மரித்தோரை விட்டு எழுந்திரு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,210       💚 ஜூன் 01, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." ( எபேசியர் 5 : 14 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் ஆவிக்குரிய தூக்கத்தையும், மரணத்தையும் குறித்து நமக்கு அறிவுறுத்தி ஆலோசனைச் சொல்கின்றார்.  தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமோ, நமது பாவ காரியங்களைக் குறித்த உணர்வோ இன்றி வாழ்வதுதான் பவுல் குறிப்பிடும் தூக்கமும் மரணமும்.

இத்தகைய உணர்வுகள் இன்றியே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நீ அப்படி அவர்களைப்போல இல்லாமல் விழித்து எழுந்திரு என்கின்றார் அவர். இதனையே அவர், "தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு" எனும் வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார். மற்றவர்கள் எப்படியும் இருக்கட்டும், நீ முதலில் அத்தகைய மரித்தவர்களை விட்டு எழுந்திரு என்கின்றார். 

நாம் ஆலயங்களுக்குச் செல்லலாம், காணிக்கைகள் கொடுக்கலாம், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளலாம், வேதாகமத்தைத் தினசரி வாசிக்கலாம். ஆனால் இத்தகைய செயல்பாடுகள் இருப்பதால் நாம் ஆவிக்குரிய மக்கள் என்றும்  விழித்திருப்பவர்கள் என்றும் கூறிவிட முடியாது. காரணம், இத்தகைய செயல்களை அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கைகளுக்கேற்பச்  செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே இத்தகைய செயல்பாடுகள் ஆவிக்குரிய விழித்திருந்தல் ஆகாது. 

ஆம் அன்பானவர்களே, பாவத்தை நாம் மேற்கொள்ளாதவரை நாம் ஆத்தும மரணத்தில்தான் இருக்கின்றோம்.  "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23) இன்றைய தியான வசனத்தின்படி நாம் மரணத்திலிருந்து எழுந்திருக்க வேண்டுமானால்  நமது பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் நமக்கு வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும். 

அப்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது நாம் தூங்குகின்றவர்களையும் மரித்தவர்களையும் விட்டு எழுந்திருக்கின்றவர்கள் ஆவோம். "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆம், நமது ஒளியிழந்த வாழ்க்கை அப்போது பிரகாசமடையும். நாம் மற்றவர்களுக்கு வெளிச்சமாகவும் வழிகாட்டுகின்றவர்களாகவும் மாறுவோம். இதனையே இயேசு கிறிஸ்துத் தனது மலைப் பிரசங்கத்தில் கூறினார்:- 

"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 )

"இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." ( மத்தேயு 5 : 16 )

ஆதலால், தூங்குகிற நாம்  விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திருப்போம்.  அப்பொழுது கிறிஸ்து நம்மைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறது. தூக்கம், மரணம் இவற்றைவிட்டு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  எனவே, நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். அப்போது,  நமது ஆவிக்குரிய இருளும் உலக வாழ்விலுள்ள இருளும் அகன்று மனிதர்கள்முன் நாம் பிரகாசிப்பவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்