ஆம் அன்பானவர்களே, எகிப்து எனும் பாவ வாழ்க்கையிலிருந்து தேவனை நோக்கி நாம் நடக்கும்போது இந்த உலகத்தில் பல்வேறு துன்பங்கள் நம்மை நெருக்கலாம். முன்பு நாம் அனுபவித்திருந்த பல நன்மைகள் கிடைக்காமல் போயிருக்கலாம். அதற்காக நாம் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடக்கூடாது. இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, உங்களை இப்படிப்பட்ட வனாந்தர பாதையில் நடத்துகின்றேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
ஆவிக்குரிய மக்களாகிய நம்மைத் தேவன் நடத்தும் வழி உலகமக்கள் நடப்பதுபோன்ற கவலைகள், துன்பங்களற்ற குறுகிய வழியல்ல. மாறாக அது இஸ்ரவேல் மக்கள் நடந்ததுபோன்ற வனாந்தர வழி. இந்த வழி கடினமான வழியாக இருந்தாலும், தேவன் நமது மேலிருக்கும் ஆடைகள் பழையதாய்ப் போகாமலும், நமது காலிலிருக்கும் செருப்புகள் பழையதாய்ப் போகாமலும் அற்புதமாக நம்மை நடத்தி இந்த வனாந்தர வழியினைக் கடக்கும்படிச் செய்வார். அதாவது அற்புதமாக இந்தத் துன்பங்களை மேற்கொள்ளும் பெலன் தருவார். மட்டுமல்ல, இந்த வழியில் நடக்கும்போதுதான் கர்த்தராகிய தேவனை நாம் நமது வாழ்வில் அறிந்துகொள்ளமுடியும்.
"என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்." ( ஓசியா 8 : 12 )
தேவன் மனிதர்களது நல்வாழ்வுக்காக பல்வேறு கட்டளைகளையும் அந்தக் கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்ந்த பரிசுத்தவான்களது வாழ்க்கை அனுபவங்களையும் நமக்கு வேதாகமாகத் தந்துள்ளார். காரணம், நாம் அவைகளை உணர்ந்து, அவற்றின்படி வாழ்ந்து நித்தியஜீவனை அடையவேண்டும் என்பதற்காகவே. இதற்காகவே தேவன் ஆரம்ப காலங்களில் தீர்க்கதரிசிகள்மூலம் பல்வேறு விதங்களில் பேசினார். இறுதியில் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துமூலம் பேசினார். இவைகளே வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."( எபிரெயர் 1 : 1, 2 ) என்று வாசிக்கின்றோம்.
மேலும், இந்தத் "தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்" ( 2 பேதுரு 1 : 21 ) என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், "எனது நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை நான் அவர்களுக்காக எழுதியிருந்தும், அவை அந்நியமானவைகளாகக் கருதப்படுகின்றன" என வேதனையுடன் கூறுகின்றார் தேவன். அதாவது, இந்தக் கட்டளைகள் எங்களுக்கானவை அல்ல என்று மக்கள் கருதுகின்றார்கள் என்கிறார் தேவன்.
ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் தங்களுக்கென சில விதிமுறைகள் வைத்திருப்பார்கள். அந்தப் பள்ளியிலோ கல்லூரியிலோ நாம் தொடர்ந்து பயிலவேண்டுமானால் அந்த விதிமுடைகளை நாம் பின்பற்றியாகவேண்டும். "இத்தகைய விதிமுறைகள் வேறு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இல்லை எனவே இவற்றைக் இங்கு நான் கடைபிடிக்கமுடியாது" என்று நாம் கூறமுடியாது.
