வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்வோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,179       💚 மே 02, 2024 💚 வியாழக்கிழமை 💚


"கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 10, 11)

நாம் மெய்யாக ஒருவரிடம் அன்புள்ளவர்களாய் இருந்தால் அவர்கள் என்ன விரும்புகின்றார்களோ அவைகளைச் செய்ய தயாராக இருப்போம்.  நமக்கு வேண்டியவர்கள் நமது வீட்டிற்கு வருகின்றார்களென்றால் வீட்டில் அனைத்தையும் சரிப்படுத்துவோம். அதுபோல கர்த்தரோடு நாம் ஐக்கியமுள்ளவர்களென்றால் கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நாம் சோதித்துப் பார்ப்பவர்களாகவும் அவற்றைச் செயல்படுத்துகின்றவர்களாகவுமாக இருப்போம். 

இன்றைய தியான வசனத்துக்கு முன்னதாக  அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 8 ) அதாவது கர்த்தரை அறியாமல் நாம் வாழ்ந்தபோது அந்தகார இருள் நம்மைச் சூழ்ந்திருந்தது. இப்போதோ கர்த்தரை அறிந்து நம்மில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளதால், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள் என்கின்றார். 

மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, "கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்" என்று. ஆவியின் கனிகள் இல்லாதவன் கிறிஸ்துவை உடையவனல்ல. "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 ) நற்குணம், நீதிச் செயல்கள் மற்றும் உண்மையில்லாத செயல்கள் அனைத்துமே அந்தகாரச் செயல்பாடுகள். 

எனவே அன்பானவர்களே, நாம் எந்தச் செயல்களைச் செய்தாலும் அந்தச் செயல்கள்  உண்மையும், நீதியும் உள்ளவையாக இருக்கின்றதா என்று சோதித்துப்பார்த்துச் செய்யவேண்டும்.  இதனையே இன்றைய வசனம், "கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்" என்று கூறுகின்றது. 

இன்று கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில்தான் முரண்பட்டு வாழ்கின்றார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் என்று கூறிக்கொள்ளும் பலரும் ஆலய ஆராதனைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வாழ்க்கைக்குக் கொடுப்பதில்லை.  பலரிடம் ஆவியின் கனிகள் இல்லை. ஆர்ப்பரித்து கூப்பாடு போடுவதுதான் ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை என்று எண்ணிக்கொள்கின்றனர். இதனால் கிறிஸ்துவை அறியாத மற்றவர்கள் கிறிஸ்தவத்தை பத்தோடு பதினொன்றாக ஒரு மதமாகவே  எண்ணிக்கொள்கின்றனர். 

எனவே நாம் நம்மையே சோதித்துக்கொள்வோம். கனியற்ற அந்தகாரச் செயல்பாடுகள் நம்மிடம் இருந்தால் அவைகளை தேவனிடம் அறிக்கையிட்டு மெய்யான மனம்திரும்பிய வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்