேவையற்றதே. காரணம்,  "போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 8 )

தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. எனவே நாம் உடல் சார்ந்த முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தேவபக்திக்கேதுவான காரியங்களில் ஈடுபடவேண்டியது அவசியம். அதாவது தேவனது ஆவி நம்மில் குடிகொள்ள ஆர்வமுள்ளவர்களாக அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டியது அவசியம். 

காரணம், "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலராகிய பவுல். 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனுக்காகச் செய்யும் சரீர முயற்சிகளைத்  தேவனுக்கேற்ற முயற்சிகள் என்று தவறாக எண்ணாமல் தேவ பக்திக்குரிய ஆவிக்குரிய முயற்சிகளில் ஈடுபடுவோம். அப்போதுதான் நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக மாறமுடியும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இராமல்  ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) 

கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வரும்போது அது மட்டுமே இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும்  எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளதாக இருக்கும். எனவே உடல் சார்ந்த முயற்சிகளைவிட்டு ஆவியானவரை அடைந்துகொள்ள வாஞ்சிப்போம். அதற்கான தேவ பக்திக்குரிய செயல்பாடுகளில் ஈடுபடுவோம். 

தியானம் - 2001

"ஆதவன்" 

ஜூலை 31 வெள்ளி 2026  

"உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக." ( சங்கீதம் 43 : 3 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்" என்று கூறினார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்குமுன் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னரே உண்மையான பக்தர்கள் இதனைக் கண்டுகொண்டனர்.  ஆம், அன்று பழைய ஏற்பாட்டுக்கால  யூதர்கள் கிறிஸ்துவை அறியாமலேயே வேண்டுதல்செய்த ஒளி, வழி, சத்தியம் எல்லாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். இதனை அவர் உலகத்தில் இருக்கையில் அவர்களுக்குத் திட்டமும் தெளிவுமாகக் கூறினார்

"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." ( யோவான் 8 : 12 )

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்றார். 

ஆம் அன்பானவர்களே, உமது ஒளியையும் சத்தியத்தையும் அனுப்பியருளும் அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக. என்று பழைய ஏற்பாட்டுக்கால பக்தன் வேண்டியதற்கு பதிலளிப்பதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் அனுப்பியுள்ளார். அவரே நம்மை பரிசுத்த விண்ணக சீயோன் பர்வதத்துக்கு நேராக நம்மை வழிநடத்திட முடியும். 

பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் கர்த்தரை வேண்டினாலும், புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நம்மைப்போல அவர்களுக்கு கர்த்தரைப் பற்றி ஒரு தெளிவு இல்லை. கர்த்தர் என்பவர் நன்மை  செய்பவர்களை அரவணைக்கவும் தீமை செய்பவர்களைத்  தண்டிக்கவும்கூடிய ஒரு வல்லமையான சக்தி என்று எண்ணிக்கொண்டனர். ஒருவித அச்சத்துடனேயே கர்த்தரைப் பார்த்தனர். அதாவது தேவனைப்பற்றிய தெளிவான புரிதல் அவர்களுக்கு இல்லை. ஆனால் அவர்கள் தேவனை அன்பு செய்தனர், வேண்டுதல் செய்தனர். 

இயேசு கிறிஸ்துதான் கர்த்தரை அப்பா என்று அழைக்கக் கற்றுக்கொடுத்தார். அதாவது,  கர்த்தர் என்பவர் எங்கோ  இருக்கும் அந்நியர் அல்ல; அவர் நமது தகப்பன் எனும் புரிதலைக் கொடுத்தவர் இயேசு கிறிஸ்துதான். 

அதனால்தான் இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம்,  "நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்."  ( யோவான் 4 : 22 ) என்று கூறினார். இன்றும் இதுபோல அறியாமல்  ஒளியை வணங்கக்கூடிய மக்கள் இருக்கின்றனர். விளக்குகளையும், சூரியனையும் பலர் வணங்குகின்றனர். காரணம் கடவுள் ஒளியாக இருப்பதாக எண்ணுவதால்தான் அவர்கள்  ஒளியை வணங்குகின்றனர். ஆனால், தேவன் ஒளியாய் இருந்தாலும் எல்லா ஒளியும் தேவனல்ல என்பதே உண்மை.  

நமது தேவன் வெறும் ஒளியல்ல. அவரைக்குறித்து நாம், "ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்" ( 1 தீமோத்தேயு 6 : 16 ) என்று வாசிக்கின்றோம். 

இன்றைய தியானம் கூறுவதன்படி தேவன் அனுப்பிய இந்த வழியும் சத்தியமும் ஜீவனுமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நம்மை  நடத்தி, அவரது பரிசுத்த சீயோன்  பர்வதத்திற்கும் அவரது விண்ணக வாசஸ்தலங்களுக்கும் நம்மைக் கொண்டுபோகமுடியும்.   எனவே, இன்று நாம், "உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக" என்று ஜெபிப்பதற்குப் பதில் ஏற்கெனவே நமக்கு அனுப்பப்பட்டுள்ள மெய்யான ஒளியும், வழியும்,  சத்தியமுமான இயேசு கிறிஸ்துவை பின்பற்றினால் போதும். 

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - பிலிப்பியர் 4 : 19 / Philippians 4:19

  தியானம் - 2005 " ஆதவன் " ஆகஸ்ட் 05   புதன் 2026     "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயே...