DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, May 08, 2024

ஏவாள் வஞ்சிக்கப்பட்டதுபோல வஞ்சிக்கப்படாமல் இருப்போம்.

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,186     💚 மே 09, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை." ( 1 யோவான்  2 : 4 )

இயேசு கிறிஸ்துவை அறிவது என்பது மேலான ஒரு அனுபவமாகும். இயேசு கிறிஸ்துவை வெறுமனே ஆராதிப்பதும் நமது தேவைகளுக்காக மட்டும் தேடுவதும்  அவரை அறிவதல்ல. மாறாக, நாம் நமது குடும்பத்து உறவினர்களுடன் உறவோடு வாழ்வதுபோல அவரோடு உறவை வளர்த்துக்கொள்வதே அவரை அறிவதாகும். 

இப்படி அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்வார்கள். ஆறது கற்பனை சிறிதான ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை அன்புசெய்வதும் தன்னை அன்பு செய்வதுபோல பிறரை அன்பு செய்வதுமே அவரது கற்பனை.  அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்பவன் இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்பவனாக இருக்கவேண்டும். இப்படி "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்." ( 1 யோவான்  2 : 3 )

எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை அன்புசெய்பவன் அவரை மட்டுமே அன்புசெய்பவனாக வாழ்வான். எந்தச் சூழ்நிலையிலும் அவருக்குக்  கொடுக்கவேண்டிய முன்னுரிமையை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் வாழ்வான். இப்படி, "அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  2 : 5 )

கிறிஸ்துவுக்குக் கொடுக்கவேண்டிய முன்னுரிமையை நாம் பிற புனிதர்களுக்கோ, உலக செல்வங்களுக்கோ கொடுப்போமானால் நாம் அவரை பூரணமாக அன்பு செய்யவில்லை என்றுதான் பொருள். அவரிடம் நேரடியாக நமது உள்ளத்தை வெளிப்படுத்திப் பேசாமல் பரிந்துரைவேண்டி மற்றவர்களை உதவிக்குத் தேடுவதும் அழைப்பதும் நாம் அவரை பூரணமாக அன்பு செய்யவில்லை என்பதையே வெளிப்படுத்தும்.  

ஒரு பெண்ணை உண்மையாக காதலிப்பவன் அந்தப் பெண்ணை மட்டுமே எண்ணி வாழ்வானேத்தவிர எல்லா பெண்களையும் அன்புசெய்யமாட்டான். இதனையே, "நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 2, 3 ) என்று எழுதுகின்றார் அப்போஸ்தலராகிய பவுல். 

ஆம், தந்திரத்தால் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதுபோல நாமும் வஞ்சிக்கப்படாமல் இருப்போம்.   அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதிருந்தால் நாம் பொய்யர்கள். ஏவாளைப்போல வஞ்சிக்கப்பட்டவர்கள். அவரையே அறிந்திருக்கிறோம் என்று வெறுமனே சொல்லிக்கொள்ளாமல் அவரையே  அன்புசெய்து அவரோடு நெருங்கிய உறவுகொண்டு வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: