DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, October 23, 2024

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு

 'ஆதவன்' 💚அக்டோபர் 30, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,361


"இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )

அனைத்துக்கும் மூலம் வெளிச்சமே. இதனால்தான் தேவன் முதல்முதலில் ஒளியைப் படைத்தார் (ஆதியாகமம் 1 : 3) இப்படி ஆதியில் ஒளியைப்படைத்த அதே தேவன் நம்மில் கிறிஸ்துவின் மகிமையின் அறிவாகிய ஒளி பிரகாசிக்கவேண்டும் என்பதற்காக நமது இருதயங்களில் வந்து பிரகாசமூட்டுகின்றார். அதாவது, கிறிஸ்து நம்மில் இருக்கின்றார் என்றால், நமக்குள் பிதாவாகிய தேவனும் இருக்கின்றார். 

இந்த ஒளி நமது சுய முயற்சியால் உண்டாகவில்லை. மாறாக தேவனால் உண்டாகியிருக்கின்றது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். இதனையே, "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.' ( 2 கொரிந்தியர் 4 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

சர்வலோகத்தையும் படைத்து ஆளும் தேவன் வெறும் மண்பாண்டங்களான நமக்குள் வந்து தங்கியிருப்பது ஆச்சரியமான காரியம்.  ஆனால் அப்படித் தங்கியிருக்க என்ன காரணம் என்பதையே, "இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக" என்று  இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது பிதாவின் மகிமையின் ஒளி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கின்றது. அதே ஒளி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வரவேண்டும் என்பதற்காக நமது இருதயத்தில் அவர் பிரகாசித்தார். 

ஏனெனில் இருள் என்பது பாவ அடிமைத்தனம்.  இந்தப் பாவ இருள் நம்மைவிட்டு அகலவேண்டும் என்பதற்காக கிறிஸ்துவின் ஒளி நம்முள் வந்துள்ளது.  கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் வரும்போது நாம் நீதியுள்ளவர்களாகின்றோம்; அநீதியைவிட்டு விலகுகின்றோம். கிறிஸ்துவின் ஒளியைப்பெற்றவர்கள் மற்ற துன்மார்க்கர்களிடமிருந்து விலகிவிடுகின்றனர். "............நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?" ( 2 கொரிந்தியர் 6 : 14, 15 ) என்று வாசிக்கின்றோம்.  இதனையே ஆதியில் ஒளியைப் படைத்தத் தேவனும்  கண்டார். "வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்." ( ஆதியாகமம் 1 : 4 ) என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் அன்பானவர்களே, இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இருளான மனிதர்களை பிரகாசிக்கச்  செய்வதுடன் தங்கள் துன்மார்க்கத்திலேயே தொடர்ந்து வாழும் இருளான மக்களிடமிருந்து நம்மைப் பிரிகின்றார். இதற்காகவே இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, நமது  இருதயங்களிலே பிரகாசித்தார். இந்த ஒளியை நாம் ஏற்றுக்கொள்ளும்போது நாமும் கிறிஸ்துவைப்போல பிரகாசமடைகின்றோம். 

கிறிஸ்துவின் ஒளி நம்மில் பிரகாசிக்கத் தடைசெய்யாமல் கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

No comments: