கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,214      💚 ஜூன் 05, 2024 💚 புதன்கிழமை 💚


"கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" (கொலோசெயர் 3:11)

இந்த உலகத்திலுள்ள அனைவரும் ஒரே தேவனுடைய பிள்ளைகளே. யாராக இருந்தாலும், எந்த மதம், ஜாதி, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் எல்லோரும் ஒரே பிதாவின் பிள்ளைகளே. அதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்றார். 

இன்று நாம் கிறிஸ்துவை அறிந்து ஆவிக்குரிய ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அப்படி நாம் வாழ்வதால் நாம் மட்டுமே கடவுளின் மக்கள் என்று எண்ணிவிடக்கூடாது. எல்லோரும் அவரது பிள்ளைகளே. இன்று இந்த அறிவும் தெளிவும் இல்லாததால்தான் மற்றவர்களை அற்பமாக பார்க்கும் நிலைமை உள்ளது. ஆனால் நாம் அப்படி இருக்கலாகாது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். எனவேதான் தொடர்ந்து அவர் கூறுகின்றார்:-

"ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (கொலோசெயர் 3:12, 13)

ஒரு தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். நான்குபேருமே அவருக்கு ஒன்றுதான். ஆனால் நான்கு பிள்ளைகளும் வெவ்வேறான குணங்கள் உள்ளவர்களாகவும், சிலர்  தகப்பனுக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரே தகப்பனுக்குப் பிறந்த சகோதரர்கள். எனவேதான் பவுல் கூறுகின்றார், "ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."

இந்த எண்ணமும் பவுல் குறிப்பிடும் சுபாவங்களும் இல்லாததால்தான் மத வெறுப்புகளும் சண்டைகளும் ஏற்படுகின்றன. கிறிஸ்தவர்களுக்குள், கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒற்றுமை இல்லாததற்கும் இதுவே காரணம். 

சிலர்  சபை ஒருங்கிணைப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்து பல்வேறு சபையினைச் சார்ந்த ஊழியர்களை அழைப்பதுண்டு. இது நல்ல ஒரு முயற்சிதான். ஆனால் அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு யாரை நியமிக்கலாம் என்று முடிவெடுக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது அனைவருமே தாங்கள் சார்ந்துள்ள சபை ஊழியர்களே தலைமை இடத்துக்கு வரவேண்டும் என்று எண்ணுகின்றனர். எனவே இத்தகைய பல கூட்டமைப்பு முயற்சிகள் ஒரு சில மாதங்களிலேயே தோல்வியில் முடிவடைந்துவிடுகின்றன.    

சபைகளில் மட்டுமல்ல, ஊர்களில் பிரச்னை ஏற்படுவதற்கும் இத்தகைய பெருந்தன்மைக் குணமில்லாமையே காரணம். ஆம் அன்பானவர்களே, பவுல் அப்போஸ்தலர் குறிப்பிடுவதுபோல "கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" எனும் எண்ணம் வரும்போதுதான் அனைவரையும் மதிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இதனையே கிறிஸ்து விரும்புகின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்