DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, May 08, 2024

சகலத்தையும் செய்ய வல்லவர்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,187         💚 மே 10, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." ( யோபு 42 : 2 )

இந்த உலகத்தில் சில சர்வாதிகார அரசியல் தலைவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். இந்தத் தலைவர்கள் தங்கள் இருதயத்தில் எண்ணியத்தைச் செய்வார்கள். இவர்களை யாரும் கேள்வி கேட்கமுடியாது. ஹிட்லர் இத்தகைய சர்வாதிகாரியாக இருந்தார். இப்போதும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) ஒரு சர்வாதிகாரியாக இருக்கின்றார். அரசியலில் இவர்கள் செய்ய நினைத்தது தடைபடாது. வேண்டாதவர்களையும் எதிர் கருத்துக் கொண்டவர்களையும் கொன்று ஒழிப்பதே அவர்களது குணம். 

அற்பமான இந்த உலகப் பதவியை வைத்துக்கொண்டு அதுவும் குறுகிய ஒரு நிலப்பரப்புக்குள் உள்ள அதிகாரத்தைக்கொண்டு இவர்கள் இப்படிச் செயல்படுகின்றனர். ஆனால் இவர்களால் பெரும்பாலும் மக்களுக்கு நன்மைகள் எதுவும் ஏற்படாது. தேவன் நினைத்தால் இவர்கள் படுக்கையில் உறங்கி மீண்டும் விழித்தெழாமலேயிருக்கச் செய்யமுடியும் எனும் உண்மை உணர்வில்லாமல் வாழ்கின்றனர். 

அன்பானவர்களே, நமது தேவன் இத்தகைய இழிவான மனிதர்களைப் போன்றவரல்ல. "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" என்று யோபு கூறுவதுபோல விசுவாசத்தோடு நாமும் கூறுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம். தேவன் நம்மை அழிப்பதற்கல்ல; மாறாக, நம்மை மேலான வாழ்வு வாழவைப்பதற்காகவே அவர் சகலத்தையும் செய்கின்றார். ஆம் அவர் சகலத்தையும் செய்ய வல்லவர் எனும்  விசுவாசம் நமக்கு இருக்குமேயானால் அவரிடமிருந்து அதிசயங்களையும் நமது வாழ்க்கையில் பெற்று அனுபவிக்கமுடியும்.  

அவரால் நமது பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கமுடியும், நோய்களிலிருந்து விடுதலையளிக்க முடியும், கடன் தொல்லைகள், பிரச்சனைகள், இக்கட்டுகள் இவைகளிலிருந்து விடுதலையளிக்க முடியும். முற்றிலும் நமது வாழ்க்கையினை மாற்றிட முடியும். ஆம்,  அவர் சகலத்தையும் செய்ய வல்லவர்; அவர் செய்ய நினைப்பது தடைபடாது.  நமக்கு எதிராகச் செயல்படுபவர்கள், நம்மை ஏளனம் செய்பவர்கள் இவர்களை ஒரேயடியாக தாழ்த்த அவரால் ஆகும். 

இதனையே பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டி தேவன் கூறிய வார்த்தைகளும் உறுதிப்படுத்துகின்றன.  "என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது" ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, ஒருவரும் திறக்கமுடியாதபடி பூட்டுகின்றவரும் ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும்தான் நமது தேவன். எனவே நமக்கு எதிராக யாரும் செயல்படமுடியாது. இத்தகைய வல்லமையுள்ள பரிசுத்த தேவனை நமது பிதாவாகக் கொண்டுள்ளது எவ்வளவு மகிமையான காரியம் பாருங்கள். நாம் அவரது பிள்ளைகளாக வாழும்போது இந்த சர்வ வல்லவரின் உடனிருப்பும் பாதுகாப்பும் நமக்கு நிச்சயம் உண்டு. எனவே யோபுவைபோல விசுவாசத்தோடு நாமும் "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." என்று அறிக்கையிடுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: