நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,204       💚 மே 26, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக." ( எபேசியர் 3 : 20, 21 )

பிதாவாகிய தேவனது முக்கியமான ஒரு குணத்தைக்குறித்து அப்போஸ்தலராகிய பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது அவர் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிறவர். இந்த வசனத்தில் "நமக்கு" என்று கூறாமல் "நமக்குள்ளே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம் அவர் நமது உள்ளான மனிதனில் நாம் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் மேலாகச் செயலாற்றுபவர். 

பாவத்தை மேற்கொள்ளும் பலம் நமக்கு இல்லாமலிருக்கலாம், அல்லது சில மோசமான குணங்கள் நம்மில் இருக்கலாம். உதாரணமாக, பொறாமை, பெருமை, எரிச்சல், கோள்சொல்லுதல், பொய், மற்றவர்களை அற்பமாக எண்ணுவது போன்ற குணங்கள் நம்மில் இருக்கலாம். இவற்றை நாம் உணர்ந்து இவைகளை நம்மைவிட்டு அகற்றவேண்டும் என வேண்டுதல் செய்யும்போது நாம் வேண்டியதற்குமேலேயே அவர் செயல்படுவார். 

இதனை நாம் வெளிநாட்டில் வேலைசெய்து ஊருக்குத் திரும்பும் ஒரு நல்ல தந்தையை உதாரணம் கூறலாம். அவரது மகனும் மகளும் தகப்பனிடம் ஊருக்கு வரும்போது சில பொருட்களை வாங்கிவரச் சொல்லியிருப்பார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தந்தை ஊருக்கு வரும்போது தனது குழந்தைகள் கேட்டதற்கும் எண்ணியதற்கும் மிக அதிகமான பொருட்களை வாங்கி வருவது போன்றது இது. 

ஒரு பூலோக தகப்பனார் இப்படி இருப்பார் என்றால் பரலோக தந்தை எவ்வளவு மேலானவராக இருப்பார்? இதனையே இயேசு கிறிஸ்து, "ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" ( மத்தேயு 7 : 11 ) என்று கூறினார்.

இன்று புனிதர்களாக கருதப்படும் மனிதர்கள் அனைவருமே நம்மைப்போல பலவீனமானவர்கள்தான். அவர்கள் புனித நிலைமைக்கு வந்ததற்கு காரணம் அவர்களது உள்ளான மனிதனில் ஏற்பட்ட மாற்றம். அது அவர்களது சுய பலத்தால் வந்ததல்ல, அவர்களுக்கு அந்த எண்ணம் இருந்து அவற்றை மாற்றிடவேண்டுமெனும் எண்ணமும் அவர்களுக்கு இருந்ததால்தான். 

இத்தகைய வல்லமையினை நமக்குத் தரும் பிதாவாகிய தேவனுக்கு இயேசு கிறிஸ்துமூலம் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக என்று கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து மூலம் நாம் பிதாவாகிய தேவனிடம் வேண்டுதல்செய்து இந்த வல்லமையினைப் பெற்றுள்ளோம். எனவே அந்த கிறிஸ்து வழியாக பிதாவுக்கு நாம் மகிமை செலுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.  எனவே அன்பானவர்களே, நமது உள்ளான குணத்தை மாற்றிட கிறிஸ்து வழியாக வேண்டுதல் செய்வோம். நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே அவர் செயல்புரிந்து நம்மை புது மனிதர்களாக மாற்றுவார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்