என் ஜனங்களோ மதியற்றவர்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,213    💚 ஜூன் 04, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்". ( எரேமியா 4:22)

ஆதிகாலமுதல் தேவன் பல்வேறு விதங்களில் மனிதர்களிடம் இடைபட்டுக்கொண்டிருக்கின்றார்.  ஏதேனில் ஆதாம் ஏவாளோடு உலாவிய தேவன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களோடும்  இடைப்பட்டார். பின்னர் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தி அவரோடு பேசி இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்.  யோசுவா, சாமுவேல், பல்வேறு நியாதிபதிகள், அரசர்கள் மூலம் தனது மக்களை நடத்தினார்.  ஆனாலும் மக்கள் அவரை அறியவோ, அறிந்துகொள்ளவேண்டுமென்று விருப்பப்படவோ இல்லை. 

தேவன் இஸ்ரவேல் மக்களை பல்வேறு விதமாக நேசித்து நடத்தியும் அவர்கள் மீண்டும் மீண்டும் வழிவிலகி நடந்து தேவனைத் துக்கப்படுத்தினர். எனவே அவர் கூறுகின்றார், "என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை"

இன்றைய வசனம் பழைய ஏற்பாட்டுக்கால மக்களைக்குறித்து கூறப்பட்டிருந்தாலும் இதே நிலைமைதான் இன்றும் தொடர்கின்றது. பொதுவாக பலரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டாலும் தேவனை அறியவேண்டும் எனும் உணர்வோடு செல்பவர்கள் வெகு சிலரே. பெரும்பாலானோர் தேவனிடமிருந்து உலக நன்மைகளைப் பெறுவதற்கே முன்னுரிமைகொடுத்து ஆலயங்களுக்குச் செல்கின்றனர். 

மக்கள் இப்படித் தேவனை அறியாதிருப்பதால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதனை அப்போஸ்தலரான பவுல்,  "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 ) என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, மனிதர்களது கேடான சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் காரணம் தேவனை அறியாமல் இருப்பதுதான்.

இப்படித் தேவனை அறியாதிருப்பதால் பலரும் பல்வேறு பக்திச் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் அவர்களில் உள்ளான மாறுதல்களைக் காண முடிவதில்லை.  ஆம், இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, "பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்". 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் தனிப்பட்ட முறையில் அறிந்தால் மட்டுமே நம்மில் சுபாவமாற்றம் ஏற்பட முடியும். எனவே, தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமும் அதற்கான ஆன்மீகத் தேடுதலும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம்.  அப்படித் தேடும்போது மட்டுமே நாம் அவரைக் கண்டுபிடிக்கமுடியும்.  அப்படிக் கண்டுபிடிக்கும்போது மட்டுமே நமது குணங்களில் மாற்றம் ஏற்படும். 

நம்மை யாராவது அறிவுகெட்டவனே / அறிவுகெட்டவளே என்று கூறிவிட்டால் நமது மனம் எவ்வளவு வேதனைப்படும்? ஆனால் அவரை நாம் அறிய முயலாவிட்டால் தேவனும் நம்மைப்பார்த்து அப்படிதான் கூறுவார்.  "என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை."

நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து, "தேவனே உம்மை எனக்கு வெளிப்படுத்தித்தாரும்; நான் உமது மகனாக, மகளாக வாழ விரும்புகின்றேன்" என்று உண்மையான மனதுடன் ஜெபிப்போம்.  "ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( மத்தேயு 7 : 8 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.   

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                      

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்