பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,212    💚 ஜூன் 03, 2024 💚 திங்கள்கிழமை 💚

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 )

நித்திய ஜீவனைக்குறித்து வேதத்தில் பல்வேறு இடங்களில் நாம் வாசித்தாலும் இன்றைய தியான வசனத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறுவது நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். அதாவது நாம் நித்திய ஜீவன் எனும் நிலை வாழ்வை அடையவேண்டுமானால் மெய்யான தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பிய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிந்து அவர்களோடு உறவுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியமாகும்.  

பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவது என்பது வெறுமனே அவர்களுக்கு ஆராதனை செய்வதோ ஒரு சில கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதோ அல்ல; மாறாக அவரை ஒரு குழந்தைத் தனது தாயையும் தகப்பனையும் அறிந்து அவர்களோடு ஐக்கியமாக இருப்பதுபோல நமது தனிப்பட்ட வாழ்வில் அவரோடு உறவை வளர்த்துக் கொள்வதைக் குறிக்கின்றது. அவரோடு பேசுவதும் அவர் நம்மோடு பேசுவதைக் அன்றாடம் கேட்டு  நடப்பவர்களாகவும் இருப்பதைக் குறிக்கின்றது. 

அதாவது, நாம் மனம் திரும்பிப்  பாவ மன்னிப்பைப் பெற்றால் போதாது; அவர்மேல் அளவற்ற விசுவாசம் உள்ளவர்களாக இருந்தால் போதாது; ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதோ, கைகளை ஒருவர்மேல்வைத்து குணமாக்குவதோ, மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு போன்றவரைப்பற்றி அறிந்து மற்றவர்களுக்கு உபதேசிப்பதோ மட்டும் போதாது. இவை அனைத்தும் கிறிஸ்தவ விசுவாசம்தான். ஆனால் நாம் பூரணராகவேண்டுமானால் இவற்றைக் கடந்து, இவற்றுக்கும் மேலாக பிதாவையும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.      

எனவேதான் எபிரேய நிருப ஆசிரியர், "ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக." ( எபிரெயர் 6 : 1, 2 ) என்று கூறுகின்றார். இவைகள் அஸ்திபார உபதேசங்கள்தான் ஆனால் நாம் இவற்றையே சொல்லிச் சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பது போதாது.

ஒரு குழந்தைக்கு நாம் நல்ல உணவு, உடை, பராமரிப்புக் கொடுக்கலாம், ஆனால் அந்தக் குழந்தை நாம் எவற்றைக்கொடுத்தாலும் அதில் முழுத் திருப்தி அடையாது. மாறாக அது தனது தாயின் முகத்தையும் தாயின் அரவணைப்பையும் தான் அதிகம் விரும்பும். 

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு போன்றவை நல்ல உபயோகமான காரியங்களாக இருந்தாலும் நாம் தனிப்பட்ட முறையில் பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி அறிந்து அவரோடு ஐக்கியமாக வாழ்வதே நித்திய ஜீவன். இந்தத் தனிப்பட்ட உறவினை அடைந்துகொள்ள முயல்வோம். 

இதற்கு நாம் உலக ஆசீர்வாதங்களையே அவரிடம் கேட்பதை விட்டு ஆவிக்குரிய ஆர்வமுள்ளவர்களாக, ஆவிக்குரிய மேலான காரியங்களை ஜெபத்தில் அவரோடு பேசி, கேட்டு பெற்றுக்கொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஆம், இம்மைக்குரியவைகளையல்ல; மேலானவைகளையே தேடுபவர்களாக வாழ்வோம். மெய்த்தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்து நித்தியஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்