ஆம் அன்பானவர்களே, வேறு மார்க்கங்களில் உள்ளதுபோல கிறிஸ்தவ மார்க்கம் நமக்குக் கற்றுத்தரவில்லை. நமது தேவன் பரிசுத்தர். எனவே கிறிஸ்தவ மார்க்கத்தின் கட்டளைகளும் நாம் அவரைப்போல பரிசுத்தமடையவே எழுதப்பட்டுள்ளன. "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே." ( 1 பேதுரு 1 : 16 )
தேவன் எழுதிக்கொடுத்த வேதாகம வார்த்தைகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் நேசிக்கின்றோமோ, தியானிக்கின்றோமோ அதற்கேற்ப தேவன் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் மேன்மையாக வைப்பார். எனவேதான் மோசே மூலம் இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் பின்வருமாறு கூறினார்:- "நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக." ( உபாகமம் 11 : 19 - 21 )
தேவன் எழுதிக்கொடுத்துள்ள வேதாகமம் அந்நிய காரியமல்ல. அது நமக்கு வாழ்வுக்கான வழிகாட்டி. மோசே கூறியபடி அந்த வேத வசனங்களை நமது பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே நாம் கற்றுக்கொடுக்கவேண்டியது அவசியம்; அவற்றைக்குறித்து நமது பிள்ளைகளிடம் பேசவேண்டியது அவசியம். ஆம், "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி." ( நீதிமொழிகள் 6 : 23 ) தேவன் எழுதிக்கொடுத்த வேதத்தின் மகத்துவத்தை அலட்சியப்படுத்தாமல் மதித்து நடப்போம்.
"இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம்." ( 1 கொரிந்தியர் 15 : 19 )
பொதுவாக கடவுளை விசுவாசித்து வாழும் மக்களை ஆன்மீகவாதிகள் என்று எல்லோரும் கூறுகின்றனர். உலகினிலுள்ள எல்லா மதங்களிலும் அந்தந்த மத விசுவாசிகள் உண்டு. ஆனால் எல்லோரும் ஆன்மீகவாதிகளா என்பதுதான் கேள்வி.
ஆன்மீகவாதிகள் என்றால் உண்மையில் அவர்கள் தங்களது ஆன்மாவைக் குறித்த அக்கறையுள்ளவர்களாகவும் அந்த ஆன்மா வாழ்வடைந்திருக்க ஏற்றச் செயல்பாடுகளைச் செய்பவர்களாகவும் இருக்கவேண்டும். ஆனால் நாம் இன்று உலகினில் பார்க்கும் தங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலரும் இப்படித் தங்கள் ஆன்மாவைக்குறித்துச் சிந்திக்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான்.
எந்த மதத்தினரின் ஆலயங்களாய் இருந்தாலும் பெரும்பாலான ஆலயங்களில் நாம் மக்களது வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும், அவர்களது பொருத்தனைகளையும் கவனித்துப்பார்த்தால் 100 சதவிகிதம் அவை அவர்களது உலகத் தேவைகளைப்பற்றியதாகவே இருப்பதை நாம் பார்க்கலாம். தங்களது நோய்கள் நீங்கவேண்டும், பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கவேண்டும், பிள்ளைகளுக்குத் திருமணம் நடக்கவேண்டும், குழந்தைப்பேறு கிடைக்கவேண்டும், படித்த தங்களது பிள்ளைகளுக்கு ஏற்ற வேலை கிடைக்கவேண்டும் என்பனபோன்ற வேண்டுதல்களாகவே இவர்களது வேண்டுதல்கள் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.
கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஜெபிக்கும் பல குருக்களும் இந்தக் கருத்துகளுக்காகவே ஜெபிக்கின்றனர். அங்கு வரும் விசுவாசிகளும் இப்படியே இருக்கின்றனர். கிறிஸ்தவ கன்வென்சன் கூட்டங்களில் இதுபோன்ற போதனைகளையும் சாட்சிகளையும்தான் நாம் பெரும்பாலும் பார்க்க, கேட்க முடிகின்றது.
