தீர்ப்பு

 ஆதவன் 🖋️ 659 ⛪ நவம்பர் 17,  2022 வியாழக்கிழமை

"தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்." ( யோவான் 7 : 24 )

தோற்றத்தின்படி தீர்ப்பு செய்தல் என்பது ஒருவர் வகிக்கும் பதவி, சமுதாயத்தில் அவர் வகிக்கும் மதிப்புமிக்க நிலைமை,  அவரது பணம், ஆடை அணிகலன்கள் இவற்றைப்பார்த்து, அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புச் சொல்வதைக்குறிக்கின்றது. இன்று நமது நாட்டில் பெரும்பாலான தீர்ப்புகள் இப்படியே உள்ளன. நீதிமன்றங்களின்மேல் மக்களுக்குள்ள மதிப்பு, மரியாதை குறைந்துகொண்டே வருகின்றது. காணம் மேற்படி நாம் கூறியபடி, தோற்றத்தின்படி நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதுதான். 

இதுகுறித்து சமீபத்தில் ஒரு கிண்டலான செய்திப் பதிவினை நான் பார்த்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, "முன்பெல்லாம் தீர்ப்பு வெளியான பின்னர் குற்றம்ச்சாட்டப்பட்டவர் நல்லவரா கெட்டவரா என்று தெரியவரும். ஆனால், இப்போது தீர்ப்பு வந்தபின்னர்தான் அந்த நீதிபதி நல்லவரா கெட்டவரா என்று தெரிய வருகின்றது" என்று. 

மனிதர்கள் நம்மால் எது நீதி, எது நியாயம் என்று முற்றிலும் சரியாகத் தெரியாது. நாம் நமது கண் கண்டபடியே ஒருவரை நியாயம் தீர்க்கின்றோம். ஆனால், தேவனோ எதார்த்ததோடு நியாயம் தீர்ப்பார். ஒருவர் செய்த  செயல்களைப் பார்த்து அப்படியே அவர் தீர்ப்பிடுவதில்லை. அந்தச் செயல் செய்யப்பட்டதன் நோக்கத்தையும் அவர் பார்க்கின்றார். எனவேதான் ஏசாயா கூறுகின்றார், "அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து..." ( ஏசாயா 11 : 3, 4 ) என்று. 

இயேசு கிறிஸ்து கூறினார், "மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்." ( லுூக்கா 6 : 37 ) மற்றவர்களது எதார்த்த நிலைமை நமக்குத் தெரியாது. அவர்கள் செய்த செயல் நமது பார்வையில் தவறு போலத் தெரியலாம். ஆனால், தேவன் நம்மைப்போல மனிதர்களை பார்ப்பவரல்ல. எனவேதான் மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் என்று கூறுகின்றார்.  

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை நீதித்துறை சம்பந்தமான பதவிகளில் நீதிபதியாகவோ அல்லது வழக்கறிஞராகவோ இருந்தால் இந்த விஷயத்தில் அதிக கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார்,  "ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும், அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!" ( ஏசாயா 10 : 1, 2 )

ந்த வசனத்தில் "ஐயோ" எனும் வார்த்தை தேவனது சாபத்தைக் குறிக்கின்றது. எச்சரிக்கையாய் இருப்போம். தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல் நீதியின்படியே தீர்ப்பிடுவோம் இந்த உலகத்தில் பணமும் பதவியும் கிடைக்கின்றது என்பதற்காக அநியாயத் தீர்ப்புகளை எழுதி நமது சந்ததிகளுக்குப் பணத்தோடு  சாபத்தையும் நாம் சம்பாதித்து வைத்துவிடக் கூடாது.  

மேலும், அன்றாட உலக காரியங்களில் நாம் பலவித மக்களையோடு பழக்கவேண்டியுள்ளது. பல வேளைகளில் சிலரது செயல்கள் தவாறுபோல நமக்குத் தெரியலாம். அதற்காக அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு செய்யவேண்டாம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக." ( ரோமர் 14 : 13 )

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்