எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்வது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,194      💚 மே 16, 2024 💚 வியாழக்கிழமை 💚

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )

சிறு குழந்தைகளிடமிருந்து நமது வாழ்கைக்குத் தேவையான பல காரியங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். எனவேதான் "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( லுூக்கா 18 : 16 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். 

இந்தச் சிறு பிள்ளைகளுடைய ஒரு முக்கிய குணம் தேவனுக்கு நேராக நாம் வாழ்வதற்கு வழிகாட்டுவதாக உள்ளது. ஒருதாய் குழந்தைத் தவறு செய்யும்போது கோபத்தில் அடித்துவிடுவாள். ஆனால் அந்தக் குழந்தை தாய் தன்னை அடித்ததை மனதினில் வைத்துகொண்டிராது. சற்று நேரத்திலேயே எல்லாவற்றையும் மறந்து தாயைநோக்கிச் செல்லும். ஆம் அன்பானவர்களே, இதனையே இன்றைய தியான வசனம் "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." என்று கூறுகின்றது. 

எருசலேமிலிருந்து எரிகோவைநோக்கிச் சென்ற ஒரு மனிதனை இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார். எருசலேம் என்பது பரிசுத்த நகரம். எரிகோ சாபத்தின் நகரம். யோசுவா இந்த நகரத்தைச் சபிப்பதை நாம் பார்க்கலாம். "அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்." ( யோசுவா 6 : 26 )

அதாவது இயேசு கிறிஸ்து கூறிய உவமையில் எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்வது பரிசுத்த வாழ்க்கையிலிருந்து ஒருவன் பாவ வாழ்க்கையினை நோக்கிச் செல்வதைக் குறிக்கின்றது. இப்படிச் செல்பவர்களுக்கு திருடர்களால் துன்பம் வருவதுபோல துன்பங்கள் தொடரும். ஆனால் இப்படித் திருடர்கையில் அகப்பட்டு அடிக்கப்பட்ட மனிதனை சமாரியன் கண்டு உதவுகின்றான்.  சமாரியன் "கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்." ( லுூக்கா 10 : 34 ) என்று வாசிக்கின்றோம்.

எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்வதுபோல இன்றுநாமும்  பரிசுத்த வாழ்க்கையிலிருந்து பாவ வாழ்க்கையினை நோக்கிச் செல்ல்லும்போது துன்பங்கள் நம்மைத் தொடர்கின்றன. அது நாம் நமது வழியினைத் திருத்திக்கொள்ள தேவன் தரும் அழைப்பு.  காயப்பட்ட மனிதனுக்கு சமாரியன் தானாக வந்து உதவினானென்றால் நல்ல சமாரியானான இயேசு கிறிஸ்து அவரிடம் நாம் திரும்பும்போது எத்தனை அதிகமாக உதவுவார்!!!

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் நமக்கு கூறுவதுபோல கர்த்தரிடத்தில் திரும்புவோம்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு மனம் கலங்கிடாமல் அவரிடமே திரும்புவோம். "நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 19 ) என்கிறார் உன்னதமான தேவன். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்