இப்படி வேண்டுதல் செய்பவர்கள் பரிதபிக்கத்தக்கவர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. காரணம், இவர்கள் வாழ்வில் தேவனை அறியாமலேயே மரணமடைகின்றனர்; தேவன் ஆயத்தம்பண்ணியுள்ள நித்திய ஜீவனை இழக்கின்றனர். ஆம் அன்பானவர்களே, எனவேதான் இன்றைய தியான வசனம் நம்மை எச்சரிக்கின்றது. இம்மைக்காக மட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், பரிதபிக்கப்படத்தக்கவர்கள். மட்டுமல்ல, நாம் நம்மை ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்வது பொய்.
ஒருவேளை இப்படி விண்ணப்பம் செய்து நமது தேவைகளை நாம் பெற்றுக்கொண்டதாலும் அது தேவன் தனது கிருபையால் தருவதே தவிர அப்படிக் கிடைப்பதால் நமது ஆத்துமாவுக்கு அதனால் எந்தப் பலனுமில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத மக்களும் உலகினில் எல்லா செல்வங்களையும் பெற்று நலமாக வாழ்கின்றனர். என்னோடு பணியாற்றிய கடவுள் நம்பிக்கையில்லாத நண்பர் இப்போதும் கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை எழுதியும் பேசியும் வருகின்றார். அவரது மொத்தக் குடும்பத்தாரும் அதே உறுதியில்தான் இருக்கின்றனர். அவரது பிள்ளைகளும் நல்ல உலகவேலையில்தான் இருக்கின்றனர்.
அன்பானவர்களே, நாம் ஆன்மீகவாதிகள் என்றால் முதலில் நாம் நமது ஆத்துமாவைக்குறித்து எண்ணமுள்ளவர்களாக இருக்கவேண்டும்; அந்த ஆத்துமாவில் தேவனது பிரசன்னத்தை உணரவேண்டும்; தேவன்மேலுள்ள ஆசையே நம்மில் மேலானதாக இருக்கவேண்டும்; தேவனோடு நெருங்கிய அன்புறவு நமக்கு இருக்கவேண்டும். தேவனது வழிநடத்துதலையும், இந்த உலக வாழ்க்கைக்குப் பின்னரும் நமது ஆத்துமா வாழ்கின்றது, அது நித்திய பரலோக இன்பமாக அல்லது நித்திய நரகஅக்கினியாக இருக்கலாம் எனும் உணர்வும் இருக்கவேண்டும்.
இவை எதுவும் இல்லாமல் வெறுமனே ஆலயங்களுக்குச் சென்று நமது உலகத் தேவைகளுக்காக விண்ணப்பம் செய்துகொண்டிருப்போமென்றால் நாம் ஆன்மீகவாதிகள் அல்ல; உண்மையான கிறிஸதவர்களும் அல்ல. ஆம், இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று கூறினார்.
இம்மைக்காக மட்டுமே நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கைக்கொண்டு எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக மாறிப்போகாமல் இருப்போம்.
"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )
குழந்தைகளைத் தண்டித்துக் கண்டித்து வளர்க்கவேண்டியது அவசியம். இன்று பெரும்பாலும் பெற்றோர்கள் அப்படிக் குழந்தைகளைத் தண்டிப்பதில்லை. முன்பு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் தவறு செய்யும் மாணவர்களைக் கண்டித்துத் திருத்தினார்கள். ஆனால் இன்று அப்படியல்ல, குழந்தைகளைத் தண்டிக்கும் ஆசிரியர் நீதிமன்றங்களில் தண்டனை பெறுகின்றார். இதன் விளைவே இன்று நாம் காணும் சமூக சீர்கேடுகள். ஆம், பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கவே வேதம் அறிவுறுத்துகின்றது. "பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்." ( நீதிமொழிகள் 23 : 13 )
குழந்தைகள் தவறு செய்யும்போது நல்ல தாய் தந்தையர்கள் அவர்களைத் தண்டிப்பதுண்டு. சில வேளைகளில் தாய் தனது குழந்தையைப் பலமாக அடித்துவிட்டால், பின்னர் அவளே அந்தக் குழந்தையைக் கொஞ்சுவாள். இதுபோலவே தேவன் நம்மையும் நடத்துகின்றார். தண்டனையைத் தரும் அவரே நமக்கு ஆறுதலையும் அளிக்கின்றார்.
