கிறிஸ்துவை அன்புசெய்வது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,185       💚 மே 08, 2024 💚 புதன் கிழமை 💚

"நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்." ( யோவான் 16 : 27 )

அன்பானவர்களே, சர்வலோகத்தையும் படைத்து ஆண்டு நடத்தும் தேவாதி தேவனது அன்பைப் பெறுவது எவ்வளவு மேலான காரியம் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால் அந்த மேலான காரியத்தை நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன்மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது பிதா நம்மேல் அன்புகூருகின்றார்.  இப்படி பிதா நம்மேல் அன்புகூருவதால் என்ன பலன் நமக்குக் கிடைக்கின்றது? அது இந்த உலகத்தில் எதற்கும் கலங்காமல் துணிவுடன் இருக்கும் பலத்தை நமக்குத் தருகின்றது. மேலும், பிதா நம்மேல் அன்புகூருவதால் அவர் நம்மைத் தனியே இருக்க விடமாட்டார். 

இந்த உலகத்தில் பல இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. மிகப்பெரிய நோயோ, கடன் பாரமோ நம்மை நெருக்கும்போது நம்மிடம் அதுவரை அன்புடன் பழகிய நண்பர்களும் சுற்றத்தாரும் நம்மைவிட்டு நீங்கிவிடுவர். அத்தகைய நிர்க்கதியான வேளைகளில் பிதாவாகிய தேவன் மட்டும் நம்மைக் கைவிடமாட்டார். காரணம், அவர் நம்மை அன்புசெய்வதால்.  

இயேசு கிறிஸ்துவுக்கு இத்தகைய நெருக்கடியான காலம் ஏற்பட்டபோது அவரோடு உண்டு உறங்கிய அனைவரும் அவரைவிட்டு  ஓடிவிட்டனர். ஆனால் பிதாவாகிய தேவன் மட்டும் அவரோடு இருந்தார். இதனையே இயேசு கிறிஸ்து, "இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." ( யோவான் 16 : 32 ) என்று கூறினார். 

இன்றைய தியானவசனம் நமக்குக் கூறும் உண்மை இதுதான். அதாவது நாம் இயேசு கிறிஸ்துவின்மேல் அன்புகூர்ந்து,  அவர் பிதாவாகிய தேவனிடமிருந்து வந்த மெய்யான தேவ குமாரன் என்று நாம் விசுவாசிப்போமானால் இயேசு கிறிஸ்துவைத் தனித்திருக்கவிடாமல் அவரோடுகூட எப்போதும் பிதாவாகிய தேவன் தங்கியிருந்ததுபோல நம்மோடும் இருப்பார்.

இந்த உலகமே நம்மைக் கைவிட்டாலும், தகுதியில்லாதவர்கள் என்று நம்மைப் புறம்பே தள்ளினாலும், பிதாவாகிய தேவன் நம்மைத் தள்ளாமல் நம்மோடுகூட இருந்து நமக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பார். விசுவாசத்தோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அன்புசெய்வோம்.  எப்படி அவரை அன்பு செய்வது என்பதனையும் இயேசு நமக்குக்  கற்பித்துள்ளார்.

"நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்." ( யோவான் 15 : 10 ) கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரை நாம் அன்புசெய்வதை உறுதிப்படுத்துவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                            

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்