தேவனது பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,195     💚 மே 17, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 )

பெரும்பாலான உலக வேலைகளைச் செய்பவர்களும் ஆவிக்குரிய மக்களும் தங்களை அறியாமலேயே பெருமை எனும் வலையினுள் சிக்கிக்கொள்கின்றனர். அந்தப் பெருமை மற்றவர்களைவிடத் தங்கள் மேலானவர்கள் எனும் எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்குவதால் அதனை மற்றவர்களும் உணர வேண்டுமென்று அதனை வெளிப்படுத்த பல்வேறு உபாய காரியங்களைச் செய்கின்றனர். 

இந்த பெருமையும் தன்னைத்தான் உயர்த்தும் குணமும் கிறிஸ்தவ ஊழியர்களிடையே இன்று அதிகமாகப் பரவியுள்ளது மறுக்கமுடியாத உண்மை. எனவே, தங்களைத் தாங்களே உயர்த்தும் உபாயங்களாக "தீர்க்கதரிசன வரம்பெற்ற ஊழியர்" , "குணமாகும் வரம் பெற்றவர்", "கர்த்தருடைய தீர்க்கதரிசி" போன்ற பட்டங்களைத் தங்களது பெயருக்குப்பின் போட்டுக்கொள்கின்றனர்.  பல ஊழியர்கள் கூடும் இடங்களில் மற்றவர்களைவிடத் தான்தான் பெரியவன் என்பதனைக் காட்டிக்கொள்ள அற்பமான பெருமை காரியங்களையும் செய்கின்றனர். 

உலக மனிதர்களும் பெருமைகொண்டு தங்கள் செயலிலும் பேச்சிலும் தங்களை மற்றவர்களைவிட உயர்திக்கொள்கின்றனர். இவர்களைப்பார்த்து தேவன் கூறுகின்றார், உங்களை நீங்களே உயர்திக்கொள்ளாதீர்கள். கர்த்தர் உங்களை உயர்த்தும்படி அவரது கரங்களுக்குள் அடங்கியிருங்கள். அப்போஸ்தலரான பேதுருவும், "...........நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 ) என எழுதுகின்றார். 

தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் என்று கூறிய பேதுரு தொடர்ந்து கூறும்போது பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது உன்னையே நீ உயர்த்துவது தேவனுக்கு எதிர்த்து நிற்பதுபோன்ற செயல் ஆனால் தாழ்மையோடு இருப்பாயானால் தேவ கிருபையினைப் பெறுவாய் என்று பொருள். 

"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு."( பிரசங்கி 3 : 1 ) என்று கூறியுள்ளபடி நம்மை உயர்த்துவதற்கு தேவனுக்கேற்ற காலம் ஒன்று உண்டு. அந்தக்காலம் வரும்வரை அவரது பலத்த கைக்குள் நாம் அடங்கியிருக்கவேண்டியது அவசியம். தேவனது கரத்துக்குள் என்று வெறுமனே கூறாமல், "அவரது பலத்த கைகளுக்குள்" என்று கூறப்பட்டுள்ளது. அந்தப் பலத்தக் கரம் ஒரே நொடியில் ஒருவரை உயர்த்தவும் தாழ்த்தவும் வல்லமைபொருந்தியது என்பதனை நாம் மறந்திடக்கூடாது.

எனவே அன்பானவர்களே, பெருமையை நீக்கித் தாழ்மையோடு வாழப் பழகுவோம். உயர்ந்த பதவியோ பணமோ,  அழகோ, பேச்சாற்றலோ மட்டுமே சிறப்பல்ல;  ஒவ்வொருவருக்கும் தேவன் ஏதாவது சிறப்பான காரியத்தைக் கொடுத்திருப்பார். எனவே பெருமையை நீக்கி மனத் தாழ்மையோடு வாழும்போதுதான் தேவ ஆசீர்வாதத்தை நாம் பெறமுடியும். 

"ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்." ( பிலிப்பியர் 2 : 3 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்