சிலவேளைகளில் நாம் சோதனை, துன்பங்களில் அகப்படுவதற்கு நமது தவறுகளும் பாவங்களும் காரணமாக இருக்கலாம்; அவை தேவன் தரும் தண்டனையாக இருக்கலாம். ஆனால் நமது தேவன் இரக்கமும் கிருபையும் உள்ளவராக இருப்பதால் நாம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும்போது நம்மை அணைத்துக்கொள்கின்றார். இதனையே யோபுவும், "அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது" ( யோபு 5 : 18 ) என்று கூறுகின்றார்.
இப்படித் தேவன் நம்மைத் தண்டிப்பதற்குக் காரணம் அவர் நம்மைத் தனது பிள்ளைகளாக எண்ணி நடத்துவதால்தான். ஆம், "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 ) நாம் நமது பிள்ளைகளைத்தான் தண்டிக்கமுடியும், அடுத்தவர்களது பிள்ளைகளையல்ல. ஆம் அன்பானவர்களே, நாம் அவரது பிள்ளைகளாக இருப்பதால் தேவன் நாம் தவறுசெய்யும்போது நம்மைத் தண்டிக்கின்றார். "இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்" ( யோபு 5 : 17 ) என ஆலோசனைத் தருகின்றார் யோபு.
நமது தாய்தந்தையர்கள் நம்மை எப்போதும் தண்டிப்பதில்லை. எது நமக்கு நல்லது என்று அவர்கள் கருத்தினார்களோ அவற்றை நாம் செய்யாதபோது நம்மைத் தண்டித்தார்கள். நாம் குறிப்பிட்டப் பருவவயதை அடைந்தபின்னர் அவர்கள் நம்மைத் தண்டிப்பதில்லை. ஆனால் தேவனோ நாம் அவரது பரிசுத்த இராஜ்ஜியத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி நம்மை நமது வாழ்வின் இறுதிவரைத் தண்டித்து நடத்துகின்றார். இதனையே நாம் எபிரெயர் நிருபத்தில், "அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்." ( எபிரெயர் 12 : 10 ) என்று வாசிக்கின்றோம்.
நமது எல்லாத் துன்பங்களுக்கும் தேவனது தண்டனையே காரணமாக இருக்கமுடியாது. எனினும் நாம் நெருக்கடிகளுக்கு உள்ளாகும்போது நாம் நம்மையே நிதானித்துப்பார்த்து நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டியது அவசியம். ஆம் அன்பானவர்களே, துன்பங்களால் அவதிப்படும்போது நாம் கலக்கமடையத் தேவையில்லை. தேவன் துன்பங்கள் வழியாக நமக்கு நன்மையே செய்கின்றார். காரணம், அவரைவிட்டு நாம் விலகிப்போகாமல் இருப்பது துன்பங்களால்தான்.
மனிதர்களது வாழ்வு பிரச்சனைகளும் துன்பங்களும் இல்லாமல் ஒரே மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்குமானால் யாரும் தேவனைத் தேடப்போவதில்லை. துன்பங்களால் அவதிப்படுவோர்களைப் பார்த்துக் கூறப்பட்ட வார்த்தைகளே இன்றைய தியான வசனம். எனவே, துன்பநேரங்களில் நமது வாழ்வை ஆராய்ந்துபார்த்துக் கர்த்தரிடத்தில் திரும்புவோம். ஆம், நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார் எனும் வார்த்தைகளின்படி கிருபையின் தேவன் நம்மை ஆறுதல்படுத்துவார்.
