தேவனுக்கு முன்பும் மனிதர்களுக்கு முன்பும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,205     💚 மே 27, 2024 💚 திங்கள்கிழமை 💚

"நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது." ( லுூக்கா 16 : 15 )

நமது பேச்சிலும் செயலிலும் நாம் உண்மையுள்ளவர்களாகக் காணப்படவேண்டியது அவசியம். நமது பேச்சுக்கள்  இயேசு கிறிஸ்து கூறியதுபோல ஆம் என்றால் ஆம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் இருக்க வேண்டியது அவசியம். "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்." ( மத்தேயு 5 : 37 ) என்று அவர் கூறவில்லையா?

ஆனால் இன்று மக்களில் பலரும் பிறர் தங்களை மேன்மையாகவும் நீதிமானாகவும் எண்ணவேண்டும் என்பதற்காக பல்வேறு உபாயங்களைக் கைக்கொள்ளுகின்றனர். செய்யும் ஒவ்வொருசெயலிலும் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். எனவே மக்களில் பலரும் இத்தகைய கபட மனிதர்களை நீதிமான்களாக மேன்மையாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் தேவன் சொல்கின்றார், "மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது."
 
இன்று பல அரசியல்வாதிகளது வாழ்க்கையினை நாம் பார்க்கும்போது அவர்களது செயல்பாடுகள் மனிதர்களாகிய நமக்கே அருவருப்பாக இருக்கின்றதே!!! ஊழலும் ஏமாற்றும் செய்து சொத்துக்களைத் சேர்த்து வைத்துள்ள பலர் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின்  ஆட்சிமாறி அடுத்த ஆட்சியாளர்கள் வந்து அவர்கள்மேல் ஊழல் வழக்குத் தொடரும்போது கள்ளத்தனமாக நெஞ்சுவலி வருவதாக நடிப்பதும், பழிவாங்கும் நோக்கத்துடன் தன்மேல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என அறிக்கைகள் வெளியிடுவதும்,   நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வழக்குகளிலிருந்து விடுபடுவதும், இறுதியில் "நீதி வென்றது" என அறிக்கையிட்டு முழங்குவதும் நாம் காண்பதுதான். 

ஆம் அன்பானவர்களே, "நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்." ( மத்தேயு 12 : 35 ) 

இத்தகைய பொல்லாத மனிதர்களைப்  பார்த்துத் தேவன் கூறுகின்றார்,  "நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்" என்று. இவை தேவன் கூறும் வெறும் வார்த்தையல்ல, மாறாக இவர்களுக்குத் தண்டனை உண்டு என்று பொருள்படுகின்றது. 

இந்த மனிதர்கள் இவையெல்லாம் ஏன் செய்கின்றார்கள்? மக்கள்முன் தங்களை நீதிமான்கள் எனக் காட்டுவதற்கு. இவர்களது இந்தச் அவலட்சணச் செய்கைகளை மக்களில் பலரும்  அறிந்திருந்தாலும் அவர்களை மேன்மையாகவே கருதுகின்றனர். ஆனால் தேவன் இத்தகைய மனிதர்களையும் அவர்களை புகழ்ந்து துதிபாடிக் கொண்டிருப்பவர்களையும் அருவருப்பாகவே பார்க்கின்றார். 

எனவே நாம் தேவனுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் உண்மையும் உத்தமமும் உள்ளவர்களாக வாழவேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. தானியேலைச் சிங்கக்கெபியினுள் போட்டபோது சிங்கங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை. அதற்குக் காரணம் அவர் தேவனுக்கு முன்பும் மனிதர்களுக்கு முன்னும் உண்மையுள்ளவராக, குற்றமற்றவராக வாழ்ந்துதான். இதனைத் தானியேல் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை" ( தானியேல் 6 : 22 )

ஆம் அன்பானவர்களே, தேவனுக்கு முன்பும் மனிதர்களுக்கு முன்பும் நீதியுள்ளவர்களாக வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்