அவரை அறிகிற அறிவின் வாசனை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,203      💚 மே 25, 2024 💚 சனிக்கிழமை 💚

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 )

இயேசு கிறிஸ்துவை அறியும் அறிவை நறுமணத்துக்கு ஒப்பிட்டு அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். தேவன் விசுவாசிகளாகிய நம்மைக்கொண்டு கிறிஸ்துவின் அந்த வாசனையை எல்லா  இடங்களிலும் வெளிப்படச் செய்கின்றார். அதாவது, நமது சாட்சியுள்ள வாழ்வாகிய நறுமணத்தால் இப்படி அவரை அறியும் அறிவின் வாசனையை வெளிப்படுத்துகின்றார். இதனையே, "எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

உன்னதப்பாட்டு  ஆவிக்குரிய மறைபொருளோடு தேவனை மணவாளனாகவும் விசுவாசிகளை மணவாட்டியாகவும் உருவகப்படுத்திப் பாடப்பட்ட நூல். அங்கும் இந்த வாசனையைப் பற்றி நாம் வாசிக்கின்றோம். அவரது பெயரே பரிமளத்தைலம் போன்ற நறுமணம் வீசக்கூடியது. இதனையே, "உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

இந்த வாசனையை மக்களுக்கு அளிக்கவே தேவன் நம்மை அழைத்துள்ளார். ஆனால் நாம் இந்த வாசனையை வெளிப்படுத்தினாலும் எல்லோரும் இந்த வாசனையை அறிந்துகொள்வதில்லை. ஒரு பன்றியின்முன் மணமான கேக் துண்டையும் மனிதக் கழிவையும் வைத்தால் பன்றி மனிதக் கழிவையே விரும்பும். காரணம் அதற்கு அதுவே நறுமணமாகத் தெரியும். அதுபோலவே கிறிஸ்துவின் பெயரும் அவரது கற்பனைகளும் கெட்டுப்போகிறவர்களுக்கு வாசனையாகத் தெரியாது. இரட்சிப்புக்கு அழைக்கப்பட்டவர்களுக்கோ அது ஜீவ வாசனையாக இருக்கும். 

ஆம் அன்பானவர்களே, ஒரேபொருள் அதனை அறியும் அறிவிற்கேற்ப ஒருவருக்கு நறுமணமாகவும் இன்னொருவருக்கு துர்நாற்றமாகவும் இருக்கின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். " ( 2 கொரிந்தியர் 2 : 16 ) என்று குறிப்பிடுகின்றார். 

கிறிஸ்துவை அறியும் அறிவின் வாசனையை மிக அதிகமாக வெளிப்படுத்தியவர் அப்போஸ்தலரான பவுல். இன்று இரண்டாயிரம் ஆண்டுக்களைக் கடந்தபின்னரும் அவரின் எழுத்துக்கள் மூலம் கிறிஸ்துவின் வாசனையை நாம் நுகர முடிகின்றதல்லவா? இத்தகைய வாசனையினை நாமும் வெளிப்படுத்துகின்றவர்களாக வாழ வேண்டுமென்று தேவன் விரும்புகின்றார்.

யார் நம்மை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இன்றைய தியான வசனம் குறிப்பிடுவதுபோல நாம் எல்லா இடங்களிலேயும் நம்மைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிறவர்களாக வாழவேண்டியது அவசியம். சாட்சியற்ற வாழ்வு அவரது வாசனையை பிறருக்கு வெளிக்காட்டாது. நறுமண வாசனை நம்மில் வெளிப்படும்போது நறுமணப் பூவைத்தேடி வண்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும் வருவதுபோல கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரை அறியும் ஆவலில் நெருங்கி வருவார்கள். கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நறுமணமுள்ளவர்களாக வாழ்வோம். 

நமது வாழ்வு அப்படி மாறும்போது தேவனே நம்மைப்பார்த்துக் கூறுவார்:- "உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!" ( உன்னதப்பாட்டு 4 : 10 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்