"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )
கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்கு மனிதர்கள் பல்வேறு கடினமான முயற்சிகளைச் செய்வதை நாம் பார்க்கின்றோம். இதற்காகப் பல்வேறு ஆலயங்களில் கடினமானச் செயல்களை மனிதர்கள் செய்கின்றனர். கம்பியால் கன்னத்தில் துளையிட்டுக்கொள்கின்றனர், நாக்கில் துவாரமிட்டு கம்பிகளைச் சொருகிக்கொள்கின்றனர், அங்கப்பிரதட்சணம் எனக் கூறித் தரையில் உருள்கின்றனர், நெருப்பின்மேல் நடக்கின்றனர், தட்டுகள் இல்லாமல் தரையில் உணவை வைத்து மண்சோறு உண்கின்றனர், இன்னும் இதுபோலப் பல்வேறு முறைகளில் தங்களது உடலை வருத்திக்கொள்கின்றனர்.
ஆனால் இத்தகைய கடின முயற்சி எதுவும் இல்லாமலேயே தேவனது இரக்கத்தை நாம் பெறமுடியும். அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு, "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது" என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, கடினமான முயற்சிகளல்ல தேவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலே போதும், நாம் அவரது இரகத்தைப் பெறமுடியும்.
நமது அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அவரது சுமை மெதுவாயும், இலகுவாயும் இருக்கிறது என்று கூறவில்லையா? ஆம், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது" ( மத்தேயு 11 : 28-30 ) என்கின்றார் கிறிஸ்து.
தேவனுக்குப் பயந்து வாழ்வதுதான் அவர் கூறும் எளிதான வழி. தேவனுக்குப் பயப்படுதல் என்பது அவர் வெறுக்கும் தீமையான காரியங்களைச் செய்யாமல் இருப்பதுதான். "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
மேலும், பெருமையை விட்டு மனத் தாழ்மையோடு நாம் நடக்கும்போது தேவன் தனது கிருபையினை அளிப்பதால் நமது சுமை எளிதாகின்றது. "அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 )
இன்று பல கிறிஸ்தவர்களும்கூட பிற மத நண்பர்கள் செய்வதைப்பார்த்துத் தாங்களும் சில கடினமான உடலை வருத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மனிதர்கள் வேண்டுமானால் இத்தகைய செயல்களைப்பார்த்து பரிதாபம்கொண்டு இரங்கலாம், ஆனால் தேவனோ மனம்திரும்பிய தாழ்மையான உள்ளத்தைக்கண்டு மட்டுமே பரிதாபம் கொண்டு இரக்கம் காட்டுவார்.
நமது உடலை வருத்தாமல் ஆத்துமாவில் நமது செயல்களுக்காக வருந்துவோம். தேவனுக்குப் பயந்த ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையினை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
"சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்." ( எசேக்கியேல் 13 : 10 )
தேவனோடு நாம் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இன்று பொதுவாக இப்படித் தனிப்பட்ட தேவ ஐக்கியத்தில் வளர்ந்துள்ள விசுவாசிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். எனவே விசுவாசிகள் பலரும் தங்களைக்குறித்தும் தங்களது வாழ்கையினைக் குறித்தும் அறிந்திட கிறிஸ்துவின் ஊழியர்கள் என்று கூறிக்கொள்ளும் ஊழியர்களை நாடி ஓடுகின்றனர்.
தங்களிடம் வரும் விசுவாசிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறினால்தான் அவர்கள் மறுபடியும் தங்களை நாடி வருவார்கள், தங்கள் வருமானமும் பெருகும் என்பதால் இந்த ஊழியர்கள் மக்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக்கூறி அனுப்புகின்றனர். இதனையே இன்றைய தியான வசனம், "சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்" என்று கூறுகின்றது. ஒரு ஊழியர் மட்டுமல்ல, பெரும்பாலான ஊழியர்களும் இப்படியே தொடர்ந்து விசுவாசிகளை பொய்ச்சொல்லி ஏமாற்றுகின்றனர்.
