ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட....

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,193      💚 மே 15, 2024 💚 புதன்கிழமை 💚


"தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன." ( 2 நாளாகமம் 16 : 9 )

மிகப்பெரிய குப்பைக்கிடங்கில் சிலவேளைகளில் அரிய பொருட்கள் மறைந்து கிடப்பதுண்டு. குப்பைகளைச் சேகரிக்கும் தொழில் செய்யும் மனிதர்கள் சிலவேளைகளில் இந்த விலை உயர்ந்த பொருட்களைக் கண்டுபிடிப்பார்கள். சிலவேளைகளில் தங்க நகைகளும் கிடைப்பதுண்டாம். குப்பை சேகரிக்கும் தொழில் செய்யும் நண்பரொருவர் இதுபற்றி கூறும்போது,  "மற்றவர்களுக்கு குப்பை அருவெறுப்பாகத் தெரிந்தாலும் எங்களது கண்கள் அந்தக் குப்பையினுள் ஏதாவது கிடைக்குமா என்றுதான் பார்க்கும்"  என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே இந்த மொத்த உலகமும் பொல்லாங்குக்குள் கிடந்தாலும் தேவனது கண்கள் இந்த பொல்லாத உலகத்தினுள்ளும் தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடு யாராவது இருக்கின்றார்களா என்று பார்த்துத்  தனது வல்லமையினை அவர்களுக்கு வெளிப்படுத்தப்  பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன.

"வல்லமை" என்று கூறியதும் பலருக்கு அற்புத அதிசயம் செய்வதும், நோய்களைக் குணமாக்குவதும், பேய்களை ஓட்டுவதும், தீர்க்கத்தரிசனம் கூறுவதும்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் மேலான வல்லமை என்பது பாவத்தை மேற்கொள்ளுவதில் இருக்கின்றது. மனித அவலட்சண குணங்களை மேற்கொள்வதைக் குறிக்கின்றது. அதாவது இது உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கின்றது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்," ( எபேசியர் 3 : 16 ) என்று குறிப்பிடுகின்றார். தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு இந்த வல்லமையை அளித்து அவர்களைப் பரிசுத்தமாக்கும்படி  கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன.

பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை சுய கட்டுப்பாட்டால் வருவதல்ல. மாறாக அது தேவனால் வருகின்றது. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் மண்ணான மனிதனுக்குள் வரும்போது இந்த மகத்துவமான வல்லமை விளங்குகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 4 : 7 ) என்று குறிப்பிடுகின்றார். 

எனவே அன்பானவர்களே, நாம் கர்த்தரை அறியவேண்டுமெனும் உத்தம இருதயத்தோடு இருக்கவேண்டியது அவசியம். கர்த்தரிடம் கிடைக்கும் உலக ஆசீர்வாதங்களுக்கல்ல, அவரை அறியவேண்டுமெனும் உத்தம இருதயம் நமக்கு வேண்டும். அப்படி நாம் வாழும்போது இந்த வல்லமை நம்மில் செயல்படும். இதற்கான தகுதியுள்ளவர்களைத் தேடி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அவரது கண்களில் படும் தகுதியுள்ளவர்களாக வாழ முயற்சியெடுப்போம். 

"கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்." ( எபேசியர் 6 : 10 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்