சூழ்நிலைகளை மறந்து கர்த்தரையே தியானிப்போம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,215     💚 ஜூன் 06, 2024 💚 வியாழக்கிழமை 💚

"என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்." ( சங்கீதம் 63 : 6 )

பொதுவாக இரவு நடுச்சாமத்தில் விழிக்கும்போது மனிதர்களது நினைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று நாம் எண்ணிப்பார்ப்போம். நாம் கடன் தொல்லையால் அவதிப்படும்போது நமக்குக் கடன்கொடுத்தவர்களது முகங்களும் அவர்கள் நமக்கு எதிராகப் பேசிய பேச்சுக்களும் நமக்கு நினைவுக்குவரும். 

கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும்போது மருத்துவர்கள் கூறிய வார்த்தைகளும், நமது குடும்பத்தைப்பற்றிய எண்ணமும் நம்மை வருத்தமுறச்செய்யும். காதல் வசப்பட்டவர்களுக்குத் தங்களது காதலர்களின் முகமும் அவர்களது அன்பான பேச்சுகளும் நினைவுக்கு வரும். ஆனால் இன்றைய தியான வசனத்தில் தாவீது , இராச்சாமத்தில் அவர் தேவனை நினைத்துத்  தியானிப்பதாகக் கூறுகின்றார்.

அன்பானவர்களே, தாவீது இந்த வசனத்தை பஞ்சு மெத்தையில் அமர்ந்துகொண்டு எழுதவில்லை. மாறாக மிகுந்த உபத்திரவத்தின் மத்தியில், சுகமாகப்   படுப்பதற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்துகொண்டு எழுதுகின்றார். இதனையே வறண்டு தண்ணீரற்ற பாலை நிலத்தில் நடுச்சாமத்தில் அவர் தேவனை நினைத்துத் தியானிப்பதாகக் இன்றைய தியான சங்கீதத்தின் முதல் வசனமாக அவர் கூறுகின்றார்:-

"தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது."( சங்கீதம் 63 : 1 )

நமது வாழ்க்கையினை நாம் நினைத்துப் பார்ப்போம். நிச்சயமாக இதை வாசிக்கும் எவரது வாழ்க்கையும் இப்படிப்பட்ட வீடற்று பாலை நிலத்தில் வாழக்கூடிய வாழ்க்கையாக இருக்காது என்று எண்ணுகின்றேன். ஆனால் ஒருவேளை நமக்குக் கடன்களும் நோய்களும் இதரப் பிரச்சனைகளும் இருக்கலாம். ஆனால் நாம் பிரச்னைகளையே நோக்கிடாமல் தாவீதைப்போல சூழ்நிலைகளை மறந்து கர்த்தரையே நோக்கிப் பார்க்க இன்றைய தியான வசனம் நமக்கு வழி  காட்டுகின்றது.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் இதுபோலவே இருந்தனர். அவர்கள் சிறைச்சாலைச் சூழ்நிலையையும் தாங்கள் கைதியாக அடைபட்டிருப்பதையும் எண்ணாமல் நடுச்சாமத்தில் தேவனைப் புகழ்ந்து பாடி ஜெபித்தார்கள். 

"நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 ) என்று வாசிக்கின்றோம்.

ஆம் அன்பானவர்களே, நமது படுக்கையில் விழிப்பு ஏற்படும்போதெல்லாம் நமது பிரச்சனைகளை எண்ணிக் கலங்காமல்  தேவனையே நினைத்துத் தியானிப்போம். பவுல் அப்போஸ்தலரும் சீலாவும் அப்படி ஜெபித்தபோது "சிறைச்சாலைக் கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." என்று கூறப்பட்டுள்ளதுபோல நமது சிறையிருப்பின் வாழ்க்கையும் கட்டுக்களும் நிச்சயம் கழன்றுபோகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்