இதனையே இன்றைய தியான வசனம் தொடர்ந்து, "ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்" என்று கூறுகின்றது. உண்மையான தேவ ஊழியன் மக்களது ஆத்தும பலவீனத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தவேண்டும். அவர்களது பாவங்களை வெளிப்படுத்திக்கொடுத்து மக்கள் மனம்திரும்ப வழி கூறவேண்டும். நாத்தான் தீர்க்கதரிசி இப்படித்தான் தாவீதின் பாவத்தை உணர்த்திக்கொடுத்து அவரை மனம் திரும்பச் செய்தார்.
ஆனால், இப்படிப்பட்ட ஊழியர்கள் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் இருப்பார்கள் என்று கருதுகின்றேன். எனது ஆரம்பகாலத்தில் ஆவிக்குரிய வாழ்வில் என்னை வழிநடத்திய இந்தியன் பெந்தேகோஸ்தே சபை (I.P.C) பாஸ்டர் ஜான்சன் டேவிட் அவர்கள் இப்படிப்பட்ட தீர்க்கதரிசன வரம்பெற்ற உண்மையுள்ள ஊழியராக இருந்தார்கள். அதாவது, இன்றைய தியான வசனத்தின்படி அவருக்கு சாரமில்லாத சாந்தைப் பூசத்தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். அவர் யாரையும் முகத்தாட்சணியம் இல்லாமல் கடிந்துகொள்வார். தவறை கண்டித்து எச்சரிப்பார். அவரது வழிநடத்துதல்தான் நான் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைய உதவியது. ஆனால், அவரைப் பலருக்குப் பிடிக்காது. காரணம், அவரது இந்தக் கண்டிப்பை அவர்கள் விரும்புவதில்லை.
அன்பானவர்களே, நாம் நமக்கு ஆறுதலும் ஆசீர்வாதமும் கூறி நம்மை மகிழ்விக்கும் ஊழியர்களையே நாடி ஓடுவோமானால் நாம் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறமுடியாது. ஆம், "இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்துபூசினவர்களுமில்லை. எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." ( எசேக்கியேல் 13 : 15, 16 )
இந்த வசனத்தின் எச்சரிப்பை நாம் கவனிக்கவேண்டும். அதாவது, ஊழியர்களை நாடி வந்த விசுவாசிகளாகிய சுவருமில்லை, அதற்குச் சாந்துபூசின ஊழியனுமில்லை என்று அழிந்துபோவார்கள். ஆம், சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்கின்றார் தேவனாகிய கர்த்தர். மிகக்கடினமான எச்சரிப்பல்லவா இது?
ஆவிக்குரிய வாழ்க்கை விளையாட்டல்ல; தேவனுடைய ஊழியம் பணம் சம்பாதிப்பதற்கும் மக்கள் கூட்டத்தைச் சேர்த்துத் தங்களைத் தாங்களே மகிமைப்படுத்தவுமல்ல. எச்சரிக்கையாக இருந்து மனம் திரும்புவோம். உண்மையான ஆவிக்குரிய அனுபவத்தோடு வளர்ந்திட தேவனோடு தனிப்பட்ட உறவினை வளர்த்துக்கொள்வோம். அதற்கு முதற்படியாக நமக்கு வழிகாட்ட ஏற்ற ஊழியர்களை தேவனே நமக்குக் கொடுக்க வேண்டுதல் செய்வோம்.
"ஆண்டவரே, நான் உம்மை அறியாத குருடனாக இருக்கின்றேன். எனக்கு வழிகாட்டும் உண்மையுள்ள ஆவிக்குரிய ஊழியரை எனக்குக் காண்பித்தருளும்" என வேண்டுதல் செய்வோம். அப்போது, "உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்" ( எரேமியா 3 : 15 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
"பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா." ( லுூக்கா 11 : 13 )
சாத்தானும் வேதாகமத்திலிருந்து வசன ஆதாரங்களைக் காண்பித்து மக்களைக் குழப்பமுடியும். இப்படித்தான் அவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே வேதாகம வசனங்களின் மூலம் சோதித்தான். ஆனால் இயேசு கிறிஸ்துவும் அவனுக்கு வசனங்களின்மூலமே பதிலடிகொடுத்தார்.
