முதுகை எனக்குக் காட்டினார்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,198      💚 மே 20, 2024 💚 திங்கள்கிழமை 💚

"முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செவிகொடாமற்போனார்கள்." ( எரேமியா 32 : 33 )

கர்த்தரது வார்த்தைகளுக்குச் செவிகொடாமல் இருப்பது என்பது நமது முதுகை அவருக்குக் காண்பிப்பதுபோல என்று இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் ஒரு நண்பனிடமோ, உயர் அதிகாரியிடமோ பேசும்போது எப்படி நிற்போம் என்று சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் பேசும்போது நாம் மறுபுறம் திரும்பி நமது முதுகைக் காட்டிக்கொண்டிருப்போமானால் எப்படி இருக்கும்? அவர்களிடம் நாம் ஏதாவது பெறமுடியுமா? ஆனால் பெரும்பாலான மக்கள் இப்படியே இருக்கிறார்கள் என்று கூறுகின்றார் கர்த்தர். 

சிலர் தங்களுக்கு விருப்பமில்லாதவர்களை எதிரில் சந்தித்தால் தங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். சில வேளைகளில் நாம் அவர்கள் நம்மைப் பார்ப்பார்கள் பேசலாம், சிரிக்கலாம் என்று எண்ணுவோம்,  ஆனால் அவர்கள் தொலைவிலிருந்தே நம்மைப் பார்த்து விட்டு அருகில் வந்ததும் நம்மை பார்க்காததுபோல முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். 

இதுபோலவே நாம் தேவனது கற்பனைகளைப் புறக்கணிக்கும்போது அவருக்குச் செய்கின்றோம். நமது முதுகை அவருக்குக் காட்டுகின்றோம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. எனவே தேவன் சொல்கிறார் "என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள்." ( உபாகமம் 32 : 20 )

மனிதர்களை நாம் புறக்கணித்துவிடலாம். ஆனால் எப்படியேனும் ஒரு சூழலில்  நாம் தேவனைத் தேடித்தான் ஆகவேண்டும். இப்படி நமது முதுகை அவருக்குக் காட்டியபடி வாழ்ந்துவிட்டு நமக்குத் தேவை ஏற்படும்போது மட்டும் அவரைத் தேடுவோமானால் அவரும் தனது முகத்தை நமக்கு மறைப்பேன் என்கிறார் தேவன். ஆம் அன்பானவர்களே, நமது ஜெபங்களைத் தேவன் கேட்காமல் இருக்க இதுதான் காரணம்.

"அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதனால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்." ( உபாகமம் 31 : 17 )

கர்த்தரது இருதயத்துக்குப் பிரியமானவனாக வாழ்ந்த தாவீது கூறுகின்றார், "என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று." ( சங்கீதம் 27 : 8 ) அதாவது நான் எப்போதும் உமது முகத்தையே தேடுவேன். காரணம், என் இருதயம் அப்படித் தேடும்படி என்னிடம் சொல்லிற்று என்கிறார். 

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே." ( எபிரெயர் 3 : 15 ) "ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்." ( எபிரெயர் 3 : 7, 8 )

எனவே அன்பானவர்களே, நமது  முதுகை அவருக்குக் காண்பித்து அவரை அவமதிக்காமலும்   நமது இருதயத்தைக் கடினப்படுத்தாமலும் நமது முகத்தை தேவனுக்குக் காண்பித்து வாழ்வோம்.  தாவீது கூறுவதுபோல, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று நமது இருதயமும் சொல்லக்கடவது. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்