கொழுப்பு

 ஆதவன் 🖋️ 664 ⛪ நவம்பர் 22,  2022 செவ்வாய்க்கிழமை

"இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே." ( மத்தேயு 13 : 15 )

மனிதனது உடலில் அளவுக்கதிகமாக கொழுப்புச் சேர்வது பல்வேறு நோய்களை உருவாகும். குறிப்பாக இருதய நோய் ஏற்பட கொழுப்பே முக்கிய காரணமாய் இருக்கின்றது. இங்கு இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய கொழுப்பைக்  குறித்துக் கூறுகின்றார். ஆவிக்குரிய காரியங்களைக் கேட்டு உணராமல் இருக்கின்ற மக்களைப்பார்த்து அவர்கள் இருதயம் கொழுத்திருக்கின்றது என்கின்றார். 

கொழுப்பு இரத்த ஓட்டத்தைத் தடைசெய்வதுபோல ஆவிக்குரிய கொழுப்பு தேவ சத்தியங்களை அறியக் கூடாதபடிக்கு மனிதர்களது இருதயத்தைத் தடைசெய்கின்றது. இன்றைய வசனத்தை இயேசு கிறிஸ்து ஏசாயா கூறிய வார்த்தைகளிலிருந்து எடுத்துப் பேசுகின்றார். ( ஏசாயா 6 : 10 )

உடலில் கொழுப்புத் தேங்கிடக் காரணம் நாம் உண்ணும் உணவு முறைகளும் சரியான உடல் உழைப்பு இல்லாததும். அதுபோல இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்வைக் கெடுக்கும் பாவ காரியங்களை நாம் செய்வதுதான் தேவையற்ற உணவை உண்பது. ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபாடில்லாமல் வாழ்வதே உடல் உழைப்பு இல்லாமல் வாழ்வது. இதனால் நமது இருதயத்திலும் ஆன்மாவிலும் கொழுப்புச் சேர்ந்து  விடுகின்றது. 

இப்படிச் சேரும் கொழுப்பு என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதையே இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  அதாவது ஆத்துமாவில் கொழுப்புச் சேர்வது கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், தேவன் நம்மை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக இருதயத்தைக் கொழுக்கும்படிச் செய்துவிடுகின்றது.  


இதன் பாதிப்புத்தான் காதால் மந்தமாய்க் கேட்பதும் நமது கண்களை மூடிப்போடுவதும். அதாவது, ஆவிக்குரிய மேலான சத்தியங்களை அறியாமலும் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முடியாமலும் செய்துவிடுகின்றது. 

அன்பானவர்களே, நமது இருதயத்தைக் கொழுக்க வைத்து ஆத்தும நோயை உருவாகும் இந்தக் கொழுப்பை நாம் அகற்றவேண்டியது அவசியம். உடல் கொழுப்பை அகற்றிட, பைபாஸ், ஆஞ்சோபிளாஸ்டி சிகிர்ச்சைகள் உள்ளன. அந்தச் சிகிர்சைகள் அதிகப் பணச் செலவு உள்ளவை. ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இலவசமாய் இந்தக் கொழுப்பை அகற்றுகின்றார்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் மீட்பு நம்மை புதிய மனிதனாக்கும். ஆத்தும கொழுப்புகள் மறைந்து நாம் அவரது மகிமையைக் காணும்படி நமது கண்களையும் அவரது குரலைக் கேட்டு நடக்கும்படி நமது காதுகளையும் திறந்துவிடும். ஆம், மீட்பு அனுபவமே நமது ஆத்தும கொழுப்பை அகற்றும். 

ஆனால், சிகிர்ச்சைக்குப்பின்னால் எப்படி ஒரு பத்திய வாழ்க்கை வாழ்கின்றோமோ அதுபோன்ற ஒரு ஆவிக்குரிய பத்திய வாழ்க்கையைத் தொடர்ந்து நாம்  வாழ வேண்டியது அவசியம். அத்தகைய வாழ்க்கை வாழ வாழ நமது கண்களும் காதுகளும் மேலும் தூய்மையடைந்து கொழுத்த இருதயம் லெகுவான இதயமாக மாறி அதில் தேவன் வந்து தாங்கும் ஆலயமாக மாறிட எந்தத் தடையும் இல்லாத ஒன்றாக மாறிடும். 

இதற்கு, முதலில் நமது இருதயத்தில் கொழுப்பு இருப்பதை உணர்ந்துக்ள்ளவேண்டும்; அது மறையவேண்டும் எனும் ஆர்வம் வேண்டும்,  சிகிர்சைக்கு மனப்பூர்வமாக முன்வரவேண்டும். அப்போது மட்டுமே நாம் குணமாக முடியும்.  அன்பானவர்களே,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது கொழுப்புச் சேர்ந்த  இருதயத்தில் இலவச  பைபாஸ், ஆஞ்சோபிளாஸ்டிசெய்திட ஒப்புக்கொடுப்போம். ஆவிக்குரிய தெளிவுள்ள புதுவாழ்வு பெறுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்