நல்லது செய்யுமுன் நல்லவனாயிரு

 'ஆதவன்' 💚நவம்பர் 06, 2024. 💚புதன்கிழமை              வேதாகமத் தியானம் - எண்:- 1,368

 
"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்." ( தீத்து 2 : 14 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்து பாடுபட்டு மரித்ததன் நோக்கத்தை  நினைவூட்டுகின்றார்.  

அதாவது, நாம் ஏற்கெனவே செய்த பாவங்கள் அக்கிரமங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்மை அவரது சொந்த மக்களாக மாற்றவேண்டும் என்பதே தேவனின் பிரதான நோக்கம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமேயே அவரது இவ்வுலக தந்தை யோசேப்புக்கு இது அறிவிக்கப்பட்டது. "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" ( மத்தேயு 1 : 21 )

இதனையே பவுல் அப்போஸ்தலர்  தனது சீடனான தீமோத்தேயுவுக்கும் கூறினார். "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது" ( 1 தீமோத்தேயு 1 : 15 ) என்று. 

இன்றைய தியான வசனம் மேலும் கூறுகின்றது, பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிப்பது மட்டுமல்ல,  "நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று. அதாவது நாம் அவர்மேல்கொண்ட பக்தியால் வைராக்கியத்துடன் நற்செயல்  செய்யவேண்டும். அதாவது, நாம் நல்லது செய்யவேண்டுமானால் முதலில் நாமே நல்லவர்களாக மாறவேண்டும். இப்படி மாற்றிடவே கிறிஸ்து உலகினில் வந்தார்.  

வெறுமனே நல்லது செய்வதால் ஒருவர் நல்லவராக முடியாது. காரணம் ஒருவன் துன்மார்க்கமாகச் சம்பாதித்தப் பணத்தைக்கொண்டு நல்ல செயல்களைச் செய்து தொடர்ந்து அதே துன்மார்க்கத்தில் விழுந்து கிடக்கலாம். துன்மார்க்கமாகச்  சம்பாதித்தப் பணத்தினால் நன்மைகள் செய்து மக்களது ஆதரவையும் அன்பையும் பெறலாம். "கொடை வள்ளல்" என்று பெயர் பெறலாம்; இப்படி இந்த உலகத்தையே ஒருவன் தனக்கு ஆதாயமாக்கிக்கொள்ளலாம். ஆனால், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

ஆம், பாவத்தில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு நல்லது செய்வதில் அர்த்தமில்லை. உலக மார்க்கங்கள்,  "நல்லது செய்து நல்லவனாய் இரு" என்று கூறுகின்றன. ஆனால் கிறிஸ்துவோ, "நல்லது செய்யுமுன் நீயே நல்லவனாய் இரு" என்கின்றார். 

இப்படி நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்டு நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதற்கு நம்மைத் தகுதிப்படுத்தவே கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார்.  ஆம் அன்பானவர்களே, வெறுமனே நல்லது செய்வதால் நம்மை நாமே நல்லவர்கள் என்று எண்ணி வாழ்ந்து ஏமாந்துபோகக்கூடாது. முதலில் நாம் மாறவேண்டும். இதனையே "நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கிய முள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. முதலில் கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு  நாம் சுத்திகரிக்கப் படவேண்டும்; பின்னர் நற்செயல்கள் செய்யவேண்டும். 

கிறிஸ்து உலகினில் வந்த நோக்கம் நம்மில் நிறைவேறிடத் தகுந்தவர்களாக வாழ்வோம். நமது மீறுதல்கள், பாவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம். நல்லவர்களாய் வாழ்ந்து நாம் நற்செயல்கள் செய்ய அவரே நமக்கு உதவிடுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                          

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...