ஒரு குறிப்பிட்ட வேத வசனம் கூறப்பட்ட சூழ்நிலையைக் கவனிக்காமல் அவற்றை ஆதாரமாகக் கொள்வது; ஒரு வசனம் கூறப்படும் முழு உண்மையையும் பார்க்காமல் நமக்குச் சாதகமான பகுதிகளை மட்டும் வாசித்துப் பொருள்கொள்வது இவையே சாத்தானின் தந்திரம். அப்படிப் பெரும்பாலான ஊழியர்களாலும் மக்களாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வசனம்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய பின்வரும் வசனம்:- "மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( லுூக்கா 11 : 9 - 10 )
இந்த வசனம் நாம் எந்த உலக ஆசீர்வாதத்தினைக் கேட்டாலும் அதனைத் தேவன் தந்தருள்வார் எனும் பொருளில் பலராலும் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனம் கூறவரும் உண்மைதான் என்ன, இது எதற்காகக் கூறப்பட்டது என்பது இந்த வசனத்தைத் தொடர்ந்து வாசித்தால்தான் நமக்குப் புரியும். இந்த வசனத்தை இயேசு, "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா" என்று சொல்லி முடிக்கின்றார்.
அதாவது, நீங்கள் பரிசுத்த ஆவியை வேண்டி பரலோகத் தந்தையிடம் கேளுங்கள், பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் தேடுங்கள், அவர் உங்களுக்கு வேண்டுமென்று தொடர்ந்து தட்டுங்கள் என்கின்றார். அப்படி கேட்கும்போது பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? என்று கூறப்பட்டுள்ளது.
பரிசுத்த ஆவியானவரை நாம் வாழ்வில் பெறவேண்டும் எனும் வாஞ்சையுள்ளவர்களாக வாழவேண்டும் என இயேசு கிறிஸ்து கூறிய சத்தியத்தைத் திரித்து, நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் நமக்கானதாக எடுத்துக்கொண்டு முக்கியமான இறுதிப்பகுதியை விட்டுவிடுவது எத்தனை பெரிய ஏமாற்றுதல்!!!
வேதாகம வசனங்கள் நமது இவ்வுலக பரிசுத்த வாழ்க்கைக்கான வழியைக் காண்பித்து நாம் நித்திய ஜீவனை அடைந்திட உதவுகின்றனவேத் தவிர முழுவதும் உலக ஆசீர்வாதங்களுக்கானவை அல்ல. "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? இப்படிக் கூறியவர் உலக ஆசீர்வாதத்துக்காக கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்று கூறுவாரா? இயேசு கிறிஸ்து நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுபவரல்ல எனும் உண்மை நமக்குத் தெரியவேண்டாமா?
"நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிகிறீர்கள். விபச்சாரரே, விபச்சாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்." ( யாக்கோபு 4 : 3, 4 )
அன்பானவர்களே, வேதாகமத்தை நமது ஆன்மீக வளர்ச்சிக்கான தேவ வார்த்தைகளாக நாம் உட்கொள்ளவேண்டியது அவசியம். சாத்தானின் தந்திரத்துக்குப் பலியாகி வசனங்களை நமக்கு ஏற்றாற்போல குறுக்கியும் நறுக்கியும் பொருள்கொள்ளாமல் அவை கூறப்பட்ட உண்மையின்படி புரிந்துகொண்டு வாழ்வாக்குவோம்.
"துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் எனப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்களாகவும் ஒன்றுமில்லாதவர்கள் எனப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்." ( 2 கொரிந்தியர் 6 : 10 )