DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, October 18, 2024

ஆகாயத்தில் சிலம்படித்தல்

 'ஆதவன்' அக்டோபர் 22, 2024. செவ்வாய்க்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,353

"ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." ( 1 கொரிந்தியர் 9 : 26 )

ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும்.நமது நோக்கத்தைப்பொறுத்தே நமது ஆவிக்குரிய வாழ்வு அமையும். அதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் விளக்குகின்றார். நமது ஆவிக்குரிய வாழ்வில் ஒரு நிச்சயம் வேண்டும். இந்த வாழ்க்கைக்குப் பின்னர் முடிவில்லாத நித்திய ஜீவன் உள்ளது. அதனைப் பெறுவதே நமது இலக்காக இருக்கவேண்டும். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும் இதுகுறித்து எந்த நிச்சயமும் கிடையாது. ஆவிக்குரிய காரியங்கள் செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு பக்தி முயற்சிகளைச்  செய்கின்றனர். பல்வேறு பக்தி அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் நித்திய ஜீவனைப்பற்றிய எண்ணமோ ஆவிக்குரிய அறிவோ இவர்களுக்கு இருப்பதில்லை.

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்,  "ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." என்று. அதாவது மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறார்.  

ஆவிக்குரிய வாழ்க்கையை அப்போஸ்தலரான பவுல் ஓட்டப்பந்தயத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது முதல் பரிசைப்பெறவேண்டும் எனும் எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். அதுபோலவே சிலம்பம் பண்ணும்போது வெறுமனே ஆகாயத்தில் சிலம்பக்கம்பைச் சுழற்றிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. எதிலும் ஒரு நோக்கம் வேண்டும். 

அந்த நோக்கம் நமக்கு இருக்குமானால் நாம் அதற்காக சில முயற்சிகளும் பயிற்சிகளும் எடுத்திருப்போம். ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் பயிற்சியில்லாமல் திடீரென்று மைதானத்தில் ஓடி பரிசுபெற முடியாது. அதுபோல ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற சில பயிற்சிகள் நமக்குத் தேவை, சில ஒறுத்தல்கள் தேவை.

"பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்." ( 1 கொரிந்தியர் 9 : 25 )

ஆம் அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை ஆராய்ந்து பார்ப்போம். நாம் செய்யும் செயல்கள், நமது எண்ணங்கள் எதனை இலக்காகக் கொண்டு செய்யப்படுகின்றன என்று சிந்திப்போம். நிச்சயமில்லாத, குறிக்கோளற்ற வாழ்க்கை அர்த்தமில்லாததுநான் நிச்சயமில்லாதவனாக இந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழவில்லை. ஆகாயத்தில் சிலம்படிப்பவனாக வாழவில்லை மாறாக, மேலான மறுவுலக வாழ்க்கை எனக்கு உண்டு எனும் நிச்சயத்தோடு ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடருகின்றேன் என்று அப்போஸ்தலரான பவுலைப்போல தெளிவோடு வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

No comments: