DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, October 20, 2024

ஆமென் (Amen)

 'ஆதவன்' 💚அக்டோபர் 25, 2024. வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,356

"எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 )

வேதாகமத்தில் காணப்படும் ஆமென் எனும் சொல், "அப்படியே ஆகட்டும்" என்று பொருள்படும். இது எபிரேய வார்த்தையாகும். எபிரேய வேதாகமத்தில் உறுதிப்படுத்துதலின் பதிலாக உருவானது இது. மக்களால் செய்யப்பட்ட உறுதிமொழியாக இது உபாகமத்தில் காணப்படுகிறது (உபாகமம் 27: 15 - 26) மேலும்,  மக்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும் வாக்குத்தத்தை ஏற்றுக்கொள்வதற்கும்   "ஆமென்" என்று பதிலளித்தனர். 

கிறிஸ்தவர்கள் பொதுவாக ஜெப வேளைகளில் ஒருவர் ஜெபிக்கும்போதும் ஜெபித்து முடிக்கும்போதும் "ஆமென்" என்று கூறுவதுண்டு. இது ஜெபத்தில் கூறப்படும் வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே." ( 1 கொரிந்தியர் 14 : 16 ) என்று கூறுகின்றார். 

வேதாகமத்தில் பல ஆயிரம் வாக்குத்தத்தங்கள் உள்ளன. இந்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் அவற்றை நாம் உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ளும்போது நமக்குப் பலிக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது சில வாக்குத்தத்தங்கள் நமக்காகவே சொல்வதுபோல இருக்கும். சில நேரங்களில் தேவன் நம்மிடம் அதனைத்  தெளிவாக உணர்த்துவார். அப்படி உணர்த்தும்போது நாம் உள்ளத்திலிருந்து ஆமென் என்று வாயினால் அறிக்கையிடவேண்டும். அப்படிச் செய்வது அந்தத் தேவ வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதனை வெளிப்படுத்துகின்றது.   

வேதத்திலுள்ள ஆயிரக்கணக்கான தேவனுடைய  வாக்குத்தத்தங்களும்  இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருந்தாலும் குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களை  நாம் ஆமென் என அறிக்கையிடும்போது நமக்காக அவற்றை உறுதிப்படுத்துகின்றோம் என்று பொருள். 

வேதாகமத்தை வாசிக்கும்போதும், நல்ல பிரசங்கங்களைக் கேட்கும்போதும்  அவற்றை நாம் ஏற்றுக்கொள்வதை ஆமென் என்று கூறி உறுதிப்படுத்துவோம். கர்த்தர் நிச்சயம் அவற்றை நமது வாழ்வில் பலிக்கச்செய்வார். இப்படியே அப்போஸ்தலரான யோவான் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்த காரியங்களை  ஏற்றுக்கொண்டுக் கூறுகின்றார், "இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 20 ) ஆமென் என்று கூறி வாக்குத்தத்தங்களை நமதாக்கிக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

No comments: