மாயக்காரனின் ஜெபம்

 ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,216       💚 ஜூன் 07, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 6 : 5 )

ஜெபம் என்பது நமக்கும் தேவனுக்குமுள்ள தனிப்பட்ட உறவின் அடையாளம். நாம் அவரோடு பேசுவதும் அவர் பேசுவதைக் கேட்பதும்தான் ஜெபம். நாம் தேவனோடு பேசும்போது உலக காரியங்களை மறந்து அவரோடு பேசவேண்டும். 

நாம் ஜெபிப்பதை நம்மைப் பலர் பார்த்துக்கொண்டிருக்க, புகைப்படக் கேமராவும் வீடியோவும் பதிவு செய்துக்கொண்டிருக்குமானால் நாம் எப்படி அந்தரங்கமாக ஜெபிக்கமுடியும்?  அந்த ஜெபம் எப்படி தேவனுக்கு உகந்ததாக இருக்கமுடியும்? அத்தகைய ஜெபம் மாயக்காரனின் ஜெபம் என்று வேதம் கூறுகின்றது. "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று இயேசு குறிப்பிடுகின்றார்.

அதாவது,  அவர்கள் ஜெபிப்பதை உலக மக்கள் பார்த்தார்களே அதுதான் அவர்கள் அத்தகைய ஜெபத்தால் அடைந்த பலன். அதனை அவர்கள் அடைந்து தீர்த்தாகிவிட்டது. எனவே இதற்குமேல் அந்த ஜெபத்தால் பலனில்லை என்று பொருள். 

இன்று பல கிறிஸ்தவ ஊழியர்களும் இப்படித்  தங்கள் தனிப்பட்ட ஜெபத்தை வீடியோ காட்சியாக பதிவேற்றி முகநூலில் வெளியிடும் அவலம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  "மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்" என்றுதான் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது, ஜெபிப்பதை முகநூலில் வெளியிடுவதைக் குறித்துக் குறிப்பிடவில்லை என்று இவர்கள் எண்ணிக்கொள்கின்றார்கள். 

அன்பானவர்களே, அரசியல் தலைவர்கள் மக்களைக் கவரவும் ஓட்டுகள் வாங்கவும் இப்படி நடிக்கலாம். ஆனால் தேவனுக்குமுன் மனிதர்களது நடிப்பு எடுபடாது. பெருமையில்லாமல், தன்னைத் தாழ்த்தி, தனது பாவங்களை அறிக்கையிட்டு அந்தரங்கத்தில் ஜெபிப்பதையே தேவன் விரும்புகின்றார். "நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 6 ) என்று வேதம் கூறவில்லையா? 

ஆலயங்களில் நாம் ஜெபிப்பதற்கும் தனிப்பட்ட ஜெபத்துக்கும் வித்தியாசம் உண்டு. தனிப்பட்ட ஜெபம் வல்லமையுள்ளது. தனி ஜெபத்தில்தான் நாம் தேவனோடு நெருக்கமாக பேசவும் அவர் பேசுவதைக் கேட்கவும் முடியும். பல கிறிஸ்தவர்கள் ஆலய ஆராதனையோடு ஜெபத்தை முடித்துக்கொள்கின்றனர். இப்படி இருக்கும் மக்கள் தேவனது பிரசன்னத்தை உணர்ந்து கொள்ள முடியாது. 

எனவே அன்பானவர்களே, நமது தனி ஜெப வேளையை நாம் அதிகரிக்கவேண்டும். அத்துடன் நமது ஜெபம் நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ளத்  தொடர்பு என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது. நமது அறைவீட்டுக்குள் தனியே அந்தரங்கத்திலிருக்கிற நமது  பிதாவை நோக்கி ஜெபம்பண்ணுவோம்; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற நமது பிதா நமக்கு வெளியரங்கமாய்ப்   பலனளிப்பார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்