DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Tuesday, November 08, 2022

தேவனின் மன்னிப்பு

 ஆதவன் 🖋️ 651 ⛪ நவம்பர் 09,  2022 புதன்கிழமை

"இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." ( எசேக்கியேல் 20 : 44 )

மனிதர்களது பாவங்களுக்கு பல்வேறு தண்டனைகள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மிக இரக்கமற்ற தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால், கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என பழிவாங்கப்படவேண்டும். இதனை நாம் லேவியராகமத்தில், "நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினது போல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்." ( லேவியராகமம் 24 : 20 ) என வாசிக்கின்றோம்.  அங்கு பாவங்களுக்குத் தண்டனைதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர மன்னிப்பு பற்றி கூறப்படவில்லை. 

ஆனால், பழைய ஏற்பாட்டின் காலத்திலும்கூட மன்னிப்பு இருந்தது. தேவனை அக்காலத்து மக்கள் நெருங்கிடத் தயங்கினர்; பயப்பட்டனர். ஆனாலும் தாவீது, மற்றும் தீர்க்கதரிசிகள்,  உண்மையான பக்தர்கள் தேவனது மன்னிக்கும் குணத்தையும் இரக்கத்தையும்  அறிந்திருந்தனர். தேவனின் மன்னிக்கும் குணத்தை அறிந்திருந்த தாவீது, "ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்." ( சங்கீதம் 86 : 5 ) என்று கூறுகின்றார்.  ஆனால் பழைய ஏற்பாட்டு பாவ மன்னிப்பு முறைமை என்பது ஆடு அல்லது காளைகளை பலியிட்டு இரத்த நிவாரணம் மூலமே கிடைத்தது. 

இன்றைய வசனத்தில் எசேக்கியேல் மூலம் தேவன் கூறுகின்றார், "உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்". என்கின்றார். ஆம், இயேசு கிறிஸ்துவின் கிருபையின் பிரமாணத்துக்கு இணையான வசனம் இது.  அதாவது நமது பாவங்களுக்குத் தக்கபடி தண்டனை கொடாமல் கிருபையால் அவற்றை மன்னித்து இரங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்  என்கின்றது இந்த வசனம். 

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வந்து பாடுபட்டு இரத்தம்சிந்தி மரித்து உயிர்த்து நமக்கு பாவ மன்னிப்பை எளிதாக்கினார். அவர் பூமியில் இருக்கும்போதே சொன்னார்,  "பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்."( லுூக்கா 5 : 24 )

நாம் அனைவருமே பாவிகள்தான். நமது பாவங்களை அவர் எண்ணுவாரென்றால் அவர்முன் யாரும் நிற்க முடியாது. எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." என்று. 

ஆம், கிறிஸ்துவே ஆண்டவரும் மேசியாவுமாயிருக்கிறார் என்பதற்கு இன்றைய  வசனம் மேலும் ஓர் சான்றாக இருக்கின்றது. கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு  மீட்பு அனுபவம் பெறும்போது இந்த சத்தியம் நமக்குத் தெளிவாக விளங்கும். நமது பாவங்களை அவர் கிருபையாய் மன்னித்து மறுபடி பிறந்த அனுபவத்தை நமக்குத் தரும்போது, இயேசுவே கர்த்தர் என்று நாம் அறிந்து கொள்ள முடியும். 

அன்பானவர்களே, எந்த பாவங்கள் நம்மிடம் இருந்தாலும் அவரிடம் அறிக்கையிடுவோம். அவரிடம் நாம் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. நமது மீறுதல்களை அவர் அறிந்திருக்கின்றார். உண்மையான மனதுடன் நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோமா என்பதையே அவர் எதிர்பார்க்கின்றார்.  ஆதாமைப் போல  நமது மீறுதல்களுக்கு மற்றவர்களையும் சூழ்நிலைகளையும் பழி சொல்லாமல் அவரிடம் மன்னிப்பு வேண்டுவோம்.   கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையாய் அவற்றை மன்னித்து தானே கர்த்தர் என்பதை நமக்கு உறுதிப்படுத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: