தனக்குப் பயந்தவர்களுக்குக் கிருபை செய்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,190      💚 மே 12, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )

தேவனது கிருபையினை மிகுதியாகப்பெற்ற அன்னை மரியாள் உன்னதனமான ஒரு உண்மையினை உணர்ந்திருந்தார். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். அதாவது, தேவன் தனக்குப் பயந்து நீதியோடு வாழும் மக்களுக்கு கிருபையினை அளிக்கின்றார். மட்டுமல்ல அப்படி தேவன் அளிக்கும் கிருபை தலைமுறைக்கும் நிலைத்ததாக இருக்கும். 

இன்றைய தியான வசனத்தின் இரண்டு வசனத்துக்கு முன் அன்னை மரியாள் கூறுகின்றார், "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்." ( லுூக்கா 1 : 48 ) ஆம் அன்பானவர்களே, சர்வ லோகத்தையும் படைத்தாளும் தேவன் அன்னை மரியாளின் வயிற்றில் பிறந்தது எத்தனை பெரிய கிருபை. இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்றும் நாம் அவரைப் பாக்கியவதி என்று போற்றுகின்றோம்.

இதனைத் தாவீது ராஜாவும் அறிக்கையிடுகின்றார். தேவனுக்குப் பயந்து வாழ்ந்தவர்தான் தாவீது. அவருக்குத் தேவன் அளித்த கிருபை மிகப்பெரியது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் வம்சத்திலே தோன்றியது மட்டுமல்ல, தாவீதின் மகன் என்றே குறிப்பிடப்படுகின்றார். இது எத்தனை பெரிய கிருபை பாருங்கள்!!! இதனையே, "தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்." ( சங்கீதம் 18 : 50 ) என்று கூறுகின்றார் அவர். 

அன்பானவர்களே, இதே கிருபையினைத்  தேவன் நமக்கும் நமது சந்ததிக்கும் தருவேன் என்று வாக்களித்துள்ளனர். நாம் செய்யவேண்டியது தேவனுக்குப்பயந்த நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டியதே.  "உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." ( ஏசாயா 55 : 3 ) என்கிறார் சர்வ வல்லமையுள்ள தேவன். 

மனிதர்களாகிய நாம் நமது தலைமுறையினர் நல்ல ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு சொத்து சுகங்களைச்  சேர்த்து வைக்கின்றோம். வங்கிகளில் பணங்களை முதலீடு செய்து வைக்கின்றோம். ஆனால் இவை அனைத்தையும்விட   நாம் செய்யவேண்டியது தேவனுக்குப் பயந்த நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டியதுதான். அப்படி வாழும்போது, "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது."
என இன்றைய தியான வசனத்தில் கூறியுள்ளபடி  தேவ இரக்கம் நமது தலைமுறை மக்களுக்குச் சொந்தமாகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்