DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Thursday, May 09, 2024

"உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போல இருக்கும்."

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,191     💚 மே 13, 2024 💚 திங்கள்கிழமை 💚

"பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." ( ஏசாயா 48 : 17 )

நமது தேவன் உலக ஆசீர்வாதங்களுக்கு மட்டும் உரியவரல்ல; மாறாக, மறுவுலக வாழ்க்கைக்கும் நித்திய ஜீவனுக்கும் வேண்டிய வழியினை நமக்குக் காண்பித்து நடத்துகின்றவர். அதுவே நமது ஆத்துமாவுக்கு உபயோகரமானது. இதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." என்று. 

நமக்கு ஆவிக்குரிய வழியைப் போதித்து நடத்துகின்றவர் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர்தான். நமது உபயோகத்துக்காக தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 )

மட்டுமல்ல, "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து.

எனவே, இன்றைய தியான வசனம் கூறுவது போல, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற  தேவனாகிய கர்த்தர் காட்டும் வழிகளில் நடக்க நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.  அப்படிக்  கீழ்படிதலுள்ளவர்களாக நாம் நடக்கும்போது நமக்குப் பூரண சமாதானம் கிடைக்கும். இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." ( ஏசாயா 48 : 18 )

நதியானது அமைதியாக ஓடுகின்றது. மட்டுமல்ல, அதன் கரையோரத்திலுள்ள மரங்களை செழித்து வளரச் செய்கின்றது. அதுபோலவே தேவனது ஆவியானவர் காட்டும் வழியில் நாம் நடக்கும்போது நமது வாழ்க்கை அமைதியானதாகவும் மற்றவர்களுக்கு உதவக்கூடியதாகவும் இருக்கும். மட்டுமல்ல, "உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." என்று ஏசாயா கூறுகின்றார். அதாவது கடலில் அலைகள் ஓய்வில்லாமல் இருப்பதுபோல நமது நீதி அழிவில்லாத நித்திய நீதியாக இருக்கும்.  

ஆம் அன்பானவர்களே, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற தேவனாகிய கர்த்தரின் குரலுக்குச் செவிசாய்த்து நடப்போமானால் அதுவே நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும். உலக ஆசீர்வாதங்களுக்கு முன்னுரிமைகொடுத்து ஜெபிக்காமல் இத்தகைய ஆவிக்குரிய தேவ வழிநடத்துதலுக்கு நாம் ஜெபிக்கும்போது தேவன் நம்மேல் மகிழ்ச்சிக்கொள்வார். சமுத்திரத்தின் அலைகள்போல முடிவில்லாத நீதி நம்மைச் சூழ்ந்துகொள்ளும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

No comments: