DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, October 19, 2024

எல்லோருக்குள்ளும் ஒரே பிதா

 'ஆதவன்' 💚அக்டோபர் 23, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,354

"ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,  எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது". (எபேசியர் 4: 5 - 7 )

தங்களுக்குச் சொந்த விசுவாசமில்லாமல் எதெற்கெடுத்தாலும் ஊழியர்களைத் தேடி ஓடும் பல கிறிஸ்தவர்களை நாம் உலகில் பார்க்கின்றோம். இந்தக் கிறிஸ்தவர்கள் புகழ்பெற்ற ஊழியர்களை வானத்திலிருந்து வந்தவர்கள் என எண்ணிக்கொள்கின்றனர்.  ஆனால் தங்களுக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளை மதிப்பதில்லை. இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுவது நாம் அனைவரும் சிந்திக்கத்தக்கது. 

ஊழியர்களுக்கென்றும் விசுவாசிகளுக்கென்றும் தனித்தனி பிரிவான கர்த்தரும், விசுவாசமும், ஞானஸ்நானமும் இல்லை. மாறாக,  எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், நம்  எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். அதாவது, ஒரே தேவன்தான் நம் எல்லோருக்குள்ளும் இருந்து செயல்புரிகின்றார். 

ஆனால் அடுத்ததாக பவுல் அப்போஸ்தலர் இந்த வசனத்தில் கூறுகின்றார், "கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது" என்று. அதாவது தேவ கிருபை ஆளாளுக்கு வித்தியாசமாகச் செயல்படும். அது கிறிஸ்து பகிர்ந்து கொடுப்பது. மற்ற ஊழியர்களைப்போலவோ மற்ற விசுவாசிகளைப்போலவோ நாம் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.  ஆனால் மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டாத தேவன் நாம் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நமக்கும் ஏற்ற கிருபையளிப்பார். 

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூற  விரும்பும் காரியங்கள்:-

வெவ்வேறு கர்த்தரல்ல ஒரே கர்த்தர்தான் உண்டு.  எனவே இங்கு அங்கு என அலையவேண்டாம். விசுவாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானது; வேதம் கூறுவதை விசுவாசிக்கவேண்டும். ஒரே தேவன் எல்லோருக்குள்ளும் இருப்பதால் எல்லோரையும் மதிக்கவேண்டும். கிறிஸ்துவினுடைய விருப்பப்படி அவர் அவனவனுக்குக் கிருபை அளிக்கின்றார். 

இப்படியிருப்பதால் "மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்." ( எபேசியர் 4 : 2, 3 ) என்று இன்றைய தியான வசனத்தின் முன் குறிப்பிடுகின்றார்.  

கிறிஸ்துவின் முன்பு நாம் அனைவரும் ஒன்றுதான். விசுவாசி, ஊழியன் என்று இல்லை. எனவே குறிப்பிட்ட ஊழியர்களை மட்டும் அன்பு செய்யாமல் நமக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளையும் அன்புசெய்து சமாதானத்தோடு ஒருமைப்பாட்டுடன்  நாம் வாழவேண்டும். ஆனால் இந்த உணர்வில்லாததால் அடுத்த வீட்டில் உணவுக்காக ஏங்கித் தவிக்கும் மக்கள் இருந்தாலும் ஐந்துகாசுகூட உதவி செய்யாத பலர் தொலைவிலிருக்கும் ஊழியர்களுக்கு ஆயிரக்கணக்கான பணத்தை அனுப்பிவைக்கின்றனர்.  

அன்பானவர்களே, எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் தான் உண்டு; அவரே எல்லார்மேலும், எல்லாரோடும், நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் என்ற உணர்வோடு வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

No comments: