ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறது

 ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,189       💚 மே 11, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 7 )

சபைகளில் முக்கியமான நேரம் பிரசங்க நேரமாகும். ஆனால் பெரும்பாலும் பல பாரம்பரிய சபைகளில் விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் பிரசங்க வேளையை அலட்சியப்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆவியின் அபிஷேகம் இல்லாத பல ஊழியர்களின் உப்புச்சப்பற்ற பிரசங்கங்கள். 

ஒரு ஊழியன் ஆவியின் அபிஷேகத்தோடு பரிசுத்த ஆவியானவரின் தொடர்பில் இருக்கும்போதுதான் அவனால் வல்லமையான ஆவிக்குரிய செய்தியினைக் கொடுக்கமுடியும்.  ஆனால், பாரம்பரிய சபைகளில் ஒவ்வொரு நாளுக்கென்றும் ஏற்கெனவே குறிக்கப்பட்ட வேத வசனங்களை வாசித்து போதகர்கள் செய்திகளைக் கொடுக்கின்றனர். அதிலும் பலவேளைகளில் வாசித்த வேத வசனத்துக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத உலக காரியங்களை அரசியல்வாதிகள் பேசுவதுபோல பேசி மக்களை நோகடிக்கின்றனர். 

ஆவியானவர் ஒரு மனிதனில் இருந்து செயல்படும்போது அந்த நாளுக்கு ஏற்ற செய்திகளை தேவன் கொடுப்பார். அப்படிக் கொடுக்கும் செய்தி தேவனே அளிக்கும் செய்தியானதால் மக்களது இருதயங்களைத் தொடுவதாக இருக்கும்.  ஆவியானவரே அந்தந்த நாளுக்கான செய்தியை போதகர் வழியாகக் கொடுக்கின்றார் என்பதனை எனது வாழ்வில்  தேவன் எனக்குப் புரியவைத்தார். 

நாகர்கோவிலிலிருந்து கொட்டாரம் சபைக்கு பேருந்தில் நான் பயணம்செய்யும்போது அன்று எந்த வசனத்தை சபையின் போதகர் எடுத்துக் பிரசங்கிக்கப்போகிறார் என்பதனை தேவன் வெளிப்படுத்தித் தந்தார். அந்தப் போதகருக்கும் அவரது தனிப்பட்ட ஜெபத்தில், "நீ இன்று இந்த வசனத்தை எடுத்து பிரசங்கம்பண்ணு" என தேவன் காண்பித்துள்ளார். இருவருக்கும் ஒரே வசனத்தை தேவன் வெளிப்படுத்தி  இதுவே மக்களுக்கான இன்றைய செய்தி என்று கூறியது, ஆவியானவரே மக்களுக்கான செய்தியைக் கொடுக்கின்றவர் என்பதனை விளக்குகின்றதல்லவா? 

இரண்டு நாட்கள் இந்த அனுபவத்தைத் தேவன் எனக்குக் கொடுத்தார். இரண்டு நாட்களும் அதேபோல அந்த ஊழியர் தேவன் எனக்குக் காண்பித்த வசனத்தை எடுத்துப் பிரசங்கித்தார்.  மனிதர்கள் கொடுப்பதல்ல இறைச்செய்தி ஆவியானவர் வெளிப்படுத்தி மனிதர்கள் மூலம் கொடுப்பதே இறைச்செய்தி.

இப்படி "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது கேட்க மனதுள்ளவன் கேட்கட்டும் என்கிறார் தேவன். தேவன் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டார். விருப்பமுள்ளவன் கேள், அப்படிக் கேட்டால் "அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்." என்கின்றார் தேவன். 

நாம் உணவு சாப்பிடச் செல்லும்போது எந்த ஹோட்டலில் சிறப்பான உணவு கிடைக்கும் என்று பார்த்துப் பார்த்து உண்ணச் செல்கின்றோம். ஆனால் ஆவிக்குரிய உணவினை உண்பதற்கு அலட்சியம் காட்டுகின்றோம். ஆவியானவர் சொல்லுகிறதைக் கேட்பதற்குக் கருத்துள்ளவர்களாக வாழ்வோம். அப்படி ஆர்வமுள்ளவர்களாக வாழும்போதுதான்  தேவன் நமக்கு அரிய பல காரியங்களை வெளிப்படுத்தித் தருவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்