அவர் நம்மேல் வைத்தக் கிருபை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,206    💚 மே 28, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா." ( சங்கீதம் 117 : 2 )

தேவனது கிருபை இல்லாமல் நாம் பூஜ்யமே. ஆனால் இந்த அறிவு பெரும்பாலான மக்களிடம் இருப்பதில்லை. எல்லோரும் தங்கள் சொந்த பலத்தினால் நிலை நிற்பதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் உண்மை என்ன? அடுத்த நொடியில் நடக்கயிருப்பதுகூட நமக்குத் தெரியாது.  "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." ( யாக்கோபு 4 : 14 ) 

ஆம் அன்பானவர்களே, இத்தகைய உலகில் இன்று நாம் நிலை நிற்கின்றோமென்றால் அது தேவனது சுத்தக் கிருபையினால்தான். வேதாகமத்தில் நாம் வாசிக்கும் அனைத்துப் பரிசுத்த மனிதர்களும் பலவீனமானவர்களே. ஆபிரகாம், மோசே, ஈசாக்கு, யாக்கோபு, கிதியோன், எலியா, எலிசா, தாவீது,  பேதுரு, யோவான், யாக்கோபு, பவுல் ......இப்படி அனைத்து வேதாகம பக்தர்களும் பலவீனத்தில் வாழ்ந்து, தேவ கிருபையால் நிலைநிறுத்தப்பட்டவர்கள்தான்.

இதனை உணர்ந்த தாவீது, "என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்." ( சங்கீதம் 86 : 12, 13 ) என்று கூறுகின்றார். அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவனுக்கு ஏற்பில்லாத செயல்கள் செய்தபோதும் தேவன் தனது கிருபையால் அவரை நிலை நிறுத்தினார். 

அன்பானவர்களே, நாம் தேவனற்றவர்காக இருந்தபோது எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கின்றோம் என்று சிந்தித்துப்பார்த்தால் அவர் நம்மேல் வைத்திருந்த கிருபையை நாம் புரிந்துகொள்ளலாம். நமது பழைய வாழ்க்கையை எண்ணிப்பார்ப்போம். நாம் எல்லாவற்றிலும் நிறைவுள்ளவர்களாக வாழவும் நற்செயல்கள் செய்து அவருக்கு உகந்தவர்களாகவும் தேவன் நம்மில் கிருபையைப் பெருகச் செய்ய வல்லவராய் இருக்கின்றார் என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

"மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்." ( 2 கொரிந்தியர் 9 : 8 ) என்கின்றார் அவர்.

தேவன்  நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது என்பதை நமது உள்ளம் உணர்ந்துகொள்ளும்போதுதான் அவர்மேலுள்ள  நமது அன்பு மேலும் அதிகாரிக்கும். நமது பழைய பாவ வாழ்க்கையோடு புதிய வாழ்க்கையினை ஒப்பிடும்போது அவர்மேல் நமது அன்பு அதிகரிக்கும். "ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்." ( லுூக்கா 7 : 47 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

ஆம் அன்பானவர்களே, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் அன்புகூருவோம். ஏனெனில் அவரே கிருபைமிகுந்தவர். "எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின." ( யோவான் 1 : 17 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்